இந்திய டெலிகம்யூனிகேஷன் மசோதா 2022ல் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
இப்புதிய விதிமுறைகள் கீழ் போலியான ஆவணங்களை வைத்து மொபைல் சிம் வாங்கினாலோ அல்லது போலியான ஆவணங்களை வைத்து வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் 50000 ரூபாய் அபராதம் அல்லது ஒரு வருட சிறை தண்டனை அறிவிக்கும் விதிமுறைகள் சேர்க்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் என்ன லாபம்..? யாரெல்லாம் பயன்பெறுவார்கள்..?
டெலிகாம் மசோதா
இப்புதிய மசோதாவில் அறிவிக்கப்பட்டு உள்ள அபராதம் மற்றும் தண்டனைகள் மூலம் ஆன்லைன் மோசடி மற்றும் சட்டவிரோதமான காரியங்களைத் தடுக்க முடியும். சைபர் கிரிமினல்கள் போலி ஆவணங்களை வைத்துச் சிம் கார்டு வாங்கி மோடிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இத்தகைய விதிமுறைகள் சைபர் க்ரைம்கள் எண்ணிக்கை குறையும்.
வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல்
இந்தப் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம் கார்டுகள் மூலம் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளில் உண்மையான அடையாளங்கள் மறைக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டு வருகிறது. இதைத் தடுப்பது மூலம் பல சாமானிய மக்கள் பலன் அடைவார்கள்.
இந்திய டெலிகம்யூனிகேஷன் மசோதா 2022
டெலிகாம் துறை இப்புதிய இந்திய டெலிகம்யூனிகேஷன் மசோதா 2022-ஐ மக்களின் பார்வைக்கும், கருத்து கேட்பதற்கும் வைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தொலைத்தொடர்பு பயனர்களுக்குத் தங்களை அணுகும் நபர் அல்லது நிறுவனத்தை அடையாளம் காண உதவுவதற்கு அவசியமாகும் எனக் கூறப்பட்டு உள்ளது.
மோசடிகள்
இன்று வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலி வாயிலாகப் பலர் பல வகையில் மோசடி செய்து வருகிறார்கள். குறிப்பாகச் சமீபத்தில் இந்தியாவில் நடந்த பல்வேறு கிரிப்டோ மோசடிகளுக்கு வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் ஆகியவையும் சமுக வலைத்தளமும் முக்கியக் கருவியாகச் செயல்பட்டு உள்ளது.
போலி ஆவணங்கள்
இந்த விதிமுறையின் கீழ் போலி ஆவணங்களை வைத்துள்ள டெலிகாம் வாடிக்கையாளர்களை எளிதில் நீக்குவது மட்டும் அல்லாமல் மோசடிகளைத் தவிர்க்க முடியும். இதேபோல் டெலிகாம் அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் சமீபத்தில் பல்வேறு பிரிவுகளில் நடக்கும் சைபர் கிரைம்களைத் தடுக்கப் புதிய மசோதா பெரிய அளவில் பயன்பெறும் எனத் தெரிவித்தார்.