அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு சலுகைகளை அந்நாட்டு மக்களுக்கு அளித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் மாணவர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் கல்வி கடன் ரத்து குறித்த அறிவிப்பை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரின் கல்வி கடன் ரத்து அறிவிப்பு அந்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கல்விக்கடன்
அமெரிக்காவில் கடந்த பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கல்விக்கடன் ரத்து குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பல ஆண்டுகளாக அமெரிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தற்போது ஜோ பைடன் அரசு இது குறித்து பரிசீலனை செய்து அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கல்விக்கடன் ரத்து
அமெரிக்காவிலுள்ள மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்வதாக அதிபர் ஜோ பைடன் நேற்று அறிவித்தார். மாணவர்களின் கடன் சுமையை குறைக்கும் நடவடிக்கை இது என்றும் ஏற்கனவே தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் காலம் இது என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
$10,000 தள்ளுபடி
ஒரு லட்சத்து 25 ஆயிரம் டாலருக்கு குறைவாக சம்பாதிக்கும் குடும்பத்தில் உள்ள மாணவர்கள் கல்வி கடன் வாங்கியிருந்தால் அந்த கல்விக்கடனில் 10 ஆயிரம் டாலர்கள் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதேபோல் ஒரு வருடத்திற்கு தனி நபரின் வருமானம் ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தால் மற்றும் ஒரு குடும்பத்தின் வருமானம் 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்களுக்கும் குறைவாக இருந்தால் அந்த குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
43 மில்லியன் மாணவர்கள்
அமெரிக்காவில் 43 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் கல்விக் கடன் பெற்றுள்ளனர் என்றும் சராசரியாக ஒவ்வொரு மாணவரும் 35 ஆயிரம் டாலர் வரை கல்விக்கடன் பெற்றுள்ளார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே 10 ஆயிரம் டாலர் வரை கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பின் காரணமாக மூன்றில் ஒரு பங்கு கல்விக்கடன் வாங்கிய மாணவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் சுமார் 20 மில்லியன் மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வெள்ளை மாளிகை மதிப்பீடு செய்துள்ளது.
கருப்பின மாணவர்கள்
அமெரிக்காவைப் பொருத்தவரை வெள்ளையின மாணவர்களைவிட கருப்பின மாணவர்கள் சராசரியாக 25 ஆயிரம் டாலர் அதிகமாக கல்விக்கடன் பெற்றுள்ளனர் என்று புள்ளிவிவரம் ஒன்று தெரிவித்துள்ளது. எனவே இந்த கடன் தள்ளுபடி அறிவிப்பு கருப்பின மாணவர்களுக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் வாக்குறுதி
2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் கல்விக்கடன் குறித்த வாக்குறுதி அளித்தார் என்பதும் அந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் ஜோ பைடனின் இந்த கல்விக்கடன் ரத்து நடவடிக்கை நேர்மறை தாக்கங்களை நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ளது.
சிறுபான்மை சமூகங்கள்
குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் உள்ள குடும்பங்கள் மிகப்பெரிய அளவில் பயன்பெறுவார்கள் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறுபான்மை மற்றும் வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களின் பொருளாதாரத்துக்கு உதவும் வகையிலான அறிவிப்பு இது என்றும் பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.