உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்கா ஒரு பக்கம் கொரோனா உடனும், மறுபக்கம் அதிபர் தேர்தல் என இக்காட்டான சூழ்நிலையில் போராடி வருகிறது. இந்த வேளையில் அமெரிக்காவின் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மிகப்பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களின் நலனை மீட்டு எடுக்கவும், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தைச் சந்தை மீண்டும் வளர்ச்சி பாதைக்குக் கொண்டு வரவும், மீண்டும் உலகிலேயே விரும்பத்தக்க முதலீட்டு நாடாக மாற வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது அமெரிக்க அரசு.
ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது பட்ஜெட்டில் சுமார் 3.3 டிரில்லியன் டாலர் அளவிலான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பெடரல் பட்ஜெட்
கொரோனா மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளை மீட்டு எடுக்கும் திட்டத்திற்கான பட்ஜெட் திட்டத்தில் அமெரிக்கா தற்போது 3.3 டிரில்லியன் டாலர் அளவிலான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என அமெரிக்காவின் காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் அறிவித்துள்ளது.
இவ்வளவு பெரிய தொகை அமெரிக்கப் பட்ஜெட் திட்டத்தில் நிதி நெருக்கடியாகக் குவிந்துள்ளது இதுவே முதல் முறையாகக் கருதப்படுகிறது.
நிதி நெருக்கடி
அமெரிக்கப் பட்ஜெட் திட்டத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி என்பது, அடுத்த நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விடவும் அதிகமாகத் தேவைப்படும் நிதி தேவை தான் இந்த நிதி நெருக்கடி.
பொதுவாக இதுபோன்ற நிதி நெருக்கடி ஏற்படும் போது, அரசு செய்யும் செலவுகளையும், தேவையற்ற திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை தற்காலிகமாக நிறுத்துவது அல்லது குறைப்பது, அல்லது வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து கடன் வாங்குவதன் மூலம் சரி செய்யும். ஆனால் இந்த 3.3 டிரில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகையை அமெரிக்கா எப்படி ஈடுசெய்யப்போகிறது என்பது தெரியவில்லை.
தொடர் உயர்வு
2019ஆம் ஆண்டு அமெரிக்கப் பட்ஜெட் அறிக்கையில் 1.1 டிரில்லியன் டாலர் அளவிலான நிதி நெருக்கடி மட்டுமே இருந்த நிலையில், இந்தக் கொரோனா தாக்கத்தின் எதிரொலியாகத் தற்போது அமெரிக்காவின் நிதி நெருக்கடி கிட்டதட்ட 3 மடங்கு உயர்ந்துள்ளது.
மேலும் அமெரிக்காவில் 2008-09 நிதியாண்டில் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதாரப் பிரச்சனையின் மூலம் ஏற்பட்ட நிதி நெருக்கடியை விடவும் 2மடங்கு அதிகமான நெருக்கடி தற்போது அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது.
திட்டம்
அடுத்த நிதியாண்டில் அமெரிக்கா சுமார் 6.6 டிரில்லியன் டாலர் அளவிலான தொகையை அரசு புழக்கத்தில் விடத் திட்டமிட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டை விடவும் சுமார் 2 டிரில்லியன் டாலர் அதிகமாகும். இந்தக் கூடுதல் நிதி புழக்கம் அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் மேம்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வருமான பாதிப்பு
கொரோனா பாதிப்பின் எதிரொலியாக அமெரிக்காவில் வரி வருமானம் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாகத் தனிநபர் வரி வசூல் மூலம் கிடைக்கும் வருமானம் 11 சதவீதமும், கார்பரேட் வரி வசூல் மூலம் கிடைக்கும் வருமான அளவீடு 34 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
நிதி உதவி
இதோடு இந்தக் கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்த பல கோடி அமெரிக்கர்களுக்கு, அரசு நிதியுதவி அளிக்கும் விதமாகச் சுமார் 1,200 டாலர் கொடுத்துள்ளது.
வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் நிதியுதவி ஆகியவற்றின் மூலம் அமெரிக்கா பெரிய அளவிலான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது.