நாட்டில் கொரோனாவின் கோரத் தாண்டவத்தினை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மக்கள் ஒரு புறம். மறுபுறம் நிரம்பி வழியும் மருத்துமனைகள். எந்த நேரமும் சுடுகாட்டில் புகைந்து கொண்டிருக்கும் உடல்கள். இப்படி கொரோனாவினால் சொல்லமுடியாத துயரினை சந்தித்து வருகின்றது இந்தியா.
கடந்த ஆண்டு முதல் கட்ட கொரோனா பரவலின்போது மக்கள் இந்தளவுக்கு பாதிப்புக்களை எதிர்கொள்ளவில்லை.ஆனால் தற்போது அதற்கும் சேர்த்து இழப்புகளை சந்தித்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா மும்மடங்கு வேகத்தில் எளிதில் பரவும் தன்மை கொண்டது என ஆராய்ச்சியாளார்கள் எச்சரித்துள்ளனர்.
இப்படி ஒவ்வொரு புறமும் கொரோனா குறித்து எச்சரிக்கும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், நகர்புறங்களில் இதன் தாக்கம் மிக அதிகம். நாட்டின் மிகப்பெரிய மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை என பல பகுதிகளிலும் கொரோனா தனது கோர முகத்தினை காட்டி வருகின்றது.
நகரங்களில் நிலவும் நெருக்கடி
இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக நகர்புறங்களில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையால் மக்கள் அல்லாடுவதை பார்க்க முடிகிறது. அதோடு ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்துகள் தேவை என பல நெருக்கடிகளை மெட்ரோ நகரங்கள் எதிர்கொண்டு வருகின்றன. இதுவே மக்களுக்கு ஒரு வித அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முடிந்தமட்டில் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
நகர்புற வேலையின்மை
இதற்கிடையில் பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய துறைகள் தவிர மற்ற துறைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் வேலையின்மை என்பது நகரங்களில் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் நகர்புற வேலையின்மை விகிதமானது 12% நெருங்கியுள்ளது. இது கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
தேசிய அளவிலான வேலையின்மையும் அதிகரிப்பு
லட்சக்கணக்கானோர் வேலையிழந்து தவித்து வரும் நிலையில், இது குறித்த ஆய்வில் கடந்த ஏப்ரல் 25வுடன் முடிவடைந்த வாரத்தில் 9.55%ல் இருந்தது. மே 9-வுடன் முடிவடைந்த வாரத்தில் 11.72% தொட்டுள்ளது என CMIE அறிக்கை காட்டுகின்றது. இதேபோல் தேசிய அளவிலான வேலையின்மை விகிதமானது மே9ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.67% ஆக அதிகரித்துள்ளது.
கிராமப்புறங்களிலும் அதிகரிப்பு
இதே காலககட்டத்தில் கிராமப்புற வேலையின்மை விகிதமானது 6.37%ல் இருந்து 7.29% ஆக அதிகரித்துள்ளது. நகர்புறத்தினை போலவே கிராமப்புறம், தேசிய அளவிலான வேலையின்மையும் அதிகம் என இந்த தரவு சுட்டிக் காட்டுகின்றது. குறிப்பாக நகர்புறங்களில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே இந்த வேலையின்மை விகிதமானது படிப்படியாக உயர்ந்து வருகின்றது.
நிபுணர்கள் எச்சரிக்கை
இதற்கிடையில் நிபுணர்கள், லாக்டவுன் நடவடிக்கையானது இன்னும் நீட்டிக்குமானால் நிலைமை இன்னும் மோசமடையும் என எச்சரித்துள்ளனர். இது வேலை வாய்ப்பு சந்தையினை மிக மோசமாக்கும். அதோடு பொருளாதார வளர்ச்சியினையும் கட்டுப்படுத்தும் என எச்சரித்துள்ளனர். நடப்பு ஆண்டில் போடப்பட்டுள்ள லாக்டவுன் கடந்த ஆண்டினை போல் இல்லை. ஆனால் கொரோனா பரவல் என்பது கடந்த ஆண்டினை காட்டிலும், இந்த ஆண்டு மோசமாக உள்ளது.
