இந்தியாவில் இன்று வாகனத் துறையினர் மத்தியில் பெருமளவில் பேசப்படும் ஒன்று வாகன அழிப்புத் திட்டம்.
இந்த வாகன அழிப்பு திட்டமானது பல ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறையினரின் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவும் இருந்து வந்தது.
ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே வாகன துறையானது தொடர்ந்து பெரும் சரிவினைக் கண்டு வந்தது. இது கடுமையான பொருளாதார மந்தம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி மற்றும் கொரோனா என பலவற்றாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
வாகனத் துறையின் வருவாய் அதிகரிக்கும்
இப்படியொரு மோசமான நிலையில் தான் வாகன துறையினருக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, பட்ஜெட் 2021ல் வாகன அழிப்பு திட்டம் பற்றி அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த வாகன அழிப்பு திட்டம் மூலம், இந்தியாவின் வாகன துறையின் வருவாய் 4.5 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். அதோடு 35,000 மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் ஒரு அறிக்கையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
வாகன அழிப்பு திட்டம்
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வாகன அழிப்பு திட்டத்தின் படி, தனி நபர் வாகனங்களுக்கு 20 வருடங்கள் கழித்தும், வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகள் கழித்தும் ஸ்கிராப்பிங் செய்யும் திட்டம் விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டம் அமலுக்கு வரும்போது, வாகனத்துறைக்கு பெரிய ஊக்கத்தினை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பகிறது. ஏனெனில் இது ஒட்டுமொத்த வாகனத்துறையே ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன சலுகைகள் கிடைக்கும்?
அரசின் இந்த வாகன அழிப்பு திட்டத்தின் கீழ் தங்களது பழைய வாகனங்களை கொடுத்து, புதிய வாகனங்கள் வாங்குபவர்கள் வலுவான சலுகையை பெறுவார்கள். குறிப்பாக உற்பத்தியாளர்களிடம் ஸ்கிராப்பிங் செய்யும்போது, புதிய வாகனத்தினை பெறும்போது 5% தள்ளுபடி கொடுக்க அனைத்து வாகன உற்பத்தியாளார்களுக்கும் நாங்கள் ஆலோசனை வழங்கியுள்ளோம் என மக்களைவையில் கட்கரி கூறினார்.
பழைய வாகனங்களின் மதிப்பு எவ்வளவு?
சலுகைகள் மட்டும் அல்ல, பழைய வாகனங்களை தாமாக முன்வந்து ஸ்கிராப்பிங்காக கொடுப்பவர்களுக்கு, ஸ்கிராப்பிங் சான்றிதழையும் வழங்கும். மேலும் ஸ்கிராப்பிங் செண்டர்கள் வழங்கும் பழைய வாகனத்தின் ஸ்கிராப் மதிப்பானது, புதிய வாகனத்தின் எக்ஸ் ஷோரூம் விலையில் சுமார் 4 - 6% இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வரிச் சலுகையும் உள்ளதா?
தனி நபர் வாகனங்களுக்கு 25% வரையிலும், வர்த்தக வாகனகளுக்கு 15% வரையிலும் வரி சலுகை அளிக்கப்படலாம். அத்தோடு இந்த பழைய வாகனங்களை ஸ்கிராப்பிங் செய்த சான்றிதலை வைத்துள்ளவர்களுக்கு,, புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது பதிவு கட்டணமும் தள்ளுபடி செய்யப்படலாம்.
Automated Fitness Centresகளை அரசு ஊக்குவிக்கும்
பழைய வாகனங்களை தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால், அவற்றை, தொடர்ந்து பயன்படுத்த அவை முதலில் பயன்படுத்த தகுதியானவை என நிரூபிக்க வேண்டும். இதற்காக வாகனங்கள் Automated Fitness Centres மூலம் பிட்னஸ் சான்றிதழை பெற வேண்டும். இதன் பிறகே உங்கள் பழைய வாகனத்தினை நீங்கள் இயக்கிக் கொள்ள முடியும். இந்த நிலையில் அரசு Automated Fitness Centresகளை அரசு மூலமாகவோ அல்லது தனியார் மூலமாகவோ, அல்லது வாகன நிறுவனங்கள் மூலமாகவோ ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளது
அரசு வாகனங்கள் அகற்றப்படலாம்
மத்திய அரசு மற்றும் மாநில அரசு, நகராட்சிகள், பஞ்சாயத்துகள், மாநில போக்குவரத்து நிறுவனங்கள் (பொதுத்துறை நிறுவனங்கள்) யூனியன்கள், மாநில அராசாங்களுடனான தன்னாட்சி அமைப்புகளின் அனைத்து வாகனங்களும் பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன தேவை அதிகரிக்கும்
அரசின் இந்த வாகன ஸ்கிராப்பிங் திட்டத்தினால் புதிய வாகனங்களின் தேவை அதிகரிக்கும். இதனால் புதிய வாகனங்கள் மேலான ஆர்வம் அதிகரிக்கும். இதனால் புதிய வாகனங்களுக்கான தேவையும் கூடும். அதோடு சுற்றுசூழல் பாதிப்பும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக, வாகன நிறுவனங்கள் தற்போது சில சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.
கவனிக்க வேண்டிய விஷயம்
பழைய வாகனங்களுக்கு பசுமை வரி, எட்டு வருடங்கள் பழமையான போக்குவரத்து வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படுகையில், சாலை வரியில் 10 முதல் 25% பசுமை வரியாகப் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இதே தனியார் வாகனங்கள் 15 வருடங்களுக்குப் பிறகு பதிவு சான்றிதழை புதுப்பிக்கும்போது. இந்த பசுமை வரி விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
எப்போது அமல்
அரசின் இந்த வாகன அழிப்பு திட்டம் ஏப்ரல் 1, 2022 முதல் அரசு மற்றும் பொத்துறை நிறுவனங்களின் வாகனங்களுக்கு அமலுக்கு வருகின்றது. எனினும் தனியார் வாகனங்களுக்கு எப்போது முதல் அமல் என்று தெளிவாக தெரியவில்லை. அரசின் இந்த திட்டம் பழைய மற்றும் குறைபாடுள்ள வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும், மாசுபாட்டை குறைக்கவும் இந்த வாகன அழிப்பு திட்டம் பயன்படும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் வாகன தொழில்துறையும் மேம்படும்.
ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கும்
அதோடு அரசின் இந்த திட்டத்தினால் ஜிஎஸ்டி சுமார் 40,000 கோடி ரூபாய் அதிகரிக்கும் எனவும் நிதின் கட்கரி ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்.
உண்மையில் இது துவண்டு போன நிலையில் உள்ள வாகன துறைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும். அதோடு பழைய வாகனங்களையும் கொடுப்பவர்களுக்கு பல சலுகைகளும் உள்ளதால், இது சற்று ஆறுதல் கொடுக்கும். எப்படியிருந்தாலும், இது முழுமையாக அமல்படுத்தப்படும்போது தான் சாதக பாதங்கள் முழுமையாக தெரியவரும்.