ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஐியோ அறிமுகத்திற்குப் பின் பல கடுமையான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. இது எந்த அளவிற்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றால் ஜியோவுடன் போட்டிப்போட வேண்டும் என்று ஒன்றிணைந்த ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனம் தற்போது திவாலாகும் நிலையில் உள்ளது.
ஆம், இன்னும் சில நாட்களில் ஐடியா - வோடபோன் நிறுவனத்தில் பணம் வந்த சேரவில்லையெனில் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டிய நிலையில் தள்ளப்பட்டு உள்ளது.
ஐடியா - வோடபோன்
ஐடியா - வோடபோன் நிறுவனத்தின் ப்ரோமோட்டர் நிறுவனமான பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த வோடபோன் குழுமம், ஆதித்யா பிர்லா குரூப் நிறுவனங்கள் ஆலோசனை செய்து அடுத்தச் சில நாட்களில் நிறுவன கணக்கில் பணத்தைப் போடவில்லையெனில் நிறுவனம் தானாகத் திவாலாக அறிவிக்க வேண்டும் எனச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சரி என்ன தான் பிரச்சனை.. வாங்க முழுசா பார்ப்போம்.
ஏஜிஆர் கட்டணம் என்றால் என்ன..?
இந்தப் பிரச்சனைக்குள் செல்லும் முன் ஏஜிஆர் கட்டணத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஏஜிஆர் கட்டணம் என்றால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய அரசு ஒப்புதலின் படி ஒதுக்கீடு செய்யப்பட்ட அலைக்கற்றை, பயன்பாட்டிற்கான கட்டணம், ஈவுத் தொகை, மற்று சொத்து வருமானம் உள்ளிட்டவற்றை சரிக்கட்டப்பட்ட நிகர வருவாயாகக் கணக்கிடப்பட்டு, அதில் குறிப்பிட்ட தொகையை ஆண்டு உரிம கட்டணமாக மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டும்.
இதை ஒவ்வொரு ஆண்டும் பகுதி பகுதியாக டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த மத்திய அரசுக்குச் செலுத்த வாய்ப்பு உள்ளது.
1.45 லட்சம் கோடி ரூபாய்
இப்படித் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகை 1.47 லட்சம் கோடி ரூபாய். இதில் குறிப்பாக ஐடியா வோடபோன் நிறுவனம் சுமார் 53,000 கோடி ரூபாய் நிலுவையைச் செலுத்த வேண்டி உள்ளது.
டிசம்பர் காலாண்டில் ஐடியா வோடபோன் நிறுவனம் வர்த்தகம் இல்லாமல் சுமார் 6,439 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்த நிலையில் 53,000 கோடி ரூபாய் நிலுவையைச் செலுத்த முடியும்.
இப்படியிருக்கையில் அரசு மற்றும் நீதிமன்ற நெருக்கடியும் அதிகரித்தது.
உச்ச நீதிமன்றம் அதிரடி
நீண்ட காலமாக டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் (Adjusted Gross Revenue ) நிலுவைத் தொகையை ஜனவரி 23ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனப் பல வழக்குகளுக்குப் பின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைச் சற்றும் எதிர்பார்க்கா டெலிகாம் நிறுவனங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த உத்தரவையடுத்து ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ஒரு பகுதி கட்டணத்தைச் செலுத்திய நிலையில் ஐடியா - வோடபோன் செலுத்தவில்லை.
தொலைத்தொடர்பு அமைப்பு
டெலிகாம் நிறுவனங்கள் பணத்தைச் செலுத்தாமல் இருந்ததையும், தொலைத் தொடர்பு நிறுவனங்களை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. இதேபோல் இதை வசூலிக்கச் சரியான முறையில் செயல்படுத்தாத அதிகாரிகளையும் கண்டித்தது உச்ச நீதிமன்றம் கண்டித்தது.
அதுமட்டும் அல்லாமல் மார்ச் 17-க்குள் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தாதற்கான காரணத்தையும் விளக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மோசமான நிலை
ஏற்கனவே வர்த்தகம் வருவாய் இல்லாமல் தவித்து வந்த ஐடியா-வோடபோன் நிறுவனம் உச்ச நீதிமன்ற அறிவிப்பால் உடைந்துபோனது. இதன் எதிரொலியாக இந்நிறுவனப் பங்குகள் வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 23 சதவீதம் சரிந்த வெறும் 3.44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பணப் பிரச்சனை
ஐடியா- வோடபோன் நிறுவனம் ஏற்கனவே பணமில்லாமல் தவித்து வந்த நிலையில் செலவுகளைக் குறைப்பதற்காகப் பல வர்த்தகம் சேவை ஆகியவற்றை மூடியது. இப்பவும் பணம் இல்லாமல் தான் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. இப்படியிருக்கும் நிலையில் ஏஜிஆர் கட்டணம் குறித்து அடுத்த விசாரணை வருகிற மார்ச் 17ஆம் தேதி நடக்க உள்ளது.
அதற்குள் 53,000 கோடி ரூபாயப் பணத்தை வோடபோன் செலுத்த முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. இதனால் ஐடியா- வோடபோன் நிறுவனம் தானே திவாலாக அறிவித்துக்கொள்ளும் எனப் பல சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அரசு உதவி
இந்தப் பிரச்சனைக்கு அரசு உதவி செய்யும் என டெலிகாம் நிறுவனங்கள் நம்பிய நிலையில் மத்திய அரசுக்கு இருக்கும் பொருளாதார வளர்ச்சி, வரி வசூல் சிக்கலில் தனியார் டெலிகாம் நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட மறுத்துவிட்டது. சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு தலையீட்டு டெலிகாம் சேவைக்கான கட்டணத்தில் அடிப்படை கட்டணத்தை உயர்த்தித் தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தது.