கொரோனா முதல், இரண்டாம் அலைக்குப் பிறகு ரயில்கள் அதிகளவில் ரத்தாகியுள்ளது என்றால் அது 2022 மே மாதம்தான்.
கோடைக்காலம் என்றால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மின் வெட்டுக்கள் பற்றிய செய்திகள் அதிகளவில் வரும். அதற்குத் தமிழ்நாடும் விதி விலக்கல்ல. இந்த மின்சார தட்டுப்பாட்டுக்கு பொதுவாக மாநில அரசுகளே பொறுப்பேற்று வந்த நிலையில் முதன் முறையாக இந்த முறை மத்திய அரசு தேவையான நிலக்கரி வழங்காததே அதற்குக் காரணம் என்று கூறப்பட்டு வந்தது.
ரயில்கள் ரத்து
அதை உறுதி செய்யும் விதமாக மத்திய அரசு ஏப்ரல் 29-ம் தேதி 657 மெயில் மற்றும் பயணிகள் ரயிலை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டது. இந்த ரயில்களை ரத்து செய்வதன் மூலம் நாடு முழுவதும் நிலக்கரியை வேகமாகக் கொண்டு செல்ல முடியும் என மத்திய அரசு திட்டமிட்டது.
பயணிகள் தவிப்பு
ரயில்கள் பெரும்பாலும் அதிக பயன்பாடு இல்லாத வழித்தடங்களில் தான் ரத்து செய்யப்பட்டது என கூறப்பட்டாலும் பல இடங்களில் அந்த ரயில்களை நம்பியிருந்தவர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர்.
பலன்
தற்போது இந்த ரயில்கள் ரத்து செய்ததற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் பெரும்பாலான இடங்களிலிருந்து வந்த நிலக்கரி பற்றாக்குறை நீங்கியதாகவும் மத்திய அரசிடம் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
ரயில் பெட்டிகள்
ரயில்களை ரத்து செய்த பிறகு நிலக்கரி எடுத்துச் செல்லும் பெட்டிகளின் எண்ணிக்கை 425 வரை உயர்த்தி தினமும் 1.62 மில்லியன் டன் நிலக்கரியை மத்திய அரசு அனல் மின் நிலையங்களுக்குக் கொண்டு செல்ல உதவியுள்ளது.
வரும் நாட்களில் இந்த தினசரி நிலக்கரி ரயில் பெட்டி எண்ணிக்கைகளை 533 ஆக உயர்த்த உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இயல்பு நிலை எப்போது?
இப்போது நிலக்கரி பற்றாக்குறை ஓர் அளவிற்குச் சீரான நிலையில், மே 8-ம் தேதி முதல் வடக்கு ரயில்வே வழித்தடங்களிலும், மே 24 முதல் தென் கிழக்கு மத்திய ரயில்வே வழித்தடங்களிலும் ரயில்கள் ரத்து நீக்கப்பட்டு போக்குவரத்து சீராகும் என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள 80 முக்கியமான அனல் மின் நிலையங்களில் 45-ல் இப்போது நிலக்கரி குறைவாக உள்ளது. மே-10 தேதிக்குள் அது சரி செய்ய இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது.
கோல் இந்தியா
இந்தியாவின் உள்நாட்டு நிலக்கரி தேவையில் 80 சதவீதத்தைக் கோல் இந்தியா பூர்த்தி செய்து வந்தது. ஏப்ரல் மாதம் இதுவரையில் இல்லாத அளவிற்குக் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தியை அதிகரித்துள்ளது. மே மாதமும் அதுவே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலம்
கோடைக்காலத்தில் மின் விசிறி, ஏசி, குளிர்சாதனப் பெட்டி பயன்பாடு அதிகரிப்பதால், மின்சார தேவை அதிகரித்து நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதைப் பூர்த்தி செய்ய முடியாமல் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் திணறியது குறிப்பிடத்தக்கது.