கொரோனா என்ற பெயரை பயன்படுத்தாத நாடுகளே இல்லை எனலாம். அந்தளவுக்கு குழந்தை முதல் பெரியோர் வரை அறிந்துள்ள ஒரு விஷயம்.
உலகளவில் 20 லட்சத்துக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.
இந்த கொரோனாவினால் ஊரே மயான அமைதி கண்டு வரும் நிலையில், விமான சேவைகள் முதல் ரயில் சேவை என போக்குவரத்து துறை முற்றிலும் முடங்கி போயுள்ளது.
செலவு குறைப்பு நடவடிக்கை
இந்த நிலையில் தற்போது லாக்டவுன் 2.0வில் மே 3 வரை லாக்டவுன் நீடிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் விமான நிறுவனங்கள் முதல் முறையாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில் ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு செய்தன. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் செலவினை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
3 நாட்கள் கட்டாய விடுமுறை
இதற்கிடையே விஸ்டாரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லெஸ்லி தங், விஸ்டாராவின் மூத்த ஊழியர்களுக்கு ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 30க்கும் இடைப்பட்ட 3 நாட்கள் கட்டாயம் விடுமுறை அளிகப்பட்டுள்ளதாகவும், இதற்கு சம்பளம் இல்லை எனவும் அறிவித்துள்ளது. இது விமான நிறுவனத்தின் பணப்புழக்கத்தினை பாதுக்காப்பதற்கான ஒரு நடவடிக்கையாக அறிவித்துள்ளது.
பாதிப்பு மூத்த ஊழியர்களுக்கு தான்
ஏற்கனவே முதல் முறை லாக்டவுன் அறிவிப்பில் ஏப்ரல் 1 முதல். ஏப்ரல் 14 வரையிலான காலத்தில் 3 நாட்கள் இதே போன்று கட்டாய விடுமுறை, சம்பளம் இல்லாமல் அளிக்கப்பட்டது. இது மூத்த ஊழியர்கள் தரப்பில் இது 1200 பேரினை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இதே மீதமுள்ள 2800 கேபின் ஊழியர்களுக்கு இது பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசின் அறிவிப்புக்கு ஏற்ப நடவடிக்கை
அரசின் அறிவிப்பினை தொடர்ந்து நாங்கள் எங்களது உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகளை மே 3 வரை நிறுத்தி வைக்கிறோம். இது எங்களது பணப்புழக்கத்தில் கணிசமான அளவு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலத்திற்கு எங்களுக்கு எந்த வருவாயும் கிடைக்காததால், இப்படி நடவடிக்கையினை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது குறித்து ஊழியர்களுக்கு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளோம் என்றும் விஸ்டாரா தெரிவித்துள்ளது.