ஆர்பிஐ நவம்பர் 1-ம் தேதி முதல் மொத்த விற்பனை துறைக்கான டிஜிட்டல் ரூபாய் சேவையை சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்துள்ளது.
இந்த டிஜிட்டல் ரூபாய் சேவையை பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியம் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எப்.சி வங்கி, யெஸ் வங்கி, கோடாக் மஹிந்தரா வங்கி, ஐடிஎப்சி வங்கி மற்றும் ஹெச்.எஸ்.பி.சி வங்கி நிறுவனங்கள் வழங்க முடிவெடுத்துள்ளன.
ஆர்பிஐ சென்ற மாதம் சென்ட்ரல் பாங்க் டிஜிட்டல் கரன்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் விரைவில் இ-ரூபாய் பைலட் சேவை அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருந்தது. இப்போது நவம்பர் 1 முதல் டிஜிட்டல் ரூபாய் சேவை தொடங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? அது எப்படி கிரிப்டோரன்சியிலிருந்து வேறுபடுகிறது என இங்கு விளக்கமாக பார்க்கலாம்.
டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன?
டிஜிட்டல் ரூபாய் பற்றி புரிந்துகொள்வது கடினமானது ஒன்றும் அல்ல. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் டிஜிட்டல் ரூபாய் அல்லது சென்ட்ரல் பாங்க் டிஜிட்டல் ரூபாய் என்பது தினமும் நாம் பயன்படுத்தும் ரொக்கப் பணம் போன்றதுதான்.
மேலும் எளிமையாக கூற வெண்டும் என்றால் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை யூபிஐ அல்லது பிற டிஜிட்டல் பண பரிவர்த்தனை போன்றதுதான். ஆர்பிஐ வெளியிடும் இந்த டிஜிட்டல் ரூபாய்க்கும் ரொக்கப் பணத்திற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
டிஜிட்டல் ரூபாயை எங்கு எல்லாம் பயன்படுத்தலாம்?
இப்போதைக்கும் டிஜிட்டல் ரூபாய் மொத்த பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் போன்றவை முதற்கட்டமாக இந்த டிஜிட்டல் ரூபாய் சேவை மூலம் பணம் பரிவர்த்தனை செய்வார்கள். இது அரசாங்கப் பத்திரங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் தீர்வுத் தொகையாகப் பயன்படுத்தப்படும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் ரூபாய் சில்லறை பணம் பரிமாற்றச் சேவைக்கு எப்போது வரும்?
விரைவில் இரண்டாம் கட்டமாக டிஜிட்டல் ரூபாய் சேவையை சில்லறை பணம் பரிமாற்றத்திற்கும் அறிமுகம் செய்யப்படும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் ரூபாய் பேலன்ஸ் செக் செய்வது எப்படி?
எப்போதும் போல டிஜிட்டல் வாலெட் சேவைகள், ஆன்லைன் வங்கி சேவைகள் மூலமாக டிஜிட்டல் ரூபாய் இருப்பை செக் செய்யலாம். இது எப்போதும் போல வங்கி கணக்குடன் தான் இணைக்கப்படும். 1 டிஜிட்டல் ரூபாய் 1 ரூபாய் நாணயத்துக்குச் சமமானது. டிஜிட்டல் ரூபாய் ரொக்கப் பணத்துக்கு சமமானது தான் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
டிஜிட்டல் ரூபாய் - என்ன பயன்?
டிஜிட்டல் ரூபாய் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் உங்கள் பாக்கெட்டில் உள்ள பணம் தொலைந்து போகாது. எளிமையாக பணம் பரிவர்த்தனை செய்யலாம். கள்ளப் பணம் என்ற பிரச்சனை இல்லை.
என்ன வித்தியாசம்?
டிஜிட்டல் ரூபாய் முன்பு சொன்னது போலவே ரொக்கப் பணத்துக்கு இணையாது. கிரிப்டோகரன்சி என்பது டிஜிட்டல் பணமாகும், இது பரிமாற்ற வழிமுறையாக செயல்பட உருவாக்கப்பட்டது. கிரிப்டோகரன்ஸி ஒரு தொகுப்பு அல்லது முன்னரே தீர்மானிக்கப்பட்ட மதிப்பு அல்லது ஆதரவு இல்லை. ஆனால் டிஜிட்டல் ரூபாய் மையப்படுத்தப்பட்டு மத்திய வங்கியால் வழங்கப்படுகிறது. கிரிப்டோகரன்சிகள் அனுமதி இல்லாத திறந்த நெட்வொர்க்கைப் பயன்படுத்துகின்றன.