கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்யும்படி, இந்தியாவை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டாலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் கோதுமை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் இந்தியா, உலகளவில் 2வது இடத்தில் உள்ளது.
வட மாநிலங்களில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக கோதுமை உற்பத்தியும் 4.4% சரிவினைக் கண்டுள்ளது. இதனால் உள்நாட்டில் விலை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது.
பணவீக்க அச்சம்
ஏற்கனவே உக்ரைன் ரஷ்யா பிரச்சனையால் பணவீக்கம் உச்சம் தொட்டு வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஆனால் வட்டி விகிதம் மட்டுமே பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர உதவாது. மாறாக உள்நாட்டில் வரி விகிதங்களை குறைக்கலாம். மக்கள் கையில் எளிதில் பொருட்கள் கிடைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தான் பணவீக்கத்தினை விரைவில் கட்டுக்குள் கொண்டு வர உதவும் என முன்னதாக ஒரு அறிக்கையில் நிபுணர்கள் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகள்
இப்படி பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்தியில் தான் இந்திய அரசு பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆரம்பத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியினை குறைத்துள்ளது. சமையல் எண்ணெய் மீதான வரியினை குறைத்தது. அதோடு சர்க்கரை ஏற்றுமதிக்கும் ஜூன் 1ல் இருந்து தடை விதித்துள்ளது. ஏற்கனவே கோதுமை ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விலையேற்றம்
இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி தடையால் சர்வதேச சந்தையில் கோதுமை விலையானது தாறுமாறான ஏற்றம் கண்டு வருகின்றது. ஏற்கனவே ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையால் உக்ரைனில் இருந்து செய்யப்படும் கோதுமை சப்ளை தடைபட்டுள்ளது. கோதுமை மட்டும் அல்ல பல்வேறு தானியங்கள், எண்ணெய், உலோகங்கள் என பலவற்றின் சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளது, இந்த சவாலான காலகட்டத்தில் இந்தியாவும் தடை செய்துள்ளது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பு
இதனால் சர்வதேச அளவில் கோதுமை விலை பெரியளவில் ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் ஐ எம் எஃப்பின் கோரிக்கையும் வந்துள்ளது. தற்போது இந்தியா உலக மக்களின் நலன் கருதி ஏற்றுமதி தடையினை வாபஸ் பெறுமா? அல்லது இந்தியாவின் நலன் கருதி ஏற்றுமதி தடையை தொடருமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஐஎம்எஃப் & ஜி7 நாடுகள்
ஐஎம்எஃப் மட்டும் அல்ல, ஜி7 நாடுகளும் இந்தியா ஏற்றுமதியினை தொடர வேண்டும் என கூறி வருகின்றம.
ரஷ்யாவினை தொடர்ந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், உக்ரைன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளாராக உள்ளன.
பியூஷ் கோயல் கருத்து
இதற்கிடையில் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பொருளாதார கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தற்போதைய சூழலில் கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்க முடியாது. அவ்வாறு தடையை நீக்கினால் அது கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கே பயனளிக்கும் என்றும் கூறியிருந்தார்.
என்ன செய்ய போகிறது?
இந்தியா சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை ஏற்று ஏற்ற்றுமதியினை தொடங்கினால், இந்தியாவில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் உற்பத்தியும் சரிவினைக் கண்டுள்ளது. இந்த நிலையில் பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தியாவில் பஞ்சத்திற்கு வழிவகுக்கும். இது மேற்கொண்டு இந்தியாவுக்கு பிரச்சனையாகவே மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.