அமெரிக்கா என்கிற வல்லரசு நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்பே சில தினங்களுக்கு முன், கொரோனா வைரஸால், அமெரிக்கா கூட பாதிக்கப் பட வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார்.
இது நாள் வரை உலக அளவில் பெரிதாக பேசப்பட்டுக் கொண்டிருந்த, அமெரிக்க சீன வர்த்தகப் போர், ஈரான் அமெரிக்கா பிரச்சனை எல்லாம் கூட, கொரோனா வைரஸ் வந்த பின் காணாமல் போய்விட்டது.
இந்த நேரத்தில் அமெரிக்கா இன்னொரு பெரிய முடிவை முன் எச்சரிக்கையாகச் செய்து இருக்கிறது. அப்படி என்ன முடிவு எடுத்து இருக்கிறது அமெரிக்கா..?
கொரோனா பரவல்
அமெரிக்கா எப்படி ஒரு விதமான வல்லரசோ அதே போல, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பலதும் ஒரு விதமான வல்லரசுகள் தான். ஆனால் இப்போது அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதற்கு ஐரோப்பிய பயணிகளே காரணம் என ஒட்டு மொத்த ஐரோப்பிய ஒன்றியத்தையும் சாடி இருக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
விரைந்த நடவடிக்கை இல்லை
மேலும் இந்த கொரோனா வைரஸ் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் "ஐரோப்பிய யூனியன், இந்த கொரோனா வைரஸ் தொடர்பாக போதுமான அளவுக்கு விரைந்து நடவடிக்கைகளை எடுக்கவில்லை" எனவும் சாடி இருக்கிறார். இப்படி ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டு இருந்தால் எப்படி..? என இன்னொரு அதிரடி நடவடிக்கையும் எடுத்து இருக்கிறது அமெரிக்கா.
பயணம் ரத்து
மார்ச் 11, 2020 புதன் கிழமை அன்று "வரும் மார்ச் 13, 2020, வெள்ளிக் கிழமை முதல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையிலான பயணங்கள் அனைத்தையும் அடுத்த 30 நாட்களுக்கு ரத்து செய்கிறேன்" எனச் சொல்லி இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
இங்கிலாந்து
இந்த பயண ரத்து, இங்கிலாந்து நாட்டுக்கு பொருந்தாது எனவும் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள். எனவே இங்கிலாந்து நாட்டில் இருந்து மக்கள் அமெரிக்காவுக்கோ அல்லது அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கோ மக்கள் வழக்கம் போல தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்.
கொரோனா
ஒட்டு மொத்த உலகத்தையும் வளைத்து வளைத்து பாதித்துக் கொண்டு இருக்கும் இந்த கொரோனா வைரஸ், அமெரிக்காவில் சுமார் 1,329 பேரை பாதித்து இருக்கிறது. அதில் 38 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். மேற்கொண்ட கொரோனா பரவாமல் இருக்க, அமெரிக்க அரசு, மேலே சொன்ன பயணங்களை ரத்து செய்து இருக்கிறது. எப்போது முடியும் இந்த கொரோனா சோகம்?