டெல்லி : மிகுந்த கவலைக்கிடமான துறைகளில் தொலைத் தொடர்பு துறையும் ஒன்று. அந்த வகையில் வோடபோன் நிறுவனம் பெருத்த நஷ்டத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் நிறுவனம் மட்டும் அல்ல, பொதுத்துறையை சார்ந்த தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் சேர்ந்து பல்வேறு நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தினையே கண்டன.
அதிலும் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னர், போட்டி அதிகரிப்பால், நிறுவனங்கள் பலத்த அடியை கண்டன.
இந்தியாவில் சேவையை தொடருமா?
இந்த நிலையில் கடந்த மாதம் உச்ச நீதி மன்ற தீர்ப்பை அடுத்து, அரசுக்கு செலுத்த வேண்டிய பல ஆயிரக்கணக்கான கோடியை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது வோடபோன் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள். அதிலும் ஏற்கனவே கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இந்த நிறுவனம் மேலும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் இந்த நிறுவனம் தனது சேவையை இந்தியாவில் தொடருமா? இல்லையா? என்பது சந்தேகமான பார்வையிலேயே பார்க்கப்பட்டு வந்தது.
இந்தியாவில் சந்தேகம் தான்
இந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக வோடபோன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிக் ரீட், இது குறித்த கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவில் மிகவும் சவாலான, நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அரசு தொலைத் தொடர்பு துறைக்கு சாதகமாக இல்லை. இதனால் வோடபோன் நிறுவனத்திற்கு பெருத்த சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் எங்களது சேவையை தொடர்ந்து செய்ய முடியுமா? என்பது தெரியவில்லை. இந்தியாவில் எங்களது நிலை சந்தேகமாகத் தான் உள்ளது. அரசு தரப்பில் சரியான ஆதரவு கிடைக்கவில்லை எனில் வோடபோன் எதிர்காலம் இந்தியாவில் கஷ்டம் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
இணைப்புக்கு பின்பும் தொடரும் நஷ்டம்
ஏனெனில் ஏற்கனவே இத்துறையில் நிலவி வரும் கடுமையான போட்டியால் நாங்கள் மிகுந்த நஷ்டத்தில் உள்ளோம். இந்த நிலையில் அரசின் வரிவிதிப்பானது மேலும் எங்களை மேலும் கீழ் தள்ளிவிட்டுள்ளது. மேலும் வோடபோன் நிறுவனம் கடந்த கடந்த 2018ல் ஐடியா செல்லூர் உடன் இணைந்தது. இந்த வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் இணைந்த பின்னராவது இந்த நிறுவனத்தின் நஷ்டம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த இணைப்புக்கு பின்னர் இதன் சேவை இன்னும் கடினமானது
பங்கு மதிப்பும் குறைந்து வருகிறது
குறிப்பாக இதன் பங்கு சந்தை மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 23,809 கோடி ரூபாய் வோடபோன் நிறுவனம் தொலைத் தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே கடன் பிரச்சனையால் தத்தளிக்கும் இந்த நிறுவனம், இந்த அபராத தொகையிலிருந்து எப்படி மீண்டு வரும் என்ற நிலையில், இப்படி ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளது.
தொடர் நஷ்டம்
இந்திய வர்த்தகத்தில் வோடபோன் நிறுவனத்தின் ஆபரேட்டிங் நஷ்டம் ஏப்ரல் முதல் செப்டம்பரில் 692 மில்லியன் யூரேக்களாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 133 மில்லியன் யூரோக்களாக இருந்தது. மேலும் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 6 மாத காலத்தில் 1.9 பில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என வோடபோன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படி ஒரு அபராத தொகையை உச்ச நீதி மன்றம் செலுத்த கூறி தீர்பளித்துள்ளது. இந்த நிலையில் அரசு கைகொடுக்காவிட்டால் இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும் என்றும் வோடபோன் கூறியுள்ளது.