கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திவாலானதாக அறிவிக்கப்பட்ட காரைக்கால் துறைமுகத்தை ஏலம் எடுக்க அதானி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஒரு காலத்தில் நல்ல லாபத்துடன் செயல்பட்டு கொண்டிருந்த காரைக்கால் துறைமுகம் திடீரென கடன் சிக்கலில் தவித்ததால் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் காரைக்கால் துறைமுகத்தை ஏலம் எடுக்க அதானி நிறுவனம் தீவிர முயற்சி எடுத்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது வேதாந்தா நிறுவனமும் போட்டியில் களமிறங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி வேறு சில நிறுவனங்களும் இந்த துறைமுகத்தை ஏலம் எடுக்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
வேதாந்தா மற்றும் அதானி
வேதாந்தா மற்றும் அதானி நிறுவனங்கள் மட்டுமின்றி ஜேஎஸ்டபிள்யூ உள்கட்டமைப்பு, ஜிண்டால் பவர், ஆர்கேஜி ஃபண்ட் மற்றும் சாகாசியஸ் கேபிடல் ஆகிய நிறுவனங்கள் காரைக்கால் துறைமுகத்தின் ஏலத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதில் இல்லை
ஆனால் காரைக்கால் துறைமுகத்தை ஏலம் எடுப்பது குறித்த கேள்விக்கு அதானி மற்றும் வேதாந்தா நிறுவனத்தின் அதிகாரிகள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. அதேபோன்று ஜேஎஸ்டபிள்யூ செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். மேலும் ஜிண்டால் பவர் மற்றும் ஆர்கேஜி ஃபண்ட் உள்பட ஒருசில நிறுவனங்களும் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டிய நிலையில் இந்த நிறுவனங்களும் இதுகுறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.
காரைக்கால் துறைமுகம்
தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய துறைமுகமாக கடந்த 2009ஆம் ஆண்டு காரைக்கால் துறைமுகம் தொடங்கப்பட்டது. புதுச்சேரியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த துறைமுகத்தில் சர்க்கரை, கோதுமை, சிமெண்ட், உரம், தேக்கு மரங்கள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டது.
5 கப்பல்கள் நிறுத்தலாம்
5 கப்பல்கள் நிறுத்தும் அளவுக்கு வசதி உள்ள காரைக்கால் துறைமுகத்தை நம்பி ஏராளமான வணிகர்கள் இருந்ததாகவும், நேரடியாக மற்றும் மறைமுகமாக நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப்பட்டது.
ரூ.1000 கோடி வருமானம்
காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதன் மூலம் 500 கோடிக்கு மேல் ஒருசில ஆண்டுகளுக்கு வருவாய் கிடைத்ததாகவும், காரைக்கால் துறைமுகத்தின் மூலம் மத்திய அரசுக்கு ஒட்டுமொத்தமாக ரூபாய் 1000 கோடி வருமானம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
ரூ.2059 கோடி கடன்
இந்த நிலையில் காரைக்கால் துறைமுகம் ஓம்காரா ஏஆர்சி என்ற நிறுவனத்திடம் ரூ.2059 கோடி ரூபாய் கடனாக பெற்றதாகவும், இந்த கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 2,400 கோடி ரூபாயை திருப்பி செலுத்த வேண்டிய நிலையில் காரைக்கால் துறைமுகத்தால் அந்த பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை என தெரிகிறது.
திவால்
இதனை அடுத்து இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது காரைக்கால் துறைமுகத்துக்கு எதிராக தீர்ப்புகள் வந்தது. இந்த நிலையில் காரைக்கால் துறைமுகம் திவால் ஆனதாக தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயம் அறிவித்தது. இந்த நிலையில் இந்த துறைமுகத்தை ஏலம் எடுக்க அதானி, வேதாந்தா உள்பட பல முன்னணி நிறுவனங்கள் தற்போது தீவிர முயற்சி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.