இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக இருக்கும் ஐசிஐசிஐ வங்கியில் வீடியோகான் நிறுவனத்தின் பெயரில் சந்தா கோச்சார் மற்றும் வேணுகோபால் தூத் செய்த பணமோசடி வழக்கு மீண்டும் விஸ்வரூபமாக வெடித்துள்ளது.
இந்தியப் பங்குச்சந்தை மற்றும் முதலீட்டு சந்தையை உலுக்கிய பெரும் பிரச்சனைகளில் என்எஸ் சித்ரா ராமகிருஷ்ணா வழக்கு இணையாக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவம் ஐசிஐசிஐ வங்கி-வீடியோகான் பணமோசடி வழக்கு.
இந்த நிலையில் வீடியோகான் தலைமை நிர்வாக அதிகாரி வேணுகோபால் தூத் -ஐ மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளால் திங்கள்கிழமை மும்பையில் கைது செய்யப்பட்டார்.
ஐசிஐசிஐ வங்கி-வீடியோகான்
ஐசிஐசிஐ வங்கி-வீடியோகான் பணமோசடி வழக்கு தொடர்பாக முன்பு ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில் தற்போது வீடியோகான் சிஇஓ வேணுகோபால் தூத் கைது செய்யப்பட்டு உள்ளார்.
வேணுகோபால் தூத்
2009-2011 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் நாட்டின் தொழிலதிபரும் வீடியோகான் சிஇஓ வேணுகோபால் தூத்-க்கு ஐசிஐசிஐ வங்கியின் தலைவராகச் சந்தா கோச்சார் இருந்தபோது பல முறைகேடுகள், வங்கி விதிகள் மற்றும் சட்டங்களை மீறி கடன்கள் வழங்கப்பட்டு உள்ளதாகச் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
வீடியோகான் இன்டர்நேஷனல்
இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டில், வீடியோகான் இன்டர்நேஷனல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், NuPower ரெனிவபிள்ஸ் பிரைவேட் லிமிடெட், சுப்ரீம் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது மட்டும் அல்லாமல், சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வேணுகோபால் தூத் மீது சிபிஐ அமைப்பு இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தது.
ரூ.3250 கோடி கடன் மோசடி
ஐசிஐசிஐ வங்கியின் தலைவராகச் சந்தா கோச்சார் இருந்த காலகட்டமான 2012ல் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் வீடியோகான் குழுமத்திற்குச் சுமார் 3250 கோடி ரூபாய் அளவிலான கடனை அளித்துள்ளது. இந்தக் கடன் பெற்ற பின்பு வேணுகோபால் தூத், தீபக் கோச்சார் 50 சதவீத பங்குகளை வைத்திருந்த நியூபவர் ரினியூவபிள்ஸ் நிறுவனத்துக்குச் சுமார் 64 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது.
சந்தா கோச்சார் மோசடி
இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்கள், இந்திய வங்கித் துறையில் இவரின் ஆதிக்கம் எனச் சந்தா கோச்சார்-ஐ புகழப்பட்ட நிலையில், வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு 3250 கோடி ரூபாய் அளவிலான கடனை அளித்துள்ளது அவரின் நெறிமுறைகள் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
வாராக் கடன்
ஐசிஐசிஐ வங்கியில் இருந்து சந்தா கோச்சார், வீடியோகான் குழுமத்திற்குச் சுமார் 3250 கோடி ரூபாய் அளவிலான கடனை அளித்து அதன் மூலம் தனது கணவர் நிறுவனம் ஆதாயம் அடைந்து பெரும் விதிமீறலாக இருக்கும் நிலையில், அவருடைய நிர்வாகத்திலேயே வீடியோகான் மற்றும் அதன் இணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை வாராக் கடனாக அறிவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சிபிஐ விசாரணை
இந்த வழக்கின் விசாரணையில் சந்தா கோச்சார், தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் ஆகியோர் மட்டும் அல்லாமல் ஐசிஐசிஐ வங்கி, வீடியோகான் உயர் அதிகாரிகள் மீதும் வழக்குத் தொடரப்பட்டுச் சிபிஐ விசாரணை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
நஷ்டம்
வீடியோகான் மற்றும் அதன் இணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை வாராக் கடனாக அறிவிக்கப்பட்டது மூலம் ஐசிஐசிஐ வங்கி பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. NuPower ரெனிவபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தனது கணவருக்கு உரிமை பெற்றுத் தரும் முயற்சியில் சந்தா கோச்சார் பல முறைகேடுகளைச் செய்துள்ளார்.