கொரோனா பாதிப்பால் இந்திய முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மாறியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதே காலகட்டத்தில் இந்திய நுகர்வோர் சந்தையில் மிகப்பெரிய மாற்ற நிகழ்ந்துள்ளதாகவும், மக்களின் பொருட்களை வாங்கும் விருப்பம் பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளதாகச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது.
இந்த லாக்டவுன் காலத்தில் பல லட்சம் மக்கள் வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தை இழந்து நாட்டில் பெரிய அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்தக் காலகட்டத்தில் பல முக்கியப் பொருட்கள் எதிர்பாராத விதமாக அதிகளவில் விற்பனையாகி ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.
அப்படி மக்கள் எந்தெந்த பொருட்களை அதிகளவில் வாங்கியுள்ளனர் என்பதைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பு மருந்துகள்
முதலும் முக்கியமாகக் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு மருந்துகளை எப்போதும் இல்லாத வகையில் அதிகளவில் வாங்கியுள்ளனர். அதிலும் முக்கியமாக டாபர் மற்றும் ஹிமாலயா நிறுவனங்களின் ஆயுர்வேத தயாரிப்புகளான chyawanprash மற்றும் Septilin ஆகியவற்றை அதிகளவில் வாங்கியுள்ளனர்.
chyawanprash
ஏப்ரல் முதல் ஜூன் காலகட்டத்தில் chyawanprash விற்பனை 700 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் டாபர் மற்றும் பதஞ்சலி ஆகிய நிறுவனங்கள் இக்காலக்கட்டத்தில் அதிகளவிலான விற்பனையைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
எளிய உணவுகள்
இக்காலகட்டத்தில் மக்கள் அதிகம் வெளியில் செல்ல விரும்பாத நிலையில் எளிய உணவுகளாகக் கருதப்படும் காலையில் சாப்பிடம் சீரியல்ஸ், நூடில்ஸ், பலவிதமான அரசி வகைகள், பலகார வகைகள் தயாரிக்க உதவும் பல பொருட்களின் விற்பனை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
இதில் முக்கியமான நெஸ்லேவின் மேகி, கிட்கேட், மன்ச் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்து இந்நிறுவனத்தின் விற்பனை 10 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
பிஸ்கட்
இதேபோல் இந்த லாக்டவுன் காலத்தில் யாரும் எதிர்க்காத வகையில் பிஸ்கட் விற்பனை இந்தியாவில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. குறிப்பாகப் பார்லே நிறுவனத்தின் பார்லே ஜி விற்பனை வரலாற்று உச்சத்தை அடைந்து ஆச்சரியத்தைக் கொடுத்தது. இதேபோல் பிஸ்கட் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் பிரிட்டானியா நிறுவனமும் அதிகளவிலான விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
டிஜிட்டல் சேவைகள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது அனைவரும் வீட்டிலேயே இருக்கும் காரணத்தால் திரையின் முன் அமர்ந்திருக்கும் நேரம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாகக் குழந்தைகளுக்கான கல்வி சேவையை அளிக்கும் Byju's நிறுவனத்தின் வர்த்தகம் ஏபர்ல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் சுமார் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இந்நிறுவனம் பல மொழி கல்வி மற்றும் பாடங்களைத் தனது சேவை பிரிவில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதேபோல் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், Zee5, ஹாட்ஸ்டார் ஆகிய எண்டர்டெயின்மென்ட் சேவையைப் பெற்றவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
ஹோம் அப்ளையன்ஸ்
இந்த லாக்டவுன் காலத்தில் இந்திய மக்கள் மத்தியில் ஜூசர், மிக்சர், மைக்ரோவேவ் ஓவன், டோஸ்டர் ஆகியவற்றுக்கான தேடல் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஜூன் மாதத்தில் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல் vacuum cleaners-க்கான தேவை மக்கள் மத்தியில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளதாக முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் தெரிவித்துள்ளது.
டிரிம்மர்
கொரோனா தொற்றுக்காக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் சலூன்கள் மூடப்பட்டது. இதனால் நாட்டில் ஆண்களின் grooming kits, அதாவது டிரிம்மர், ஷேவிங் செட், பிளேட், ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.
இதில் மிகவும் முக்கியமாகப் பிலிப்ஸ் நிறுவனத்தின் டிரிம்மர் விற்பனை 60 முதல் 70 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
தங்க கடன்
கடைசியாகக் கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் பல லட்ச மக்கள் வேலையும் வருமானத்தையும் இழந்து நிற்கும் நிலையில், மக்கள் தங்களின் பணத் தேவைக்காகத் தங்க நகைகளை அடைமானம் வைத்தும் விற்பனை செய்தனர். இதன் எதிரொலியாக முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் 57 சதவீதமும், மனப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் தங்க நகைக்கான வர்த்தகமும் 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது.