பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா அமெரிக்கா-வில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் தனது வர்த்தகத்தில் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், பல உயர் அதிகாரிகள் வெளியேறியும் வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியச் சந்தையைப் பார்த்தால் மெட்டா நிறுவனரும், தலைவருமான மார்க் ஜூக்கர்பெர்க் 11000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்த சில நாட்களில் பல உயர் அதிகாரிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய தலைவராகச் சந்தியா தேவநாதன் என்பவரை நியமித்தது.
புதிய தலைவர் வந்த பின்பும் மெட்டா இந்தியாவில் உயர் அதிகாரிகள் வெளியேறுவது குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.
மெட்டா இந்தியா
மெட்டா இந்தியாவின் அடுத்தப் பெரிய திட்டமாகப் பார்க்கப்படும் வாட்ஸ்அப் பே சேவை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகப் பல வருடமாகத் திட்டமிட்டு வருவது மட்டும் அல்லாமல் இப்பிரிவுக்குப் புதிய தலைவரை நியமித்து வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என மெட்டா இந்தியா திட்டமிட்டது.
வாட்ஸ்அப் பே சேவை
இதைத் தொடர்ந்து அமேசான் நிறுவனத்தில் இருந்து அக்டோபர் 2021ல் மெட்டா இந்தியாவில் சேர்ந்த வினய் சோலெட்டி பேமெண்ட் பிரிவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார், இதைத் தொடர்ந்து 4 மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் பே இந்தியாவின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார், இதற்கு முன்பு விற்பனையாளர்கள் பேமெண்ட் பிரிவின் தலைவராக இருந்தார்.
வினய் சோலெட்டி
இந்த நிலையில் பதவி உயர்வு பெற்று 4 மாதத்தில் வினய் சோலெட்டி தனது பதவி ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து தனது லின்கிடுஇன் தளத்தில் இந்தியா மக்கள் டீ மூலம் உயிர் வாழ்கிறார்கள் எனப் பலரும் சொல்லி கேட்டு இருப்போம், ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இந்தியா மக்கள் வாட்ஸ்அப் இணைப்பு மூலம் வாழ்கின்றனர். இன்றுடன் வாட்ஸ்அப் பே இந்தியா பிரிவின் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் எனத் தெரிவித்தார்.
அஜித் மோகன்
மார்க் ஜூக்கர்பெர்க் 11000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்த சில நாட்களுக்கு முன்பே மெட்டா இந்தியா பிரிவின் தலைவர் அஜித் மோகன் இந்த முடிவை எற்க முடியாமல் மெட்டா-வின் இந்திய கிளை நிறுவனத்தின் தலைவர் அஜித் மோகன் தனது பதவியில் இருந்து விலகுவதாக நவம்பர் 3 ஆம் தேதி அறிவித்தார். இதைச் சக போட்டி நிறுவனமான ஸ்னாப்சாட் நிறுவனத்தின் ஆசிய சந்தையின் தலைவராகச் சேர்ந்தார்.
அபிஜித் போஸ் - ராஜீவ் அகர்வால்
அஜித் மோகன்-ஐ தொடர்ந்து அடுத்த சில நாட்களிலேயே வாட்ஸ்அப் இந்தியாவின் தலைவர் அபிஜித் போஸ் தனது பதவியை ராஜினாமா செய்து வெளியேறியுள்ளது பெரும் அதிர்ச்சி அளித்தது. பேஸ்புக்கின் பொதுக் கொள்கை இயக்குநர் ராஜீவ் அகர்வாலும் நிறுவன பதவிகளில் இருந்து மொத்தமாக வெளியேறினார்.
சந்தியா தேவநாதன்
அஜித் மோகன் ராஜினாமா தொடர்ந்து யாரை அடுத்த இந்திய பிரிவு தலைவராக நியமிப்பது என யோசித்து வந்த மார்க் ஜூக்கர்பெர்க் நிர்வாகம் மெட்டா இந்தியாவின் துணைத் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த சந்தியா தேவநாதன் என்பவரை நியமிப்பதாக நவம்பர் 17 அன்று மெட்டா இந்தியா தெரிவித்தது.
ஜனவரி 1
மெட்டா இந்தியாவின் துணை தலைவர் பதவியில் சந்தியா தேவநாதன் ஜனவரி 1, 2023 முதல் தனது பணியைத் துவங்க உள்ள நிலையில், இவரின் நியமனம் அறிவித்த பின்பு, வருகைக்கு முன்பு வாட்ஸ்அப் பே இந்தியா பிரிவின் தலைவர் வினய் சோலெட்டி ராஜினாமா செய்துள்ளார்.