நான் வழக்கமாக விமானப் பயணங்களில் ஒரு குழந்தையைப் போலத் தூங்குவேன், ஆனால் இந்த முறை பயணத்தில், என் கண்கள் ஒரு நிமிடம் கூடத் தூங்கவில்லை என அனில் அகர்வால் தனது லிங்கிடுஇன் கணக்கில் பதிவிட்டு உள்ளார்.
அனில் அகர்வால் நான் மிகவும் பதட்டமாகவும் அதே நேரத்தில் உற்சாகமாகவும் இருந்தேன், என் கனவு இறுதியாக நனவாகும் நாள் இன்று.
அனில் அகர்வால்
இந்தியாவில் முதல் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலையை அமைப்பது குறித்து ஏற்கனவே தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் அதிகாரப்பூர்வமாக முதலீட்டின் அளவையும், தொழிற்சாலை அமைக்கும் இடத்தையும் இன்று அறிவித்துள்ளார்.
10 ஆண்டுக் கனவு
நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம், இறுதியாக இந்தியாவின் சொந்த சிலிக்கான் வேலிக்கு ஒரு படி நெருக்கமாக இருக்கிறோம் என்று ரூ.1.54 லட்சம் கோடி முதலீட்டில் உருவாகும் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கும் திட்டம் குறித்துப் பதிவிட்டு உள்ளார் அனில் அகர்வால்.
ரூ. 1.54 லட்சம் கோடி முதலீடு
இந்தியாவில் 1.54 லட்சம் கோடி மதிப்பிலான உயர் தொழில்நுட்ப துறையில் முதலீடு செய்ய உள்ளோம் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்! வேதாந்தா குழுமம் குஜராத்தில் நாட்டின் முதல் செமிகண்டக்டர் சிப் மற்றும் டிஸ்ப்ளே கிளாஸ் ஆலையை அமைக்கவுள்ளோம் என அனில் அகர்வால் தெரிவித்தார்.
டிஜிட்டல் பொருளாதாரத்தின் "எண்ணெய்"
செமிகண்டக்டர்கள் என்றால் என்ன என்பது உங்களில் பலருக்கு ஏற்கனவே தெரியும் அவை எல்லா இடங்களிலும் உள்ளன - உங்கள் டிவி, லேப்டாப், வாகனங்கள், ஏசிகள் மற்றும் உங்களுக்குப் பிடித்த ஸ்மார்ட்போன்கள் என அனைத்திலும் உள்ளது. உண்மையிலேயே இதுதான் டிஜிட்டல் பொருளாதாரத்தின் "எண்ணெய்" எனப் பதிவிட்டு உள்ளார்.
பாதி விலை
விரைவில், இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் மற்றும் டிஸ்ப்ளே கிளாஸ்-ஐ பாதி விலையில் வாங்க முடியும். இது மட்டும் அல்லாமல் லட்சக்கணக்கான மக்களுக்கு இத்தொழிற்சாலை மூலம் மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
மோடி, பூபேந்திர ரஜினிகாந்த்
ஆத்மநிர்பார் டிஜிட்டல் இந்தியா போன்ற தொலைநோக்கு பார்வைக்காகப் பிரதமர் மோடி ஜி-க்கும், விஷயங்களை விரைவாக முடிப்பதற்கு உறுதுணையாக இருந்த முதல்வர் பூபேந்திர ரஜினிகாந்த் படேல் மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் எனத் தெரிவித்தார்.