இந்தியாவில் டெக்ஸ்டைல் நகரமாக விளங்கும் திருப்பூர் கடந்த ஒரு வருடமாக டெக்ஸ்டைல் உற்பத்தி பொருட்கள் விலை தாறுமாறாக அதிகரித்த காரணத்தால் உற்பத்தி மற்றும் விற்பனை அளவுகளில் பாதிக்கப்பட்டது.
இதேவேளையில் இந்திய தயாரிப்புகளின் விலையைக் காட்டிலும் வியட்நாம், தாய்லாந்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தயாரிப்புகளின் விலை மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் போட்டி கடுமையாகியது.
இதைத் தொடர்ந்து தற்போது உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட நிலையில் திருப்பூர் டெக்ஸ்டைல் ஏற்றுமதி அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
டெக்ஸ்டைல் ஏற்றுமதி
இந்தியாவின் மொத்த டெக்ஸ்டைல் ஏற்றுமதி ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சுமார் 17 சதவீதம் சரிந்து 10.05 பில்லியன் டாலர் அளவில் சரிந்துள்ளது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12.11 பில்லியன் டாலராக இருந்தது. இதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த டெக்ஸ்டைல் மற்றும் அப்பரல் பிரிவு ஏற்றுமதி 6.3 சதவீதம் சரிந்து 18.22 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது.
திருப்பூர்
இந்த நிலையைச் சமாளிக்கத் திருப்பூர் டெக்ஸ்டைல் ஏற்றுமதியாளர்கள் முக்கியமான முடிவை எடுத்துள்ளனர். பொருளாதார மந்தநிலை காரணமாக அமெரிக்காவிலும், ரஷ்ய - உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பாவிலும் புதிய ஆடைகளுக்கான டிமாண்ட் குறைந்த காரணத்தால் அமெரிக்க, ஐரோப்பியச் சந்தையில் இருக்கும் டிமாண்ட் பெரிய அளவில் குறைந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா
இந்த நிலை சரியாகக் குறைந்தது ஒரு வருடமாகும் எனக் கணிக்கப்படும் நிலையில் மாற்றுத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது திருப்பூர். இந்தியாவின் முக்கிய டெக்ஸ்டைல் ஏற்றுமதி நகரமாக இருக்கும் திருப்பூர் டெக்ஸ்டைல் நிறுவனங்களும், ஏற்றுமதியாளர்களும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விட்ட வர்த்தகத்தைத் தற்போது ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
சரிவு
அக்டோபர் மாதத்தில் மட்டும் திருப்பூரின் ஏற்றுமதி அளவு சுமார் 21 சதவீதம் சரிந்துள்ளது, இதே நிலை தொடர்ந்தால் வருடாந்திர விற்பனை, வருமான அளவீட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வர்த்தக டார்கெட்-ஐ மாற்றியுள்ளது திருப்பூர்.
ஏற்றுமதி ஆதிக்கம்
கடந்த நிதியாண்டில் திருப்பூர் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதம் அமெரிக்காவிற்கும், 35 சதவீதம் ஐரோப்பாவிற்கும் சென்ற நிலையில் தற்போது இரு சந்தைகளும் முக்கியக் காரணத்தால் பெரிய அளவிலான வர்த்தக இழப்பை கொடுத்துள்ளது. இதைச் சமாளிக்கவே தற்போது ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, ஜப்பான் சந்தைகளில் புதிய வர்த்தகத்தைப் பெற முயற்சி செய்து வருகிறது.
ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா
ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா நாடுகள் உடன் இந்தியாவின் வர்த்தகமும், வாய்ப்புகளும் சிறப்பாக இருக்கும் நிலையில் இந்த முயற்சி கட்டாயம் லாபம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர் டெக்ஸ்டைல் நிறுவனங்களும், ஏற்றுமதியாளர்களும் ஏதுவாகத் தற்போது நூல் விலை சுமார் 40 சதவீதம் வரையில் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மக்கள்
திருப்பூரில் பல ஆயிரம் டெக்ஸ்டைல் தொழிற்சாலைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்கு வாடிக்கையாளர்களுக்கு தயாரித்து வருகிறது. திருப்பூரில் டெக்ஸ்டைல் தொழிற்சாலைகளில் பல லட்சம் பேர் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த ஏற்றுமதியில் சரிவின் மூலம் ஒட்டுமொத்த திருப்பூர்-ம் பாதிக்கப்பட்டு உள்ளது.