கார் என்பது இன்றளவும் 50 சதவீத இந்திய குடும்பங்களுக்கு வெறும் கனவாகவே இருக்கும் ஒன்று, ஆனால் இப்படிப்பட்ட காரை அனைத்து நடுத்தரக் குடும்பங்களுக்கும் அளிக்க வேண்டும் என ஒருவர் நினைத்துள்ளார், அதுவும் 15 வருடத்திற்கு முன்பாக..
ஆம், ரத்தன் டாடா அந்த ஒரு நிகழ்வைப் பார்த்துத் தான் உண்மையாகவே நேனோ கார் உருவாக்க வேண்டும் என்றும் தோன்றியதாகத் தெரிவித்துள்ளார்.
டாடா மோட்டார்ஸ்
2008 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக இருந்த டாடா மோட்டார்ஸ் சிறிய வடிவிலான காரான நானோவை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்திய குடும்பங்கள் மலிவான விலையில் கார்களை வாங்கும் வாய்ப்பு உருவானது.
ரத்தன் டாடா
ரத்தன் டாடா தலைமையில் இயங்கி வந்த டாடா மோட்டார்ஸ் வெறும் 1 லட்சம் விலையில் நேனோ கார்-ஐ அறிமுகம் செய்து இந்தியா மட்டும் அல்லாமல் இன்றளவும் உலகம் முழுவதும் வியக்கவைக்கும் அளவிலான புரட்சியை 15 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கினார்.
இந்திய குடும்பங்கள்
நானோ பல இந்திய குடும்பங்களின் 'முதலில் வாங்கிய கார்' என்பதால் அவர்களுக்குச் செண்டிமெண்ட் காராகவும் பலருக்கு மாறியது. ஆனால் இந்தக் கார் சில ஆண்டுகளிலேயே உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தப்பட்டது. இப்படிப்பட்ட காரை உருவாக உண்மையான காரணத்தை ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் வெளியிட்டுள்ளார்.
உண்மையான காரணம்
உண்மையில் இத்தகைய வாகனத்தைத் தயாரிக்கும் ஆசையைத் தூண்டியது, ஸ்கூட்டர்களில் இந்தியக் குடும்பங்களைத் தொடர்ந்து பார்த்தது தான், அதிலும் குறிப்பாக இரு சக்கரங்களில் குழந்தை தாய்க்கும் தந்தைக்கும் இடையில் அமர்ந்து செல்லும் காட்சி தான்.
பாதுகாப்பு
இரண்டு பேர் மட்டுமே செல்லக்கூடிய வாகனத்தில் 3 பேர் 4 பேர் செல்லும் போது குறிப்பாக வழுக்கும் சாலைகளில் செல்லும் போது, அவர்களுக்கான பாதிப்பு தான் நேனோ கார் உருவாக்க அடிப்படை எண்ணமாக இருந்தது என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
டூடுல்
ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சரில் படித்ததன் பலன்களில் ஒன்று, நான் ஓய்வாக இருக்கும்போது டூடுல் செய்ய எனக்குக் கற்றுக் கொடுத்தது. முதலில் நாங்கள் இரு சக்கர வாகனங்களை எவ்வாறு பாதுகாப்பானதாக மாற்றுவது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம்.
மக்களுக்கான கார்
அதன் பின்பு டூடுல்கள் நான்கு சக்கரங்களாக மாறிவிட்டன, ஜன்னல்கள் இல்லை, கதவுகள் இல்லை. ஆனால் அது ஒரு காராக இருக்க வேண்டும் என்று நான் இறுதியாக முடிவு செய்தேன். இதன் பின் உருவானது தான் நானோ. டாடா மோட்டார்ஸ்-ன் நேனோ எப்பொழுதும் நம் மக்களுக்கானது என ரத்தன் டாடா பதிவு செய்தார்.
எலான் மஸ்க்
சில வருடங்களுக்கு முன்பு எலான் மஸ்க்-யிடம் டாடா நேனோ கார் குறித்தும், அதன் விலை குறைத்தும், இத்தகைய மலிவான கார்களின் முக்கியதுவம் குறித்துக் கேள்வி கேட்ட போது, நேனோ மற்றும் ரத்தன் டாடா மீது எப்போதும் பெரிய மரியாதையும், மதிப்பும் உள்ளது. அவருடைய பணி பல நாடுகளுக்கு முன்னுதாரணம்.
பாதுகாப்பு தான் பிரச்சனை
ஆனால் பாதுகாப்பு என்பதைப் பார்க்கும் போது தான் பிரச்சனை, இதே காரணத்திற்காகத் தான் டாடாவும் நேனோ கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தியது. போதுமான பாதுகாப்புகளைக் காரில் கொண்டு வந்தால் அதன் விலை அதிகரிக்கத் துவங்கியது. இதனால் நேனோ காருக்கான அடிப்படை காரணம் மாறும் நிலையில், தயாரிப்பை நிறுத்தியது டாடா மோட்டார்ஸ்.