சீனா கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை அறிவிக்கப்பட்ட அடுத்த சில மணிநேரத்தில் வியட்நாம் அரசு சீனாவில் இருந்து வந்தவர்கள் மற்றும் சீனாவுக்குத் தொடர்புடைய நபர்களைப் பட்டியலிட்டு அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள், நெருக்கமாக இருந்தவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் எனக் கிட்டதட்ட 10 கோடி மக்களைத் தனது அரசு வளையத்திற்குள் கொண்டு வந்தது. இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாகவே கொரோனாவால் அதிகமாக உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் வியட்நாம் கடைசி 4 இடத்தில் இருந்து வருகிறது.
இப்படிக் கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ள வியட்நாம் சீனாவை விடவும் விரைவாக மீண்டு வந்து வர்த்தகம் மற்றும் உற்பத்தியைத் துவங்கி தனது பொருளாதார வளர்ச்சியைத் தொடர் வளர்ச்சிப் பாதையில் வைத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்த வருடத்தில் அதிகளவிலான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்யப்போகும் நாடு என்ற பெருமையும் வியட்நாம் பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
கிட்டதட்ட உலகில் 80 நாடுகள் (வல்லரசு நாடுகள்) உட்பட நிதி தேவைக்காகச் சர்வதேச நாணய நிதியத்தை அணுகிய நிலையில், வியட்நாம் 3 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
வியட்நாம்-ஐ கண்டு வியக்க இதுமட்டும் தான் காரணமாக என்றால் நிச்சயம் இல்லை. தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கே புரியும்..
ஆசியாவில் ஆச்சரியம்
2ஆம் உலகப் போருக்குப் பின் Asian miracles என்ற ஒரு பிம்பம் இருந்தது, இப்போதிருந்த தடைகளைத் தாண்டி பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாடுகளைத் தான் Asian miracles என்று அழைக்கப்படும்.
அந்த வகையில் 2ஆம் உலகப் போருக்குப் பின் முதலாவதாக ஜப்பான், தைவான், அதன் பின்பு தென் கொரியா, சமீபத்தில் சீனா ஆகியவை, தான் நாட்டில் இருக்கும் பிரச்சனைகளைக் கடந்து உற்பத்தியில் மட்டும் அல்லாமல் ஏற்றுமதி சந்தையின் பவர்ஹவுஸ் ஆக மாறி ஏழ்மையில் இருந்து 90 சதவீதம் வரை மீண்டு சாதனை படைத்துள்ளது.
இதே பாதையைத் தான் தற்போது வியட்நாம் பயணிக்கிறது.
ஆசியச் சந்தை
போருக்குப் பின் உலகமயமாக்கல், வர்த்தக வளர்ச்சி, முதலீடுகள் என உலக நாடுகளின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து. குறிப்பாக ஆசிய நாடுகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை வைத்து மிகப்பெரிய வளர்ச்சி கண்டது. ஒவ்வொரு வருடமும் சராசரியாக ஆசியச் சந்தையின் ஏற்றுமதி வர்த்தகம் 20 சதவீதம் வளர்ச்சி கண்டது வரலாற்று உண்மை.
30 ஆண்டுகள்
பிற ஆசிய நாடுகளைப் போலவே வியட்நாம்-ம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அடிப்படியாக வைத்து தனது பொருளாதாரத்தை வளர்க்கத் திட்டமிட்டது. இத்திட்டம் மாபெரும் வெற்றிகண்டுள்ளது என்றால் மிகையில்லை, காரணம் 2010 சர்வதேச பொருளாதார நெருக்கடியின் போது வியட்நாம் 16 சதவீத வர்த்தக வளர்ச்சியைப் பதிவு செய்து உலக நாடுகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
சராசரி வருமானம்
கடந்த 30 வருடத்தில் வியட்நாம் நாட்டின் தொடர் அதிரடி வளர்ச்சியால் இந்நாட்டு மக்களின் சராசரி வருமானம் 5 மடங்கு வளர்ச்சி அடைந்து 3000 டாலர் என்ற உச்சத்தை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சியில் இந்தியாவையும் முந்தியுள்ளது வியட்நாம்.
இக்காலகட்டத்தில் வியட்நாம் அரசு தனது முதலீட்டை மிகவும் சிறப்பாகக் கட்டமைத்துள்ளது. ஏற்றுமதிக்கான கட்டமைப்பைப் பிற எந்த நாடுகளைக் காட்டிலும் சிறப்பான அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்நாட்டின் மொத்த ஜிடிபியில் 8 சதவீதத்தைக் கட்டுமானத்திற்காகவும், சாலை மற்றும் துறைமுகத்திற்கும் முதலீடு செய்யப்படுகிறது.
வறுமை
மேலும் இந்நாட்டில் ஒரு நாளுக்கு 2 டாலருக்கும் குறைவான வருமானத்தைப் பெறுவோர் எண்ணிக்கை கடந்த 30 வருடத்தில் 60 சதவீதத்தில் இருந்து வெறும் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது என ஐஎம்எப் தரவுகள் கூறுகிறது. இதேபோல் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் இந்நாட்டின் ஏற்றுமதி மற்றும் உற்பத்தி திட்டத்திற்கு வருகிறது.
வியட்நாம்-ன் இந்த 30 வருட வளர்ச்சி இந்தியாவிற்கு மிகப்பெரிய பாடம்.
சீனா - வியட்நாம்
சர்வதேச பிரச்சனைகளுக்காகச் சீனாவில் இருந்து வெளியேறும் உற்பத்தியாளர்களுக்கும், குறைந்த வருமானத்தில் ஆட்கள் தேவைப்படும் உற்பத்தியாளர்களுக்குச் சீனாவிற்கு அடுத்தச் சாய்ஸ்- ஆக இருக்கும் ஓரே நாடு வியட்நாம்.
பாதிச் சம்பளம்
இந்த வியப்பு தக்க வளர்ச்சியிலும் சீனாவை ஒப்பிடுகையில் வியட்நாம்-ல் பாதிச் சம்பளம் தான், இதேபோல் இந்நாட்டின் கல்விக்கான முதலீட்டின் மூலம் திறமையானவர்களுக்கும், கல்வி அறிவு உடையவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் பெரிய நிறுவனங்களும் வியட்நாம்-ஐ ஈர்த்து வருகிறது.
5 வருடத்தில் மாபெரும் வளர்ச்சி
கடந்த 5 வருடத்தில் சர்வதேசச் சந்தை வர்த்தகத்தில் ஏற்றுமதியில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடுகளில் பட்டியலில் வியட்நாம் முதல் இடத்தில் உள்ளது. வியட்நாம் அரசின் கல்வி முதலீட்டின் எதிரொலியாக 2015 முதல் இந்நாட்டின் ஏற்றுமதியில் டெக் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
கல்வி முதலீடு
இதேபோல் ஐரோப்பிய நாடுகளுடன் உடனான டீல் மூலம் வியட்நாம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலக நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை அடைவதற்கு இந்நாட்டின் கல்வி முதலீட்டில் ஏற்பட்ட மாற்றம் முக்கியமாக உள்ளது என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
இப்போது சொல்லுங்கள் வியட்நாம்-ஐ கண்டு வியக்க இது போதுமா..?