வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டதை அடுத்து வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் படுவீழ்ச்சி அடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அந்த பகுதி மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்தது.
இதன் காரணமாக அந்நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளாக மூடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் மூடப்பட்டதால் நேரடியாக 5 ஆயிரம் பேர்களும், மறைமுகமாக 25 ஆயிரம் பேர்களும் வேலையிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டெர்லைட்
இந்தியாவின் 40 சதவீத தாமிர உற்பத்தியை தந்து கொண்டிருந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மூடப்பட்டதால் இந்தியாவின் தாமிர தேவைக்கு தற்போது வெளிநாட்டு இறக்குமதியை நம்ப வேண்டிய சூழ்நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வேதாந்தா நிறுவனம்
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய உள்ளதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆலையை வாங்க விருப்பமுள்ளவர்கள் ஜூலை 4ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பங்குச்சந்தையில் சரிவு
ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்ததால் பங்கு சந்தையில் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் இன்று காலை முதலே சரிந்து வருகின்றன. சற்று முன் வரை இந்நிறுவனத்தின் பங்குகள் 12 சதவீதம் சரிந்து 230. 85 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.
வேதாந்தா பங்குகள்
கடந்த ஏப்ரல் மாதம் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக ரூபாய் 440.85 என்ற விலையில் விற்பனை ஆனது, அதே நேரத்தில் குறைந்த பட்சமாக ரூபாய் 242.60 என்ற விலையில் விற்பனை ஆனது. இந்த நிலையில் தற்போது 52 வார குறைந்த விலையை நெருங்கிவிட்டதால் அதில் முதலீடு செய்பவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.