கடந்த ஆண்டு, காபி டே நிறுவனத்தின் தலைவர் வி ஜி சித்தார்தா பல்வேறு வியாபார அழுத்தங்களால் தற்கொலை செய்து கொண்டார்.
அந்த துயர சம்பவத்தை தொடர்ந்து காபி டே எண்டர்பிரைசஸ் நிறுவன இயக்குநர் குழு, முன்னாள் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி அசோக் குமார் மல்ஹோத்ராவை அழைத்து, சித்தார்தா எழுதிய கடிதத்தை விசாரிக்கச் சொன்னது.
இந்த விசாரணை அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை பொது வெளியில் கொண்டு வந்தார்கள். அதில் தான் இந்த 2,700 கோடி ரூபாய் பற்றிய சில விவரங்களும் வெளியாகி இருக்கின்றன.
கடன் பிரச்சனை
அந்த விசாரணை அறிக்கையில், காபி டேவின் பிசினஸ் மாடல் கடுமையான லிக்விடிட்டி பிரச்சனைகளை உருவாக்கி இருக்கிறது. அதோடு உலக மேக்ரோ பொருளாதார காரணிகளும் சேர்ந்து கொண்டு, வி ஜிசித்தார்தாவை மேலும் கடன் வாங்க முடியாத சூழலுக்குத் தள்ளி இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறது அறிக்கை.
சித்தார்தா கடிதம்
காபி டே தலைவர் வி ஜி சித்தார்தா, தற்கொலை செய்து கொள்வதற்கு முன், ஒரு கடிதத்தை எழுதி இருந்தார். அதில் தான் ஒரு தொழில்முனைவோராக தோற்றுவிட்டதாகச் சொல்லி இருந்தார். மேலும் பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்கள் மற்றும் அரசின் வருமான வரித் துறையினர்கள் அழுத்தம் கொடுத்து துன்புறுத்தியதாகச் சொல்லி இருந்தார்.
ஆதாரம் இல்லை
முன்னாள் சிபிஐ அதிகாரியின் விசாரணை அறிக்கை, பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்கள், பணத்தை திருப்பிச் செலுத்த நினைவுபடுத்தி இருக்கலாம் என ஆமோதித்து இருக்கிறது. அது வழக்கமான ஒன்றாகத் தான் இருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதே போல வருமான வரித் துறையினர், சித்தார்தாவை அழுத்தம் கொடுத்து துன்புறுத்தியதற்கான டாக்குமெண்டரி ஆதாரங்கள் இல்லை எனவும் சொல்லி இருக்கிறது.
2700 கோடி ரூபாய்
சித்தார்தாவுக்குச் சொந்தமான Mysore Amalgamated Coffee Estates (MACEL) என்கிற கம்பெனி, காபி டே நிறுவனத்துக்கு 2,700 கோடி ரூபாய் பணம் தர வேண்டி இருக்கிறதாம். MACEL கம்பெனிக்கு கொடுக்கப்பட்ட பணத்தின் பெரும் பகுதியைக் கொண்டு, பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளை மீண்டும் வாங்கிக் கொள்ளவும், கடனை திருப்பிச் செலுத்தவும், கடனுக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்தவும் பயன்படுத்தி இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்கிறது விசாரணை அறிக்கை. ஆனால் சரியாக எந்த தொகை எதற்கு செலவழித்து இருக்கிறார்கள் என கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறது அறிக்கை.
உயர் அதிகாரிகளுக்கு தெரியாது
சித்தார்தா தன் கடிதத்தில், காபி டே கம்பெனியில் இருந்து MACEL கம்பெனிக்கு பணம் பரிமாற்றம் செய்த விஷயம், காபி டே எண்டர்பிரைசஸ் கம்பெனி நிர்வாகத்தினருக்கு முழுமையாகத் தெரியாது எனக் குறிப்பிட்டு இருக்கிறாராம். ஆக அந்த 2,700 கோடி ரூபாய் பரிவர்த்தனை தொடர்பாக யாரை அழைத்து விசாரிக்க முடியாது. சுருக்கமாக, சித்தார்தாவால், ஒரு லாபகரமான பிசினஸ் மாடலை உருவாக்க முடியவில்லை என்கிறது அறிக்கை.
அதிக வட்டி
அதோடு காபி டே வியாபாரத்தை, வி ஜி சித்தார்தா நிறைய, அதிக வட்டிக்கு கடன் வாங்கி நடத்தி இருக்கிறார். அதோடு பிரைவேட் ஈக்விட்டி முதலீடுகளிலும் கட்டமைத்து இருக்கிறார் என்கிறது ஓய்வு பெற்ற முன்னாள் சிபிஐ அதிகாரி அசோக் குமார் மல்ஹோத்ராவின் விசாரணை அறிக்கை. எப்போது காபி டே இந்த கடன் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருமோ அது கம்பெனிக்கு தான் வெளிச்சம்.


Click it and Unblock the Notifications