கொரோனா தொற்றுக் காரணமாகக் கடந்த ஒரு வருடத்திற்கும் அதிகமாக உலகம் முழுவதும் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்கும் காரணத்தால் டேட்டா பயன்பாடு மற்றும் டெலிகாம் சேவைகளின் பயன்பாடு பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இதனால் டெலிகாம் நிறுவனங்கள் வழக்கத்தை விடவும் அதிகமான வருமானத்தையும் வர்த்தகத்தையும் பெற்று வரும் நிலையில், இந்திய டெலிகாம் நிறுவனங்கள் தனது டெலிகாம் தேவை கட்டணத்தைக் கட்டாயம் உயர்த்தியாக வேண்டும் என அடம் பிடித்து வருகிறது.
இதற்கு என்ன காரணம்..?!
இந்திய டெலிகாம் சந்தை
இந்திய டெலிகாம் சந்தையில் தற்போது வர்த்தகப் போட்டி அனைத்தும் டாப் 3 நிறுவனங்கள் மத்தியில் மட்டுமே இருக்கிறது என்பதால், எந்த முடிவை எடுத்தாலும் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து எடுக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு உடன் உள்ளது. இல்லையெனில் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக அளவில் சரிவு ஏற்படும் நிலையில் இந்திய டெலிகாம் சந்தை உள்ளது.
ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ
பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் தற்போது இந்திய டெலிகாம் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பார்தி ஏர்டெல் நிறுவனம் டெலிகாம் கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனப் பல மாதங்களாகச் சக டெலிகாம் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. துவக்கத்தில் ஏர்டெல் நிறுவன முடிவுக்கு யாரும் விருப்பம் தெரிவிக்காத காரணத்தால் மௌனம் காத்தது.
வோடபோன் ஐடியா AGR நிலுவை
இதன் பின்பு வோடபோன் ஐடியா நிறுவனம் தனது AGR நிலுவை கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பதற்காக முதலீட்டை திரட்ட துவங்கியது. வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான வோடபோன் மற்றும் பல முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயாராக இருந்தாலும், அனைவரின் கோரிக்கையும் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது தான்.
வோடபோன் ஐடியா
கட்டணத்தை உயர்த்தினால் வோடபோன் ஐடியா நிறுவனம் அதிகளவிலான வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் இழக்க நேரிடம் என்பதால் தான் கட்டணத்தை உயர்த்தாமல் தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்க முயற்சி செய்து வந்தது.
நிறுவனம் திவால்
ஆனால் AGR கட்டணம் செலுத்தக் காலம் நெருங்கிவிட்டதாலும், முதலீட்டை திரட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இல்லையெனில் வோடபோன் ஐடியா நிறுவனம் திவால் ஆகிவிடும். இதனால் தற்போது ஏர்டெல் உடன் சேர்ந்துள்ளது வோடபோன் இந்தியா.
இணைந்தது..
பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து சில நாட்களுக்கு முன்பு தனது போஸ்ட்பெய்டு கட்டணத்தை உயர்த்தியது. குறிப்பாகக் கார்ப்ரேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் அடிப்படை கட்டணத்தை உயர்த்தியது. இது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் கோபப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கட்டணங்கள் உயர்வு
இதுமட்டும் அல்லாமல் ப்ரீபெய்டு திட்டங்களில் துவக்க (Base or entry pack) திட்டமான 49 ரூபாய் திட்டத்தை நீக்கியுள்ளது. இதன் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளரின் அடுத்த துவக்கத் திட்டமாக 79 ரூபாய் திட்டம் தான் உள்ளது, இது முந்தைய திட்டத்தை விட 60 சதவீதம் காஸ்ட்லி. இதேபோன்ற நடவடிக்கையைத் தான் வோடபோன் ஐடியாவும் எடுத்துள்ளது.
ARPU அளவு
இந்த நடவடிக்கையின் மூலம் இரு நிறுவனங்களின் ARPU வருமானத்தின் அளவு அதிகரிக்கும் என நம்புகிறது. இதோடு அடுத்த 5 முதல் 6 மாதத்தில் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டத்தின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. ஆனால் அது கட்டாயம் முடியாது எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ இன்னமும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் இருக்கும் காரணத்தால் ஏர்டெல் மற்றும் வோடபோன் 4ஜி சேவை கட்டணத்தை உயர்த்தினால் கட்டாயம் பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள் கூட்டம் ஜியோ பக்கம் சென்று விடும்.
வருமானம் அதிகரிக்கும்
தற்போது ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா அறிவித்துள்ள கட்டண உயர்வு மூலம் இந்நிறுவனங்களின் ARPU அளவு 1 முதல் 2 சதவீதம் வரையில் அதிகரிக்கும். மார்ச் காலாண்டில் ஏர்டெல் ARPU அளவு 145 ரூபாய், வோடபோன் ஐடியா ARPU அளவு 107 ரூபாய்.
ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள்
மேலும் இரு நிறுவனங்களின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்கும் வருமானத்தின் அளவு 3 முதல் 6 சதவீதம் அதிகரிக்கும், இதேபோல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் வருமானம் 1 சதவீதம் வரையில் அதிகரிக்கும்.
ஜியோ - கூகிள் போன் அறிமுகம்
ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பெருமளவிலான வருமானம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து தான் கிடைக்கிறது. இதற்கும் வேட்டு வைக்க ஜியோ நிறுவனம் கூகிள் உடன் சேர்ந்து தயாரித்துள்ள மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் வருகிற விநாயகர் சதுர்த்தித் தினத்தில் அறிமுகம் செய்துள்ளது.
2ஜி வாடிக்கையாளர்கள்
இந்த அறிமுகத்தின் மூலம் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 2ஜி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் பாதிக்கப்படும். இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் வருமானம் பெரிய அளவில் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ பிஸ்னஸ்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்குத் தற்போது டெலிகாம் வாடிக்கையாளர்கள் மூலம் டெலிகாம் வருவாய் பெரிய அளவில் வந்தாலும், ரீடைல், ஷாப்பிங் மற்றும் இதர டிஜிட்டல் சேவை மூலம் கூடுதலான வருமானம் கிடைக்கும் காரணத்தால். கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை இல்லை.
வர்த்தக வலிமை
ஜியோ-வின் வர்த்தக வலிமை ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனத்திடம் இல்லாத காரணத்தால் இந்த நிலை உருவாகியுள்ளது. இந்திய டெலிகாம் சந்தையில் ARPU வருமானத்தில் 10 ரூபாய் அதிகரித்தால் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு 320 மில்லியன் டாலர், ஏர்டெல்-க்கு 400 மில்லியன் டாலர், ஜியோவுக்கு 500 மில்லியன் டாலர் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
5ஜி சேவை
இவை அனைத்தையும் தாண்டி இந்தியச் சந்தையில் அடுத்த சில மாதத்தில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக 5ஜி அலைக்கற்றை-க்கான ஏலமும் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இது அனைத்து நிறுவனங்களின் கடன் சுமையை அதிகரித்துவிடும்.
கடைசியில் பாதிக்கப்படுவது மக்கள் தான்.