இன்றைய நெருக்கடியான நிலையில் கூட சற்றே வளர்ச்சியில் உள்ள ஒரே துறை விவசாயம் தான்.
நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத் துறையில், மூன்று மசோதாக்களுக்கு கடந்த ஜூன் மாதம் 5ம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும் அந்த மூன்று மசோதாக்களும் மக்களவையில் நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் இன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. சரி அப்படி என்ன தான் சட்டத்தினை அரசு கொண்டு வந்துள்ளது. எதற்காக இவ்வளவு எதிர்ப்புகள். வாருங்கள் பார்க்கலாம்.
என்னென்ன சட்டங்கள்?
1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020
2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020
3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்போது, அவற்றை ஏற்றுமதி செய்யவும் சேமித்து வைக்கவும் அரசு அவ்வப்போது கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இப்போது வந்துள்ள சட்டத் திருத்தத்தின் படி இம்மாதிரி கட்டுப்பாடுகளை பின்வரும் சூழலில்தான் விதிக்க முடியும்.
விவசாயத்துறைக்கு முதலீடுகளை அதிகரிக்கும்
விளை பொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும், விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் அளிக்கப்படும் என்கிறது மத்திய அரசு. அதோடு இந்த சட்டத்தின் மூலம் இந்தத் துறையின் பொருளாதாரம் மேம்பட்டு, நேரடி அந்நிய முதலீடு விவசாயத் துறையில் கிடைக்குமென மத்திய அரசு நம்புகிறது. அதாவது விவசாயத் துறைக்கு தேவையான குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றைக் கட்டத் தேவைப்படும் முதலீட்டை இந்தச் சட்டம் எளிதாக்கும்.
விவசாய பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும்
இரண்டாவதாக உள்ள விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டத்தைப் பொருத்த வரை, விவசாய விளை பொருட்களை மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எங்கும் வர்த்தகம் செய்ய வழி வகுக்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு தங்கள் உற்பத்தி பொருட்களுக்குக் கூடுதல் விலை கிடைக்குமென அரசு கூறுகிறது.
என்ன பிரச்சனை
ஆனால் இந்த சட்டத்தினால் விவசாய வர்த்தகத்தின் மீது மாநில அரசு கொண்டிருக்கும் கட்டுப்பாடு, இந்தச் சட்டத்தின் மூலம் காணமல் போகிறது என்கிறது மற்றொரு. அதாவது மாநில அரசுகளின் சட்டம் செயல்படுத்த முடியாமல் போகிறது. ஏனெனில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள், மற்றொரு மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் சொல்லலாம். உதாரணத்திற்கு தமிழகத்தில் விளையும் நெல்லினை அதிகமாக மற்ற மாநிலங்கள் வாங்கிச் செல்லாம். ஆனால் இதனால் தமிழகத்தில் நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்கிறது தான் இங்கு அச்சமே.
ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்
மூன்றாவது சட்டம், விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. விவசாயிகளுடன் எந்த மூன்றாவது நபரும் ஒப்பந்தம் செய்துகொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. அதாவது விவசாய கான்ட்ராக்ட்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.
மூன்று தரப்பினருக்கும் பயன்
மத்திய அரசினை பொறுத்த வரையில், இந்த மூன்று சட்டங்களின் மூலம் விவசாயிகள் தங்கள் விலை பொருட்களுக்கு நல்ல விலையைப் பெற முடியும். அதோடு கூடுதலான வர்த்தக வாய்ப்புகளும் கிடைக்கும் என்கிறது. மேலும் இதனால் நுகர்வோரும் வர்த்தகர்களும் பயனடைவார்கள். ஆகவே விவசாயிகள் உட்பட மூன்று தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய சட்டங்கள் இவை என்கிறது மத்திய அரசு தரப்பு.
மானியங்கள் என்ன ஆவது?
இந்த மசோதாக்கள் சில வகையில் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் விதமாக இருந்தாலும், மின்சாரம் மற்றும் நீர், உரங்கள் என சிலவற்றிற்கு கிடைத்து வரும் மானியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகின்றது. இந்த புதிய சட்டங்கள் விவசாயத்தை நேரடி அரசு ஆதரவிலிருந்து, அதிக சந்தை வாய்ப்புள்ள சார்ந்த அமைப்புக்கு நகர்த்துவதற்கான கட்டமைப்பை நிறைவு செய்கின்றன. இப்படி பல வகையிலும், இந்த மசோதாக்கள் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டு தான் இருகின்றன.