கொரோனா வைரஸால் ஒரு பக்கம் மனிதர்கள் கொத்து கொத்தாக மரணித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.
மறு பக்கம், மனிதர்களின் அடிப்படை வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தையும் கொன்று கொண்டிருக்கிறது இந்த கொடூர கொரோனா வைரஸ்.
இந்த சிக்கலில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தை பாதுகாக்க, மத்திய அரசு 1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு உதவித் திட்டங்களை அறிவித்தது. ஆர்பிஐ வட்டி விகிதங்களை பெரிய அளவில் குறைத்தது.
உர்ஜித் படேல்
கடந்த டிசம்பர் 2018-ல் சொந்த காரணங்களுக்காக, மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகினார். ரகுராம் ராஜனுக்கு அடுத்து, ஆர்பிஐ ஆளுநராக வந்து, மிக சவாலான காரியங்களை எதிர் கொண்டதில் உர்ஜித் படேலுக்கு ஒரு மிகப் பெரிய பங்கு உண்டு. அது வாரா கடனை வசூலிப்பதாகட்டும், பிசிஏ திட்டமாகட்டும், வட்டி விகிதங்களில் மாற்றமாகட்டும், எல்லாவற்றிலும் இவர் பங்கு குறிப்பிடத்தக்கது.
பாராட்டு
தற்போது கொரோனா வைரஸுக்காக மத்திய அரசு எடுத்து இருக்கும் நடவடிக்கைகள் சரி தான். ஆனால் அதே நேரத்தில் இந்தியாவின் மேக்ரோ பொருளாதாரத்தின் ஸ்திரத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் கொரோனா வைரஸ் லாக் டவுன் காலம் முடிந்த பின் இரண்டாவது சுற்று நிதி நெருக்கடிகளைத் தவிர்க்க முடியும் எனச் சொல்லி இருக்கிறார் உர்ஜித் படேல்.
பாக்கி வையுங்கள்
கொரோனா வைரஸ் எப்போது ஒழியும், எப்போது முழுமையாக கட்டுப்படுத்தப்படும் எனத் தெரியவில்லை. பல பக்கங்களில் இருந்தும், நமக்கு அழுத்தங்களும் சவால்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. எனவே, எல்லா விதமான கொள்கைகளையும் (உதவிக்காக எடுக்கப்படும் கொள்கை முடிவுகள்) ஒரே நேரத்தில் அறிவிக்காமல் கொஞ்சம் மிச்சம் வைத்துக் கொள்வது நல்லது எனவும் அறிவுறுத்தி இருக்கிறார் உர்ஜித் படேல்.
பரிசோதனைகள்
மக்களுக்கு உதவி செய்வது எல்லாம் ஓகே தான், ஆனால் இந்தியாவில் நிறைய கொரோனா வைரஸ் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். மத்திய அரசு, பரிசோதனைகளுக்கு நிறைய பணத்தை ஒதுக்கி டெஸ்டிங் ரேட்டை அதிகரிக்க வேண்டும். இதனால் மீண்டும் ஒரு முறை இந்தியாவில் லாக் டவுன் ஆகாமல் தடுக்கலாம் எனவும் அரசுக்கு ஐடியா கொடுத்து இருக்கிறார்.
குறைவு தான்
இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகைக்கு, நடத்தப்படும் கொரோனா வைரஸ் பரிசோதனை எண்ணிக்கை மிகவும் குறைவு. அரசு தான் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான முழு செலவையும் ஏற்க வேண்டும் எனவும் பளிச் ஐடியா கொடுத்து இருக்கிறார் முன்னாள் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல். அரசு கேட்குமா?