அகமதாபாத்: இந்தியாவின் மிகப்பெரிய ஆறாவது நகரமும், குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் அகமதாபாத் ஆகும்.
உலகினையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து குஜராத்தில் 432 பேருக்கு கொரோனாவின் தாக்கம் உள்ள நிலையில், அங்கு 22 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
அபராதம் அல்லது தண்டனை
அகமதாபாத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, வரும் திங்கள்கிழமை முதல் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ .5,000 அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தாக்கம்
உலகமெங்கும் தனது ஆதிக்கத்தினை பரப்பி வரும் கொடிய கொரோனா தொற்று நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் எங்கும் பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 8447 பேரை பாதித்துள்ளது. இதே இந்தியாவில் இதுவரை கொரோனாவினால் 273 பேர் பலியாகியுள்ளனர்.
நாளை முதல் கட்டாயம்
அகமதாபாத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் புதியதாக 19 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன, இதுவரை அகமதாபாத் நகரத்தில் மட்டும் மொத்தம் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இனி வரும் நாட்காளில் தாக்கத்தினை கட்டுப்படுத்த, அகமதாபாத்தில் முகக்கவசம் அணிவது நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் நகராட்சி ஆணையர் அறிக்கை
இதுகுறித்து அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், திங்கள்கிழமை காலை 6 மணி முதல், அகமதாபாத் நகர நகராட்சி எல்லையில் உள்ள அனைவரும் பொது இடங்களில் வெளியே செல்லும்போது கட்டாயமாக முகமூடி அணிய வேண்டியிருக்கும். முகமூடிகள் இல்லாமல் காணப்படுபவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அவ்வாறு அபராதத்தை கட்ட தவறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதை கட்டாயம் செய்யுங்க
அதோடு சந்தையில் கிடைக்கும் முகமூடிகளை மக்கள் அணியலாம் அல்லது துணியிலிருந்து தயாரிக்கலாம், அல்லது மூக்கு மற்றும் வாயை மறைக்கும் வகையில் ஒரு கைக்குட்டையை கூட கட்டிக் கொள்ளலாம். ஆனால் முகத்தில் முகக் கவசம் இல்லாமல் வெளியே வரக்கூடாது. இந்த உத்தரவு பொது இடங்களில், வணிகர்கள், கடைக்காரர்கள் மற்றும் பலர் உட்பட அனைவருக்கும் பொருந்தும், மேலும் இந்த அதிரடியான உத்தரவுக்கு 100% ஒத்துழைப்பு இருக்கும் என்று நம்புகிறோம் என்றும் அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் இப்படி நடவடிக்கை கொண்டு வந்தால் நன்றாகத் தான் இருக்கும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.