சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உடன் சமீபத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்புச் சென்னையில் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்பட முடிவு செய்யப்பட்ட நிலையில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பு முழுக்க முழுக்க வணிகம் சார்ந்த சந்திப்பு எனத் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ஜோதிராதித்ய சிந்தியா
சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற முக்கிய விமான நிலையங்களின் விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுவதில் குறிப்பாகப் பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலம் கையகப்படுவதில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து ஜோதிராதித்ய சிந்தியா உடன் ஆலோசனை செய்துள்ளதாகக் கூறினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு
இதுகுறித்து விரைவில் அனுமதி அளிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்திடம் பேசுவதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளதாகவும் கூறினர் அமைச்சர் தங்கம் தென்னரசு. மேலும் சேலம் விமான நிலையம் குறித்தும் போக்குவரத்து துவங்குவது குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது.
UDAN திட்டம்
UDAN பிராந்திய விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தில் சேலம் விமான நிலையம் சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நல்ல வரவேற்பு இருந்தது, மேலும் சில பிராந்திய விமான நிறுவனங்களால் விமானச் சேவைகள் தொடங்கப்பட்டன.
சேலம் விமான நிலையம்
COVID-19 தொற்றுநோயால் ஏற்பட்ட மந்தநிலை இந்த விமான நிறுவனங்களைப் பாதித்தது. இப்பகுதியில் தொழில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், சேலம் விமான நிலையத்தில் பணிகளைத் தொடங்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த விமானம் நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததும், சேலம் பகுதியில் பொருளாதார நடவடிக்கையை அதிகரிக்கும்.
1993ல் உருவாக்கப்பட்டது
சேலம் விமான நிலையம் ஏப்ரல் 1993 இல் ரூ. 6 கோடி முதலீட்டில் சுமார் 136 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. மேலும் இந்த நிதி தொகை சேலம் பகுதியை சேர்ந்த உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இதில் சேலம் உருக்காலை மட்டும் சுமார் 49 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளது.
ஓடுபாதை
முதலில் சிறிய விமானங்களைப் பயன்படுத்தி வாயுடூட் சேவைகளுக்குத் திட்டமிடப்பட்டு 1,350 மீட்டர் ஓடுபாதையுடன் திட்டமிடப்பட்டது, பெரிய விமானங்களுக்கு இடமளிக்கும் வகையில் கூடுதலாக 600 மீட்டர் விரிவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது UDAN பிராந்திய விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தில் சேலம் விமான நிலையம் சேர்க்கப்பட்டுள்ளது.
ஓமலூர்
சேலம் விமான நிலையம் சேலம் அருகில் இருக்கும் ஓமலூர் தாலுக்காவை தேர்ந்த கமலாபுரத்தில் அமைந்துள்ளது. சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாகச் சேலம் விமான நிலையம் தமிழ்நாட்டில் ஆறாவது பரபரப்பான விமான நிலையம் ஆகும். ஓடுபாதை நீளத்தின் அடிப்படையில் இது தமிழ்நாட்டின் ஐந்தாவது பெரிய விமான நிலையமாகும்.