ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அரசின் நிதிநிலை மிகவும் மோசமாக இருக்கிறது எனக் கூறியது. தமிழ்நாட்டின் வளர்ச்சி அளவீடு, கடன் அளவீடு கடந்த சில வருடங்களாகவே சரிவைச் சந்தித்து வருவது நம் அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு மக்களுக்கு உண்மை அளவீட்டைத் தெரிவிக்க வேண்டும் எனவும், நிதிநிலை விஷயத்தில் மக்களிடம் வெளிப்படைத்தன்மை உடன் நடந்துகொள்ள வேண்டும் எனத் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதவியேற்றது முதல் கூறி வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையைச் சட்டமன்றத்தில் இன்று காலை 11.30 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
இதுதான் முதல் முறையா..?
தமிழகத்தில் 2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த சி. பொன்னையன் அவர்கள் பட்ஜெட் தாக்கலின் போது தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கைகளை அதிமுக அரசு வெளியிடவில்லை.
ஸ்டாலின் தலைமையிலான அரசு
ஸ்டாலின் தலைமையிலான திமுகக் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி அமைந்ததும் நிதி நிலவரம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட முடிவு செய்யப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சட்டசபையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்பதை அறிவித்திருந்தார்.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்குத் தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலகத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
120 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கை
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான குழு தயாரித்துள்ள சுமார் 120 பக்கங்கள் கொண்ட இந்த வெள்ளை அறிக்கையில் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அவைகளுக்கான செலவுகள் அகியவற்றும் இடம்பெறும்.
நிதியியல் முறைகேடு
இவை அனைத்திற்கும் மேலாகப் பழனிவேல் தியாகராஜன் பல முறை கூறியது போல் மக்களின் பணத்தை அதிமுக அரசு பல திட்டங்களுக்கு முறையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளது அதாவது 'financial mismanagement' செய்யப்பட்டு உள்ளதை இந்த வெள்ளை அறிக்கையில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட உள்ளது.
ஆய்வுக் குழு கூட்டம்
மேலும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்ட கையோடு ஆகஸ்ட் 13ஆம் தேதி நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு முன்பு 10ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
வெள்ளை அறிக்கை முக்கியம்
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய இன்று வெள்ளை அறிக்கை மிகப்பெரிய அளவில் உதவும். இந்த வெள்ளை அறிக்கை மூலம் எந்தத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், எந்த இடத்தில் அதிகளவிலான நிதி முடங்கியுள்ளது என்பதை இந்த வெள்ளை அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டிவிடும்.
தமிழ்நாட்டின் பட்ஜெட் அறிக்கை
மேலும் இதைத் தொடர்ந்து 13ஆம் தேதி அறிவிக்கப்படும் பட்ஜெட் அறிக்கை தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தும். தமிழக அரசு முதல் முறையாகப் பேப்பர்லெஸ் அதாவது டிஜிட்டல் முறையில் பட்ஜெட் அறிக்கையைத் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளது.
பேப்பர்லெஸ் பட்ஜெட் அறிக்கை
இந்தப் பேப்பர்லெஸ் பட்ஜெட் அறிக்கை திட்டத்தை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபை உறுப்பினராக இருந்த காலகட்டத்திலேயே முன்னாள் தமிழக அரசுக்குக் கோரிக்கையாக வைத்தார். தற்போது முதல் பட்ஜெட் தாக்கலில் பழனிவேல் தியாகராஜன் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் பேப்பர்லெஸ் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார்.
மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு
மேலும் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கை குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தப் பட்ஜெட் அறிவிப்பில் திமுகத் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய், பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு போன்ற அறிவிப்புகள் இடம் பெறுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட்
இதேபோல் தமிழக அரசு முதல் முறையாக உருவாக்கியுள்ள விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட்-ஐ நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இது விவசாயிகள் மத்தியில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
விவசாயிகள்
தமிழ்நாட்டில் பருவமழை அளவு, நீர் சேமிப்பு அளவு ஆகியவை சிறப்பாக இருக்கும் பட்சத்தில் விவசாயத் துறைக்கான சிறப்புப் பட்ஜெட் தமிழ்நாட்டின் விவசாய உற்பத்தி அளவை மேம்படுத்தும். இதேவேளையில் விவசாயிகள் நலனையும் பாதுகாக்க முடியும் என நம்பப்படுகிறது.