இந்தியாவின் வாட்ஸ்அப் பே பிரிவின் தலைவராக இருந்த வினய் சோலெட்டி, சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை மட்டும் அல்லாமல் வாட்ஸ்ட் அப் இந்தியா, மெட்டா இந்தியா-வை விட்டு மொத்தமாக வெளியேறினார்.
இந்த நிலையில் வினய் சோலெட்டி அடுத்தாகத் தான் எந்த நிறுவனத்தில் சேரப்போகிறார் என்ற செய்தியை அறிவிக்காமல் இருந்த நிலையில், தற்போது டாடா குழுமம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் மூலம் அதிகளவிலான வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் பெற வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கியுள்ள டாடா குழுமம் வர்த்தகம், நிர்வாகம், தொழில்நுட்பம் என அனைத்து பிரிவுகளிலும் முக்கியமான அதிகாரிகளைச் சேர்த்து வருகிறது.
இந்த நிலையில் வாட்ஸ்அப் பே பிரிவின் தலைவராக இருந்த வினய் சோலெட்டி டாடா குழுமத்தின் முக்கியப் பொறுப்பில் சேர உள்ளார்.
மெட்டா இந்தியா
2021 அக்டோபர் மாதம் அமேசான் நிறுவனத்தில் இருந்து மெட்டா இந்தியாவில் சேர்ந்த வினய் சோலெட்டி விற்பனையாளர்கள் பேமெண்ட் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார், இதைத் தொடர்ந்து 4 மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் பே இந்தியாவின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார்.
வினய் சோலெட்டி
வினய் சோலெட்டி பதவி உயர்வு பெற்று 4 மாதத்தில் வினய் சோலெட்டி தனது பதவி ராஜினாமா செய்தார், இவருடன் சேர்ந்து கடந்த 3 மாதத்தில் 4 உயர் அதிகாரிகள் மெட்டா இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாடா டிஜிட்டல்
இந்த நிலையில் வினய் சோலெட்டி தற்போது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் பேமெண்ட் வர்த்தகத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டாடா Neu - சூப்பர் ஆப்
டாடா குழுமத்தின் அனைத்து வர்த்தகத்தையும் இணைக்கும் மிகவும் முக்கியமான சூப்பர் ஆப் டாடா Neu-ஐ நிர்வாகம் செய்து வரும் Tata Digital, கடந்த சில மாதமாக யூபிஐ பேமெண்ட் சேவையை உருவாக்கி தனது வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்குப் பேமெண்ட் சேவையை அளிக்க உள்ளது.
15 மாதம்
வினய் சோலெட்டி வாட்ஸ்அப் பே பிரிவில் சுமார் 15 மாதம் பணியாற்றியுள்ளார். மெட்டா இந்தியாவின் அடுத்தப் பெரிய வர்த்தகமாகப் பார்க்கப்பட்டது வாட்ஸ்அப் பே என்பதால் மட்டுமே அமேசான் நிறுவனத்தில் இருந்து வந்த வினய் சோலெட்டி-க்கு இப்பதவி கொடுக்கப்பட்டது.
டாடா டிஜிட்டல்-க்கு ஜாக்பாட்
ஆனால் இவருடைய வெளியேற்ற மெட்டா இந்தியாவுக்குப் பெரும் தோல்வியாக மாற உள்ள நிலையில் டாடா டிஜிட்டல்-க்கு ஜாக்பாட் ஆக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருடைய நியமனம் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை, பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருகிறது.
டாடா டிஜிட்டல் உயர் அதிகாரிகள் வெளியேற்றம்
இதற்கிடையில், டாடா டிஜிட்டல் தலைவர் முகேஷ் பன்சால் நியமித்த ஷரத் புலுசு மற்றும் பிரதீக் மேத்தா ஆகிய இரண்டு மூத்த நிர்வாகிகள் இந்த நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் வெளியேறினர். ஷரத் புலுசு மற்றும் பிரதீக் மேத்தா இருவரும் டாடா குழுமத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவாக மட்டுமே பணியாற்றியுள்ளனர்.
ஷரத் புலுசு மற்றும் பிரதீக் மேத்தா
டாடா டிஜிட்டல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய ஷரத் புலுசு மைந்த்ரா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியாகப் பணியாற்றியவர், தற்போது மீண்டும் தான் பணியாற்றிய கூகுள் நிறுவனத்திற்குச் சென்றுள்ளார். அதேபோல் பிரதீக் மேத்தா ஏஞ்சல் ஒன்னில் இணைந்தார்.