பொருளாதாரம் சரியும்
இது ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதனால் பல ஆய்வு நிறுவனங்களும் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தினை குறைத்து வருகின்றன. ஆக இந்த பெருந்தொற்றினை எந்தளவுக்கு விரைவில் தடுக்கிறோமோ? அந்தளவுக்கு விரைவில் பொருளாதார சரிவு என்பது தடுக்கப்படும். அந்தளவுக்கு விரைவில் மீண்டு வரும் எனவும் எச்சரித்துள்ளனர்.
ஜிடிபி மதிப்பீடு திருத்தம்
மூடிஸ் நிறுவனம் 2022ம் நிதியாண்டிற்கான ஜிடிபி விகிதத்தினை 13.7%ல் இருந்து. 9.3% ஆக குறைத்துள்ளது. இதே நோமுரா 12.6%ல் இருந்து 10.8% ஆகவும், ஜேபி மார்கன் 13%ல் இருந்து 11% ஆகவும், யுபிஎஸ் 11.5%ல் இருந்து 10% ஆகவும் குறைத்துள்ளன.
கடந்த ஆண்டு நிலவரம் என்ன?
கடந்த ஆண்டில் நாடு தழுவிய லாக்டவுனுக்கு மத்தியில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கியது. ஆனால் நடப்பு ஆண்டில் நாடு தழுவிய லாக்டவுன் இல்லை. ஆனால் தற்போதே வேலையின்மை விகிதம் 12% நெருங்கியுள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் தேசிய வேலையின்மை விகிதமானது 24% ஆக இருந்தது. இதே காலகட்டத்தில் நகர்புற வேலையின்மை விகிதம் 27.83% ஆக இருந்தது என CMIE தரவுகள் காட்டுகின்றன.
பணியிழப்பு அதிகரிப்பு
பொருளாதார வளர்ச்சியில் வேலைவாய்ப்பு சந்தைக்கும் ஒரு பங்கு உண்டு. தற்போது நாடு தழுவிய லாக்டவுன் இல்லையென்றாலும், அரை தேசிய லாக்டவுனுக்கு இது சமமானதே. இது சாதாரண மற்றும் தற்காலிக ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், கிக் தொழிலாளர்கள் பணியிழப்புக்கு வழி வகுக்கும். ஏற்கனவே நகர்புறம், தேசிய வேலையின்மை விகிதம் என என பலவும் அதிகரித்துள்ளன.
கிராமப்புறங்களிலும் பாதிப்பு
இதன் எதிரொலியைத் தான் நகர்புற வேலையின்மை விகிதத்தில் பார்க்கின்றோம். இதனால் கிராமப்புறத்தில் வளர்ச்சி நன்றாக இருக்கின்றது என்று அர்த்தமல்ல. அங்கும் வருமான இழப்பு தீவிரமடைந்து வருகின்றது. உற்பத்தி திறன் குறைந்து வருகின்றது. நகர்புறங்களில் இருக்கும் பெரும்பாலனோர் கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்களே. ஆக இதன் தாக்கம் கிராமப்புறங்களிலும் இருக்கும்.
நகர்புறங்களை விட்டு காலி செய்யும் மக்கள்
ஏற்கனவே பல ஆயிரம் மக்கள் நகரத்தினை விட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். பலர் வேலையினை இழந்து வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படும் நிலைக்கு வந்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டினை போல மோசமான நிலையை சந்திக்க கூடாது என்பதற்காக சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். மொத்தத்தில் கொரோனாவினால் தொடரும் இந்த சோகம் எப்போது தான் மாறுமோ? முடிந்தமட்டில் பேஸ் மாஸ்க், சமூக இடைவெளி என நம்மால் முடிந்த மட்டில் விலகி இருப்பதே நாம் சமூகத்திற்கு செய்யும் மிகப்பெரிய சேவை.