உலகளவில் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமாக விளங்கி வரும் அமேசான் - வால்மார்ட் நிறுவனங்கள் மத்தியில் எப்போது கடுமையான போட்டி இருந்து வருகிறது. அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பீசோஸ்-இன் சொத்து மதிப்பு தாறுமாறாக உயர்ந்தாலும் வால்மார்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்புக்கு அமேசான் நிறுவனத்தால் ஈடுகொடுக்க முடியாது.
இன்று ஆன்லைன் வர்த்தகம் உலகின் அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கும் கிடைத்தாலும் மாதத்தில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது நேரடியாகக் கடைக்குச் சென்று மாதத்திற்கோ அல்லது வாரத்திற்கோ தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கும் வழக்கம் அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருந்து வருகிறது. இங்குதான் வால்மார்ட் அமேசான் நிறுவனத்தை வென்றுள்ளது.
ஆனால் இன்று அமேசான் நிறுவனத்தைத் திக்குமுக்காட வைக்கும் அளவிற்கு வால்மார்ட் உயர்ந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் அமெரிக்க இல்லை, இந்தியா. அதுவும் தமிழர்கள் அதிகம் வாழும் பெங்களூரு.
அமேசான் - வால்மார்ட்
அமெரிக்காவின் அனைத்து ரீடைல் விற்பனையாளர்களுக்கும் தண்ணி காட்டி வரும் அமேசான், வால்மார்ட் உடன் எப்படி முட்டி மோதினாலும் ஒன்றும் நடக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு 500 பில்லியன் டாலர் வருவாயை வால்மார்ட் பெறுகிறது, இதை அமேசான் உடன் ஒப்பிடுகையில் 2 மடங்கு அதிகம்.
அதிரடி வளர்ச்சி
2019இல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் வால்மார்ட் பங்குகளைச் சுமார் 27 சதவீத வளர்ச்சி அடைந்து அமெரிக்க முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் அமேசானையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. சொல்லப்போனால் டாவ் ஜோன்ஸ் குறியீட்டில் 2019ஆம் ஆண்டில் வேகமாக வளர்ச்சி அடைந்த நிறுவனங்களில் அமேசான் நிறுவனத்தைப் பின்னுக்குத்தள்ளி வால்மார்ட் முன்னேறியுள்ளது.
2015இல் துவக்கம்
ரீடைல் சந்தையில் வால்மார்ட் பட்டையைக் கிளப்பி வருவதற்கான காரணம் உலகம் முழுவதும் மக்களை ஈர்க்கும் வகையில் பல கடைகளைத் திறந்திருப்பது தான், இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இன்று அமேசானுடன் போட்டி போடும் அளவிற்கு ஆன்லைன் வர்த்தகத்திலும் வால்மார்ட் சிறப்பாகச் செயல்படுகிறது இறக்கு முக்கியமான காரணம் பெங்களூரில் இருக்கும் வால்மார்ட் லேப்ஸ் நிறுவனம் தான். சொல்லப்போனால் வால்மார்ட்-இன் ஆன்லைன் அதிரடி ஆட்டம் 2015ஆம் ஆண்டில் தான் துவங்கியது.
27.5 கோடி வாடிக்கையாளர்கள்
வால்மார்ட் 2015ஆம் ஆண்டில் தான் டிஜிட்டல் வர்த்தகத்தை நோக்கிய பயணிக்கத் துவங்கியது அதுவும் பெங்களூரில் இருக்கும் வால்மார்ட் லேப்ஸ் நிறுவனத்தில் இருந்து தான் துவங்கியது. இதன் வெற்றி என்னவென்றால் இன்று வால்மார்ட்-இன் 11,300 கடைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஒரு வாரத்திற்கு 27.5 கோடி மக்கள் பொருட்களை வாங்கும் அளவிற்கு வால்மார்ட் உயர்ந்துள்ளது.
வால்மார்ட் லேப்
அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் லேப் இந்தியாவில், அதுவும் பெங்களூரில் மிகப்பெரிய R&D மற்றும் இன்ஜினியரிங் பிரிவை 2015இல் துவங்கியது. இந்த அலுவலகத்தின் முதல் மற்றும் மிகப்பெரிய திட்டம் என்ன தெரியுமா CIA.
