மெட்டா நிறுவனத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவான வாட்ஸ்அப்-ன் இந்திய கிளையின் தலைவர் அபிஜித் போஸ் தனது பதவியை விட்டுவெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா-வின் இந்திய கிளை நிறுவனத்தின் தலைவர் அஜித் மோகன் தனது பதவியில் இருந்து விலகுவதாக நவம்பர் 3 ஆம் தேதி அறிவித்த நிலையில், தற்போது அபிஜித் போஸ் வெளியேறியுள்ளது மற்றொரு உயர்மட்ட அதிகாரி வெளியேறியதால் மெட்டா இந்தியா மொத்தமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
யார் இந்த அபிஜித் போஸ்..? வாட்ஸ்அப் இந்திய கிளையில் இவர் சாதித்தது என்ன..?
வாட்ஸ்அப் அபிஜித் போஸ்
வாட்ஸ்அப் இன்று அனைத்து தரப்பினரும், வயதினரும் பயன்படுத்தும் முக்கியச் சேவையாக இருக்கும் நிலையில், இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய முக்கியமான பொறுப்பில் இருக்கும் வாட்ஸ்அப் இந்தியாவின் தலைவர் அபிஜித் போஸ் தனது பதவியை ராஜினாமா செய்து வெளியேறியுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
பேஸ்புக் - ராஜீவ் அகர்வால்
இன்று அபிஜித் போஸ் மட்டும் அல்லாமல் பேஸ்புக்கின் பொதுக் கொள்கை இயக்குநர் ராஜீவ் அகர்வாலும் நிறுவன பதவிகளில் இருந்து மொத்தமாக வெளியேறியுள்ளார். சமீப காலமாக மெட்டா சேவைகள், பதவிகள் குறித்துப் பல சர்ச்சை வெளிவரும் நிலையில் தற்போது அடுத்தடுத்து உயர் அதிகாரிகள் வெளியேறுகின்றனர்.
முதல் தலைவர்
வாட்ஸ்அப் சேவைக்கு எந்த நாட்டிலும் தலைவர் பதவி கொடுக்கப்படாமல் இருந்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக
2018 ஆம் ஆண்டில் தலைவர் பதவியில் அபிஜித் போஸ் நியமிக்கப்பட்டார். அபிஜித் போஸ் நியமனம் மூலம் வாட்ஸ்அப் மிகவும் முக்கியமான வர்த்தகமாக மாறியதன் முதல் படியாக அமைந்தது.
வாட்ஸ்அப் பேமென்ட்
அபிஜித் போஸ் வாட்ஸ்அப் தளத்தின் பேமென்ட் வணிகத்தை இயக்கவும், இந்தியாவில் இந்த மெசேஜிங் செயலியின் வாடிக்கையாளர்களையும், பயன்பாட்டை அதிகரிக்கவும் வேண்டும் என்பதை அடிப்படை பொறுப்பாகக் கொடுக்கப்பட்டு இப்பதவியில் அமர்த்தப்பட்டார்.
Ezetap நிறுவனர் அபிஜித் போஸ்
அபிஜித் போஸ் வாட்ஸ்அப்-ன் இந்தியத் தலைவராக இணைவதற்கு முன்பு Ezetap என்ற பேமெண்ட் சேவை நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், Razorpay நிறுவனம் Ezetap-ன் அனைத்து பங்குகளையும் பணமாகக் கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.
மார்க் ஜூக்கர்பெர்க்
Meta தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் சமீபத்தில் 11,000 பேரை பணிநீக்கம் செய்த நிலையில், நவம்பர் மாதம் மட்டும் சுமார் 3 உயர் அதிகாரிகள் மெட்டா இந்தியா குழுமத்தை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால் 11000 ஊழியர்கள் பணிநீக்கத்திற்கும் இந்த 3 உயர் அதிகாரிகளின் ராஜினாமாவுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என மெட்டா தெரிவித்துள்ளது.
பொதுக் கொள்கை தலைவர் ஷிவ்நாத் துக்ரால்
இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களிலும் நிறுவனத்தின் பொதுக் கொள்கை பிரிவை தலைமை தாங்க வாட்ஸ்அப்பில் பொதுக் கொள்கை இயக்குநரான ஷிவ்நாத் துக்ரால் தற்போது மெட்டா நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அஜித் மோகன் - அபிஜித் போஸ்
ஆனால் இன்னும் மெட்டா இந்தியா தலைவர் அஜித் மோகன், வாட்ஸ்அப்-ன் இந்திய தலைவர் அபிஜித் போஸ் இடத்தில் யார் வரப் போகிறார் என மெட்டா அறிவிக்கப்படவில்லை. செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் இருக்கும் மெட்டா வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்றுக்கும் ஓரே தலைவரை நியமிக்க வாய்ப்பு உள்ளது.