மும்பை: மும்பையில் தி எக்கனாமிக்ஸ் டைம்ஸ் மார்க்கெட்ஸ் சர்வதேச உச்சிமாநாட்டின் போது நிதி கொள்கை குறித்த குழு விவாதம் நடைபெற்றது.
இதில், பங்கேற்றவர்களில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யாவும் ஒருவர். 2017 ஜனவரி 23ம் தேதி, ரிசர்வ் வங்கியின் 4 துணை ஆளுநர்களில் ஒருவராக அரசால் நியமிக்கப்பட்டார் வைரல் ஆச்சார்யா.
மூன்று ஆண்டு காலம் அவர் பதவியில் தொடருவார் என அப்போது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பதவிக்காலம் முடிவடைய இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், வைரல் ஆச்சாரியா, ராஜினாமா செய்தார்.
ஓய்வு பெற்ற வைரல் ஆச்சாரியா
ரிசர்வ் வங்கி விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாக, பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தவர் வைரல் ஆச்சாரியா. 2018 அக்டோபரில் மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில், பேசிய வைரல் ஆச்சாரியா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து கவலை தெரிவித்திருந்தார். எனவே, இவரது ராஜினாமா அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், இவர், நியூயார்க் யுனிவர்சிட்டி ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸுக்கு (என்.ஒய்.யு ஸ்டெர்ன்) திரும்பினார்.
நிதி ஸ்திரத்தன்மை அவசியம்
இந்த நிலையில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து, வைரல் ஆச்சாரியா பேசுகையில், நடைமுறை பொருளாதாரத்திற்கு, நிதிக் கொள்கை சென்று சேர வேண்டுமானால், நிதி ஸ்திரத்தன்மை என்பது மிக மிக அவசியம். எந்தவொரு நாட்டிலாவது நிலையான நன்கு மூலதன நிதித் துறை இல்லை என்றால், நிதிக் கொள்கையிலிருந்து உண்மையான பொருளாதாரத்திற்கு சரியான விகிதத்தில் பரிமாற்றம் செய்வது கஷ்டமான விஷயமாகிவிடும் என்று தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி வேலை அல்ல
மேலும் அவர் கூறுகையில், பொருளாதார கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்ப்பது ரிசர்வ் வங்கியின் வேலை அல்ல. நிதி கொள்கை என்பது பொருளாதாரத்தின் கட்டமைப்பு பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக அல்ல. இது சுழற்சியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சரிகட்ட மட்டுமே. உங்கள் நிதிக் கட்டமைப்பு சரியாக இல்லாவிட்டால் மற்றும் அரசு நிதி நிலையானதாக இல்லாவிட்டால், பொருளாதாரத்தில் ஏற்படும் மந்தநிலையை விரைவாக சரிசெய்ய நிதிக் கொள்கை பலனளிக்காது என்றார்.
பணப்புழக்கம்
மெக்லாய் நிதிச் சேவைகளின் ஜமால் மெக்லாய், பேசுகையில், உலகப் பொருளாதாரம் பெரும் குழப்பத்தில் உள்ளது. அதிகப்படியான பணப்புழக்கமே இதற்கு முக்கிய காரணம். உலகில் அதிக மூலதனம் இருக்கிறது. 40 ஆண்டுகளாக, வரிவிதிப்பு என்றால் அதில் தப்பிக்க மூலதனமே மாற்றாக முன்வைக்கப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் மூலதனத்தை செலவிடுவது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு கூட உலகில் அதிக மூலதனம் இருந்தது.
தனி நபர் வருமான வரி
குறைந்த சம்பளம் பெறும் நபர்கள் மீதான தனிநபர் வருமான வரியை நீக்குவதும், குறைந்தபட்ச சம்பளத்தை விட 200 மடங்கு சம்பாதிக்கும் தனிநபர்கள் மீது அதிக வரி விதிப்பதும் அவசியம். தனி நபர் வருமான வரியால் மக்கள் அவதிப்படுவதே மிச்சம். ரியல் எஸ்டேட் வருமானத்தில் அரசுகள் கவனம் செலுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.