CIA திட்டம்
competitive intelligence analytics என்பதன் சுருக்கமே CIA. வால்மார்ட் நிறுவனத்திற்குப் போட்டியாக இருக்கும் 100க்கும் அதிகமான ஆன்லைன் விற்பனையாளர்கள் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் விலையை அறிந்துகொண்டு போட்டியாளர்களை விடவும் குறைவான விலையில் பொருட்களை விற்பனை செய்து வாடிக்கையாளர்களைக் கவர்வது இத்திட்டத்தின் அடிப்படை.
24*7 கண்காணிப்பு
ஆனால் இது சாதாரணமான விஷயம் இல்லை, 24 மணிநேரமும் கண்காணித்துப் பொருட்களின் பிராண்ட், அளவு, டெலிவரி செய்யப்படும் இடம் என அனைத்தையும் கண்காணித்துப் பொருட்களின் விலையைச் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்ற வேண்டும். இந்தச் சவாலான விஷயத்தை தான் பெங்களூரில் இருக்கும் வால்மார்ட் லேப்ஸ் செய்து முடித்தது.
தொழில்நுட்பம்
வால்மார்ட் லேப்ஸ் இந்தத் திட்டத்திற்காக 2 முக்கியமாக விஷயத்தைக் கையில் எடுத்தது, ஒன்று தரவுகள். ஏற்கனவே சொன்னது போல் பிக் டேட்டே, செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மற்ற விற்பனையாளர்களை விடவும் குறைவான விலையிலும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையிலும் பொருட்களை விற்பனை செய்வது.
மற்றொன்று ஒரு முழு ஷாப்பிங் அனுபவத்தை ஆன்லைன் தளத்தில் கொடுப்பது. அதாவது நீங்கள் நேரடியாகக் கடைக்குச் சென்று பொருட்களை எப்படி வாங்குவீர்களோ அதேபோன்ற எளிய அனுபவத்தை ஆன்லைன் தளத்தில் கொடுப்பது.
இவை இரண்டிலும் வால்மார்ட் லேப்ஸ் சாதித்துள்ளது.
டெலிவரி
இதேபோன்ற தொழில்நுட்ப மாற்றங்களை வால்மார்ட்-இன் உலகளாவிய சப்ளை செயின் பிரிவிலும் செய்துள்ளது வால்மார்ட் லேப்ஸ். இப்பிரிவிற்காக Taza Insights என்ற தளத்தை உருவாக்கியுள்ள வால்மார்ட் லேப்ஸ் இப்புதிய சேவை மூலம் வால்மார்ட் சரக்குக் கிடங்குகளில் இருக்கும் பொருட்களின் அளவை மையப்படுத்தி விலையில் மாற்றம், தள்ளுபடி போன்றவற்றைச் செய்கிறது.
கெட்டுப்போகும் பழங்கள்
உதாரணமாகப் பழம், காய்கறிகள் போன் விரைவில் கெட்டுப்போகும் பொருட்களின் அளவுகள் தெரிந்தால் அதை வீண் செய்யாமல் விரைவாக விற்பனை செய்ய வேண்டும், இந்தப் பணியைத் தான் Taza Insights செய்கிறது.
ஹரி வாசுதேவ்
இவ்வளவு பெரிய விஷயத்தை அமெரிக்க நிறுவனத்திற்குச் செய்துக்கொடுத்தது இந்திய மென்பொருள் ஆய்வாளர்கள். இந்த விஷயத்தை வெறும் 3 வருடத்தில் செய்து முடிந்துள்ளதாக வால்மார்ட் லேப்ஸ் நிறுவனத்தின் இந்திய தலைவர் ஹரி வாசுதேவ் தெரிவித்துள்ளார். வால்மார்ட் நிறுவனத்தில் இவர் சேரும் முன் பிளிப்கார்ட் நிறுவனத்தின் டெலிவரி பிரிவான Ekart-இன் சப்ளை செயின் மற்றும் டெக்னாலஜி பிரிவை உருவாக்கியவர்.
வால்மார்ட் லேப்ஸ் இன்னும் பல திட்டங்களில் தற்போது பணியாற்றி வருகிறது என்றும் ஹரி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.