இந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் சென்செக்ஸ் சுமாராக 41,300 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது.
அப்போது யாராவது இந்த ஆண்டில் சென்செக்ஸ் 36,000 புள்ளிகளைத் தொடலாம் என்று சொல்லி இருந்தால் வாய் விட்டு சிரித்து இருப்பார்கள்.
ஆனால் இப்போது உண்மையாகவே சென்செக்ஸ் தன் 36,000 புள்ளிகளை இழுத்துப் பிடித்துக் கொள்ள போராடிக் கொண்டு இருக்கிறது.
6400 புள்ளிகளா
கடந்த ஜனவரி 20, 2020 அன்று சென்செக்ஸ் 42, 273 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது சென்சென்ஸ். இன்று சென்செக்ஸ் தன் குறைந்தபட்ச புள்ளியாக 35,857 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக 42273 - 35857 = 6416 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.
பொதுவான காரணங்கள்
இந்த படு கோர சரிவுக்கு என்ன காரணங்கள் என்று கேட்டால்...கொரோனா வைரஸ் பயம்,
யெஸ் பேங்கை மத்திய ரிசர்வ் வங்கி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது,
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது,
ஆசிய சந்தைகள் தொடக்கத்தில் இருந்தே கடுமையான இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது.. என பல காரணங்கல் ஒன்று சேர்ந்து இந்திய சந்தையை கொத்து பரோட்டா போட்டுக் கொண்டு இருக்கிறது. இவைகளை விரிவாகப் பார்ப்போம்.
கொரோனா வைரஸ்
உலக பொருளாதாரத்தையே நேரடியாக பாதிக்கும் சக்தி கொரோனாவுக்கு இருக்கிறது. சமீபத்தில் தான் விமான சேவை நிறுவனங்கள், இந்த கொரோனாவால் சுமார் 113 பில்லியன் டாலர் வருவாயை இழக்க வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார்கள். அதே போல ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சீனாவில் இருந்து வர வேண்டிய மூலப் பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் வருவதில் தாமதம் இருப்பதால், தங்கள் உற்பத்தி தடைபடுவதாகச் செய்திகள் வெளியாயின.
கொரோனா 2
ஃபேஸ்புக், ஆப்பிள், கூகுள், ட்விட்டர் என பல பெரிய நிறுவனங்களின் அலுவலகங்களும் வழக்கம் போல இயங்க முடியாமல், ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். கம்பெனி சரியாக இயங்கவில்லை என்றால், கம்பெனிக்கு வரும் லாபம் குறையத் தானே செய்யும். இதனால் பொருளாதாரம் பலத்த அடி வாங்கும் என்கிற பதற்றம், சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. சென்செக்ஸும் சர சரவென சரிந்து கொண்டு இருக்கிறது.
யெஸ் பேங்க் பிரச்சனை
யெஸ் பேங்கின் நிர்வாகத்தை ஆர்பிஐ எடுத்துக் கொண்டதை நாம் அறிவோம். குறிப்பாக, யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் தங்கள் யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் இருந்து 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் எனச் சொன்ன கட்டுப்பாடுகளையும் நாம் அறிவோம். இதற்கு எல்லாம் என்ன காரணம் என்று கேட்டால் யெஸ் பேங்க் தன் வாரா கடன்களை குறைத்துக் காட்டியதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
வாரா கடன் மோசடி
கடந்த 2016 - 17 நிதி ஆண்டில் ஆர்பிஐ கணக்குப் படி 8,373 கோடி ரூபாய் வாராக் கடன் வந்தது. ஆனால் யெஸ் பேங்கோ வெறும் 2,018 கோடியை மட்டுமே வாராக் கடனாக கணக்கு காட்டியது. ஆக சுமார் 6,355 கோடி ரூபாய் வாரா கடனை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டு பிடித்தது ஆர்பிஐ. இதன் பின் தான் யெஸ் பேங்கின் தவறுகள் எல்லாம் வெளியே வரத் தொடங்கின. கடைசியில் மொத்த நிர்வாகமும் ஆர்பிஐ தன் பொறுப்பில் எடுத்து இருக்கிறது.
முதலீட்டாளர்கள் பதற்றம்
இதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளில் வங்கிப் பங்குகள் எல்லாம் தரை தட்டத் தொடங்கின. ஒரு காலத்தில் 404 ரூபாய்க்கு விற்ற யெஸ் பேங்க் பங்கு வரலாறு காணாத அளவுக்கு வெறும் 5.55 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானதும் குறிப்பிடத்தக்கது. இந்த் யெஸ் பேங்க் செய்தியை இன்னும் முதலீட்டாளர்கள் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் பதற்றமாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஐரோப்பிய சந்தைகள்
அமெரிக்காவின் நாஸ்டாக் மார்ச் 6 அன்று 1.87 % சரிந்தது. அதே மார்ச் 06 அன்று லண்டனின் எஃப் டி எஸ் இ 3.62 % சரிவு, பிரான்ஸின் சி ஏ சி 4.14 % சரிவு, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 3.37 % சரிவு என ஐரோப்பிய சந்தைகள் எல்லாமே சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அவர்களே சரியும் போது ஆசிய சந்தைகளும் சரியத் தானே செய்யும்.
ஆசிய சந்தைகள்
இன்றைய வர்த்தகத்தில் அதிகம் சரிந்து கொண்டு இருக்கும் ஆசியச் சந்தை என்றால் அது ஜப்பானின் நிக்கி தான். 5.96 % சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அதே போல ஆசிய சந்தைகளில் மிகக் குறைவாக சரிந்த சந்தை என்றால், அது தைவான் வெயிடெட் தான் 2.54 % சரிந்து இருக்கிறது. ஆக ஐரோப்பிய சந்தைகளை விட ஆசிய சந்தைகள் பலத்த அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது. உலக சந்தைகளே சரியும் போது, இந்திய சந்தைகள் எம்மாத்திரம் அதான் 1,500 புள்ளிகள் சரிந்துவிட்டது.
டாலர் Vs ரூபாய்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. டாலர் மதிப்பு அதிகரித்தால், இந்திய ரூபாய் மதிப்பு குறையும். விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், டாலர் மதிப்பு கூடினால் நாம் அதிகம் இந்திய ரூபாய் கொடுத்து டாலரை வாங்க வேண்டி இருக்கும். இதனால் இந்தியாவுக்கு வர்த்தக ரீதியாக நஷ்டம் தானே ஏற்படும். இந்த விஷயமும் நம் சந்தைகளை ஒரு தாக்கு தாக்கி இருக்கிறது. எனவே சென்செக்ஸ் 36,150 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.