நாம் இன்று கஷ்டப்படுகிறோம். ஆனால் நமது குழந்தைகளும் நம்மை போல கஷ்டப்படக்கூடாது என்று என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு சமர்பணம்.
ஆரம்ப காலத்தில் வெறும் 150 ரூபாய் சம்பளம் வாங்கியவர், இன்று சுமார் 5,250 பேருக்கு சம்பளம் கொடுக்கும் தொழிலதிபராக மாறியது எப்படி? வாழ்க்கையில் எந்த மாதிரியான பின்னடைவை சந்தித்தார், யார் இவர்? என்ன தொழில் வாருங்கள் பார்க்கலாம்.
கோவையை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். மற்றவர்களை போலவே தனக்கு பின் தன் குழந்தைகளும் கஷ்டப்படகூடாது என்றும் எண்ணியவர். அதற்காக கடுமையாக உழைத்தவர். வணிகத்தில் வெற்றி பெற்றவர்.
யார் இந்த தொழிலதிபர்?
இன்று வெற்றிகரமான தொழிலதிபர் என்ற பட்டியலில் நாம் பார்க்கவிருப்பது ஜுவல் ஒன் நகைகடையின் உரிமையாளர் (Emerald Jewellery Industry Pvt Ltd) பற்றித் தான்.
ஆரம்பத்தில் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று ஆர்வத்தின் மத்தியில், அவருக்கு சீட் கிடைக்காததால் பிஎஸ்.சி கணிதத்தினை படிக்க தொடங்கினார். படித்து முடித்த பின்னர் வங்கி ஊழியராக பணபுரிய வேண்டும் என்பது பெற்றோரின் எண்ணம். ஆனால் தனது குறிக்கோளில் உறுதியாய் இருந்தவர் அதனை நோக்கி நகர்ந்துள்ளார்.
ரூ.150 சம்பளத்தில் வேலை
படிக்கும் காலத்திலேயே தனது தந்தை ஏழ்மையாக இருந்தார், நாமும் ஏழ்மையாக இருக்கின்றோம். எனது குழந்தைகளும் என்னை போல ஏழ்மையாக இருக்க கூடாது என்று எண்ணியதாக கூறுகின்றார். அதன் பிறகே நகைக் கடைக்கு 150 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சென்றுள்ளார். எனினும் அவரின் வணிக எண்ணம் மட்டும் ஆழ்மனதில் இருந்து வெளியேறவில்லை.
சேம்பிள்ஸ் செய்ய கூட காசில்லை
அதன் பிறகு பஜாரில் முகவரி கேட்ட வழிபோக்கர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தின் பேரில் கூறிய வார்த்தைகளை நம்பி, அகமதாபாத் செல்ல முடிவு எடுத்துள்ளார். ஆனால் அங்கு செல்ல மாதிரிகளை சேம்பிள்ஸ் எடுத்து செல்ல கூட, பணமில்லாத நிலையில் தாயார் மற்றும் நெருங்கிய நண்பர்களின் உதவியுடன் அதனையும் சிறிய அளவில் வெற்றிகரமாக செய்துள்ளார்.
பல ஆர்டர்கள்
இந்த சேம்பிள்ஸை பார்த்த பின்னர், அந்த வழிப்போக்கர் பல ஆர்டர்களை கொடுத்துள்ளார். அதனை செய்த பின்னர், அவரின் நண்பர் உறவினர் மூலம், பல ஆர்டர்களை கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் கைவினை நகைகளை மட்டுமே செய்தவர், அதன் பின்னர் பெரும் சவால்களை மேற்கொண்டதாக கூறுகிறார்.
நகை உற்பத்தியில் டெக்னாலஜி
அதன் பிறகு 1992ல் நகை உற்பத்தியில் டெக்னாலஜியை புகுத்த நினைத்தவர், ஆரம்பத்தில் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார். எனினும் மனம் தளராமல் ஹைபாலிஷ் நகைகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். அது வெற்றிகரமாக போகவே, அதன் பின்னர் புதிய புதிய டெக்னாலஜிக்களை பயன்படுத்தி, நகைத்துறையில் இல்லாத அம்சங்களை பயன்படுத்தியபோது தனது நல்ல வெற்றி கிடைத்ததாகவும் கூறுகின்றார். உண்மையில் இன்று வெற்றிகரமாக தொழிலதிபதிர்களாக வலம் வருபவர்கள், ஏதேனும் புதிய அம்சங்களை உட்புகுத்தியவர்களே.
தடைகள் எல்லாம் படிக்கல்
புதுமைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்ததாக கூறுகின்றார். அதன் பிறகு அடுத்தடுத்த படியாக ஏறியவர், உண்மையை பேச வேண்டும், பொய் சொல்லகூடாது, தவறு நடந்தால் அதனை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு, தடைகளை படிக்கல்லாக மாற்றி, அயராது உழைத்ததே தனது வெற்றிக்கு வழிவகுத்ததாகவும், அதோடு தனது நேர்மையும், முயற்சியும் முக்கிய காரணம் என்று கூறுகிறார்.
வானமே எல்லை முடிவு இல்லை
தூய்மை, புதுமை, மாடல் என்பதோடு, அடுத்தடுத்து பல நாடுகளுக்கும் சென்று பல புதிய தொழில் நுட்பங்களையும் புகுத்தி வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறார். நகைத் துறையில் உள்ள அத்துணை தொழில்நுட்பங்களும் தங்களிடம் இருப்பதாக கூறும் ஸ்ரீனிவாஸ், வானமே எல்லை, அதற்கு முடிவு இல்லை, தனது உயிர்மூச்சு இருக்கும் வரையில் புதிய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேன்மேலும் வளர்ச்சி காணுவோம் என்று கூறுகிறார்.
அடுத்த இலக்கு
தனி மனிதாய் ஆரம்பித்த தொழில், இன்று 5,250 தொழிலாளர்களுக்கு பணிபுரியும் ஒரு நிறுவனமாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் நகை உற்பத்தியாளராக இருந்தவர், இன்று ஜுவல் ஒன் என்ற நகைகடையையும் நடத்தி வருகின்றார். இது தமிழகத்தில் மற்றும் ஆந்திராவில் கிளைகள் உள்ளது. மேன்மேலும் இதன் கிளைகளை அதிகரிக்க வேண்டும் என்பதே தனது அடுத்த இலக்கு என்று கூறகிறார் ஸ்ரீனிவாஸ், உண்மையில் வாழ்க்கையில் அனைவருக்கும் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் சிறு சிறு தோல்விகளுக்கும் துவண்டு போய்விடுகின்றார். அப்படி நினைப்பவர்களுக்கு இந்த பதிவு சமர்பணம்.