உலகம் முழுவதும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் ஓடி வரும் நிலையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மொத்த கார்களில் இரண்டில் ஒன்றைத் தயாரிக்கும் மாருதி சுசூகி இன்னும் எலக்ட்ரிக் கார் உற்பத்தி குறித்து எவ்விதமான முடிவையும் உறுதியாக எடுக்கவில்லை.
மாருதி சுசூகி திட்டம் தான் என்ன..? ஏன் இன்னும் எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு எவ்விதமான முக்கியத் துவமும் அளிக்காமல் உள்ளது..? மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா கூறும் பதில் என்ன தெரியுமா..?
எலக்ட்ரிக் வாகனங்கள்
உலகிலேயே அதிகப்படியான கிரீன் ஹவுஸ் வாயுவை வெளியேற்றும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் நிலையில் இந்த நிலையை மாற்ற எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே தீர்வு அல்ல, குறைந்த பட்சம் உடனடி தீர்வாக இருக்காது என்பதை மாருதி சுசூகி நம்புகிறது.
மாருதி சுசூகி
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 75 சதவீதம் கிரீன் ஹவுஸ் வாயுவை உருவாக்கும் மோசமான நிலக்கரி மூலம் உருவாக்கப்படும் நிலையில் எல்க்ட்ரிக் கார்களைக் காட்டிலும் கிளீனர் எரிபொருள் கொண்டு இயங்கும் கார்களை உருவாக்க மேண்டும் என மாருதி சுசூகி தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார்.
ஆர்.சி.பார்கவா
இதனாலேயே மாருதி சுசூகி தற்போது ஹைப்ரிட் தொழில்நுட்பம், இயற்கை எரிவாயு, பயோ எரிபொருள் ஆகியவற்றில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்வதில் ஈடுப்பட்டு உள்ளது. இந்தியாவில் கிரீன் எனர்ஜி ஆதிக்கம் செலுத்தும் போது தான் எலக்ட்ரிக் கார்கள் சரியாக இருக்கும், அதுவரை மாற்று எரிபொருளில் இயங்கும் கார்கள் தான் இந்தியாவுக்குச் சரியாக இருக்கும் எனப் பார்கவா கூறியுள்ளார்.
வோக்ஸ்வேகன்
ஆனால் இதேவேளையில் டெஸ்லா நிறுவனத்தை ஓரம்கட்ட உலகின் 2வது பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வேகன் அதிகப்படியான முதலீட்டில் எலக்ட்ரிக் கார்களைத் தயாரித்துள்ளது. டெஸ்லா மீட் செய்ய 2024ஆம் ஆண்டை இலக்காக வைத்துள்ளது வோக்ஸ்வேகன்.
டோயோட்டா
உலகிலேயே அதிகக் கார்களை விற்பனை செய்யும் டோயோட்டா நிறுவனமும் எலக்ட்ரிக் கார்களை அதிகளவில் தயாரிக்கத் திட்டமிட்டுத் தற்போது ஹைப்ரிட் கார்களை முக்கியத் திட்டமாகக் கையில் எடுத்துள்ளது. இதே பார்மூலா-வை தான் மாருதி சுசூகி கையில் எடுத்துள்ளது.
நெட் ஜீரோ இலக்கு
சீனா, அமெரிக்கா ஒப்பிடுகையில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பும், விற்பனையும் குறைவாக இருந்தாலும், பிரதமர் மோடி இந்தியா விரைவில் நெட் ஜீரோ இலக்கை 2070 ஆம் ஆண்டுக்குள் அடையும் எனத் தெரிவித்துள்ளார்.