குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்தால் சட்டப்படி தவறு என்பதும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.
இந்தியா உள்பட கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜப்பானில் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மட்டும் வேலைக்கு எடுக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதியோர் இல்லம்
ஜப்பானில் உள்ள முதியோர் இல்லமொன்றில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய உற்சாகத்தை உயர்த்துவதற்காக நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்த அந்த இல்லத்தின் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
வேலைக்கு செல்லும் 4 வயது குழந்தைகள்
ஜப்பானில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் நூற்றுக்கணக்கான 80 வயதுக்கு மேற்பட்ட 100 வயதுக்கு உட்பட்ட முதியவர்கள் இருக்கின்றனர். இந்த இல்லத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் தங்கள் வீட்டில் இருப்பது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு சேர்த்து முதியோர்களுக்கு ஒரு பொழுதுபோக்கை ஏற்படுத்த முதியோர் இல்லத்தின் தலைவர் கிமி கோண்டோ திட்டமிட்டுள்ளார்.
உணவு ஓய்வு உண்டு
இதனை அடுத்து நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வேலைக்கு எடுக்கப்படும் என்றும் அவர்களது பசி, தூக்கம் மற்றும் மனநிலை கண்காணிக்கப்படும் என்றும் வேலையில் சேரும் குழந்தைகள் ஓய்வு எடுக்கவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம்
மேலும் இந்த இல்லத்தில் குழந்தைகளை வேலைக்கு சேர்ப்பவர்களின் பாதுகாவலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை உற்சாகப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 30க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பாதுகாவலர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் இந்த இல்லத்தின் தலைவர் கிமி கோண்டோ அவர்கள் கூறியுள்ளார்.
முதியோர்கள் உற்சாகம்
குழந்தைகளை வேலைக்கு வைப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்த இல்லத்தில் இருக்கும் முதியவர்கள், 'நாங்கள் இங்கு வரும் குழந்தைகளை பார்க்கும்போது எங்கள் வீட்டில் உள்ளவர்களை பார்ப்பது போல் இருக்கிறது என்றும் அவர்களுடன் விளையாடுவது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது என்றும் நாங்கள் குழந்தைகளின் பெற்றோர்களாகவே மாறியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
தேவையான வசதி
இந்த முதியோர் இல்லத்தில் பணியில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு தேவைப்படும் உடைகள், உணவு மற்றும் பால் பாக்கெட் உள்பட அனைத்தும் இல்லத்தின் நிர்வாகமே செய்து கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு பணிபுரிய வரும் குழந்தைகளுக்கு கை நிறைய சம்பளமும் வழங்கப்படுகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.
புத்துணர்ச்சி
குழந்தைகளுடன் விளையாடுவது, பூங்காவில் நடைப்பயிற்சி செய்வது உள்ளிட்டவை இங்கிருக்கும் முதியோர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது என்றும் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக குழந்தைகளுடன் இருக்கிறார்கள் என்றும் இந்த முதியோர் இல்லத்தில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தாத்தா பாட்டி உறவு
சில குழந்தைகள் எங்கள் முதியோர்கள் உடன் மிகவும் நன்றாக பழகுகிறார்கள் என்றும் அவர்கள் உண்மையாகவே இந்த முதியவர்களை தாத்தா பாட்டி என்று அழைத்து பேரக்குழந்தைகளை போல் இருப்பது ஒரு குடும்ப உறவை ஏற்படுத்துகிறது என்றும் முதியோர் உள்ள நிர்வாகி தெரிவித்துள்ளார்.