ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் இன்னும் முடியாத நிலையில் பல்வேறு தடைகள், அறிவிப்புகள் மூலம் ரஷ்யாவின் கஜானா-வை பதம் பார்க்கப்பட்டு வரும் நிலையில் உக்ரைன் நாளுக்கு நாள் வலிமையாகிக் கொண்டு இருக்கிறது.
ரஷ்ய படைகள் சில மாதங்களுக்குக் கைப்பற்றிய சில இடங்களை உக்ரைன் படைகள் திரும்பப் பெற்று உள்ளது. இந்த நிலையில் உலக நாடுகள் தொடர்ந்து உக்ரைன் நாட்டிற்குப் பணமாகவும், ஆயுதமாகவும் உதவி செய்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அரசு புதிய மற்றும் பெரிய நிதியுதவியை அறிவித்துள்ளது.
உக்ரைன்
உக்ரைன் நாட்டிற்குச் சுமார் 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ உதவியை அமெரிக்கா அரசு அனுப்ப உள்ளது. இந்த மிகப்பெரிய ராணுவ உதவி திட்டத்தில் முதன்முறையாக ஒரு பேட்ரியாட் ஏவுகணை பேட்டரி மற்றும் அவர்களின் போர் விமானங்களுக்கான துல்லியமான வழிகாட்டும் குண்டுகள் ஆகியவை அளிக்க உள்ளது அமெரிக்கா.
ரஷ்யா
ரஷ்யா-வுக்கு நேரடியாக நிதி மற்றும் ஆயுதங்கள் மூலம் உதவி செய்ய யாரும் இல்லாத நிலையில், உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன், ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியன் ஆகியவை நேரடியாகவும், அதிகமாகவும் உதவி செய்து வருகிறது.
அமெரிக்கா
அமெரிக்காவின் 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ உதவி திட்டம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் செவ்வாயன்று தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் உக்ரேன் அதிபர் Volodymyr Zelenskyy வாஷிங்டனுக்கு அழைக்கத் தயாராகி வருகிறது.
1.8 பில்லியன் டாலர்
அமெரிக்காவின் 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ உதவி திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால், இந்த உதவிகள் குறித்த முழுமையான விபரங்கள் கிடைக்கவில்லை.
ரஷ்ய ஏவுகணை தாக்குதல்
ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது, குறிப்பாக ரஷ்யா சமீபத்தில் உக்ரைன் நாட்டின் முக்கியமான பகுதிகளில் சரமாரியான தாக்குதல் நடத்தியதில் உக்ரைன் Volodymyr Zelenskyy சற்று ஆடிப்போய் உள்ளார். இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் வான் பாதுகாப்பை வலுப்படுத்த அமெரிக்கா அதிநவீன ஆயுதங்களைத் தற்போது வழங்க தயாராகியுள்ளது.
புதிய உதவிகள்
அமெரிக்காவின் இந்தப் புதிய உதவிகள் குறித்துப் புதன்கிழமை (இன்று) அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில், பென்டகன் பங்குகளில் இருந்து சுமார் 1 பில்லியன் டாலர் தொகை ஆயுதங்களும், உக்ரைன் பாதுகாப்பு உதவி முயற்சி திட்டத்தின் கீழ் மூலம் மற்றொரு 800 மில்லியன் டாலர் நிதியுதவியும் அடங்கும். இதில் ஆயுதங்கள், வெடிமருந்துகள், பயிற்சி மற்றும் பிற உதவிகளுக்கு நிதியளிக்கும் எனத் தெரிகிறது.
60 டாலர் விலை
சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 60 டாலர் என்ற விலையை நிர்ணயம் செய்துள்ளது.
கச்சா எண்ணெய்
அதாவது ரஷ்யா இனி எந்த நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்றாலும் 60 டாலர் விலையில் தான் விற்க வேண்டும் என விலையை நிர்ணயம் செய்யப்பட்டு இந்த நாடுகள் அணைந்து ஒப்புக்கொண்டது.
மறுப்பு
இந்த நிலையில் ரஷ்ய அரசு அதிகாரிகள் அமெரிக்கா தலைமையில் உக்ரைன் ஆதரவு நாடுகள் நிர்ணயம் செய்துள்ள விலையைக் கட்டாயம் ஏற்க முடியாது என்றும், இந்த விலையை ஏற்கும் நாடுகளுக்கு உடனடியாகக் கச்சா எண்ணெய் சப்ளை கட் செய்யப்படும் என்ற எச்சரிக்கையும் வெளியிட்டு உள்ளது.
நிதி ஆதாரம்
ரஷ்யா-வின் நிதி ஆதாரத்தில் கச்சா எண்ணெய் மிகப்பெரிய பங்கு வகிக்கும் நிலையில் கச்சா எண்ணெய்க்கு செக் வைத்துள்ளது மேற்கத்திய நாடுகள், இதைத் தவிர உக்ரைன் நாட்டிற்குப் பில்லியன் டாலர் கணக்கில் பணம் ஆயுதங்களை அளித்து வருகிறது