இந்தியா என்கிற மிகப் பெரிய சந்தையில் மக்களுக்குத் தேவையான பொருட்களை, ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்துக்கு, கொண்டு சென்று சேர்க்க போக்குவரத்து வசதிகள் இன்றியமையாதவையாக இருக்கின்றன.
ரயில் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து கணிசமாக பங்களிக்கிறது என்றாலும், இப்போதும் சாலை போக்குவரத்து தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்தாக இருக்கிறது.
அப்படி சாலை வழியாக சரக்குகளைக் கொண்டு செல்லும் லாஜிஸ்டிக்ஸ் கம்பெனிகளில், இந்தியாவின் முன்னணி கம்பெனிகளில் ஒன்று வி ஆர் எல் லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி.
வி ஆர் எல் லாஜிஸ்டிக்ஸ்
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, இந்த வி ஆர் எல் லாஜிஸ்டிக்ஸ் தான் இந்தியாவிலேயே அதிக வணிக வாகனங்களை வைத்திருக்கும் லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி. இந்த கம்பெனியிடம் சுமாராக 5,000 வணிக வாகனங்களை (டேங்கர், க்ரேன், பேருந்து என எல்லா வகையான வாகனங்களையும் சேர்த்து) வைத்திருக்கிறார்களாம்.
ஜூன் காலாண்டு முடிவுகள்
சமீபத்தில் தான் வி ஆர் எல் லாஜிஸ்டிக்ஸ் கம்பெனியின் ஜூன் 2020 காலாண்டு முடிவுகள் வெளியாயின. வருவாய் கடந்த ஜூன் 2019-ல் 539 கோடியாக இருந்தது, இந்த ஜூன் 2020-ல் 160 கோடி ரூபாயாக சரிந்து இருக்கிறது. ஜூன் 2019-ல் 27.45 கோடியாக இருந்த நிகர லாபம், இந்த ஜூன் 2020-ல் 62.72 கோடி நிகர நஷ்டமாகி இருக்கிறது என்றால் வியாபாரம் என்ன ஆகி இருக்கிறது என புரிந்து கொள்ள முடியும்.
கம்பெனி தரப்பில் முடிவு
வியாபாரம் மிகவும் குறைவாக இருப்பதால், தற்போதைக்கு, மேற்கொண்டு எந்த புதிய டிரக்குகளையும் வாங்கப் போவதில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள். அதோடு சுமாராக 700 பழைய வாகனங்களை, தன் பயன்பாட்டில் இருந்து நிறுத்த இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள். இந்த 700 வாகனங்கள் வைக்கும் ரிப்பேர் செலவுகளை இதனால் மிச்சப்படுத்தலாம் என்பது இவர்கள் ஐடியாவாம்.
இந்த ஆண்டில் லாபம்
இந்த 2020 - 21 நிதி ஆண்டில், செலவுகளைக் குறைத்தும், புதிய முதலீடுகளை செய்யாமல் நிறுத்தம் செய்வதாலும் லாபத்தை அதிகரிக்கலாம் என்கிற ஐடியாவில் வி ஆர் எல் லாஜிஸ்டிக்ஸ் நிர்வாக தரப்பினர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் டிரக்குகளின் விற்பனை பழைய நிலைக்கு வர சுமாராக 3 ஆண்டுகள் ஆகலாம் என்கிறது டைம்ளர் ஏஜி கம்பெனி.
வியாபாரம் எப்படி
தற்போது வி ஆர் எல் லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி, தன் முழு கெபாசிட்டியில் 75 சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்தி வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறதாம். வி ஆர் எல் லாஜிஸ்டிக்ஸ் கம்பெனிக்கு சுமாராக மூன்றில் ஒரு பங்குக்கு மேல், சிறு குறு தொழில்முனைவோர்களிடம் இருந்து வியாபாரம் கிடைக்குமாம். ஆனால் இந்த பொருளாதார நெருக்கடியில் சிறு குறு தொழில்முனைவோர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்களாம்.
ரூட் பரிசீலனை
எனவே, லாபம் கொடுக்காத அல்லது டிமாண்ட் இல்லாத ரூட்களை எல்லாம் வி ஆர் எல் லாஜிஸ்டிக்ஸ் நீக்க இருக்கிறதாம். வி ஆர் எல் லாஜிஸ்டிக்ஸ் கம்பெனிக்கு, ஒரு பக்கம் பார்மா & விவசாயத் துறை மூலம் வியாபாரம் வளர்ந்து வருகிறதாம். ஆனால் மறு பக்கம் டெக்ஸ்டைல் & ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் டிமாண்ட் குறைவாக இருக்கிறதாம்.
பங்கு விலை
2015-ம் ஆண்டு, வி ஆர் எல் லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்ட போதே 40 % விலை ஏற்றத்தில் தான் பட்டியலிடப்பட்டது. அதன் பின் கடந்த பிப்ரவரி 2018-ல் 492 ரூபாய் என்கிற வாழ்நாள் உச்சத்தைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் தற்போது சுமாராக 151 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.