நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமத்தினை சேர்ந்த டாடா சன்ஸ் நிறுவனம், நாம் அனைவரும் அறிந்த மிகப்பெரிய நிறுவனமாகும்.
டாடா சன்ஸ் நிறுவனம் உணவுக்கு போடும் உப்பில் இருந்து கம்ப்யூட்டர் மென்பொருள் வரை என பல்வேறு பொருட்கள் உற்பத்தி மற்றும் சேவையில் கொடிகட்டி பறந்து வருகிறது. இதன் தலைவராக இருந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா 2012ல் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், அதன் தலைவராக சபோர்ஜி பலோன்ஜி குழுமத்தைச் சேர்ந்த சைரஸ் மிஸ்திரி கடந்த 2012ல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனினும் இந்த நிறுவனத்தில் இருந்து மீண்டும் கடந்த 2016ம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
NCLT-யிடம் முறையீடு
இதற்கு காரணம் மிஸ்திரி வசம் இருக்கும் 18.37% பங்குகள் தான் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் தான் கடந்த 2016ல் டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, என் சி எல் டியிடம் முறையீடு செய்தார் மிஸ்திரி. அந்த சமயத்தில் தீர்ப்பாயம் மிஸ்திரியை நீக்கியது செல்லாது என அறிவித்தது. ஆனால் அவர் மீண்டும் தலைவராக விரும்பவில்லை என கூறினார்.
தனக்கு நீதி வேண்டும்
டாடா குழுமத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி, தனக்கு சாதகமான தீர்ப்பு வந்த போதிலும், பதவி தனக்கு வேண்டாம் என்றும், தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும், அதனால் நீதி கிடைக்க வேண்டும் என்றும் மட்டுமே தான் வழக்கு தொடர்ந்ததாகவும், மற்றபடி தனக்கு பதவியில் அமரும் எண்ணம் துளியும் இல்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டாடா குழுமம் எதிர்ப்பு
பதவி வேண்டாம் என்றாலும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம்பெற விரும்பினார். ஆனால் டாடா குழுமமோ அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு என்சிஎல்டியின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்று இந்த சட்ட போராட்டத்திற்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
முற்றுப்புள்ளி வைத்த உச்ச நீதிமன்றம்
அதாவது டாடா சன்ஸ் தலைவராக சைரஸ் மிஸ்திரி மீண்டும் வர முடியாது என்று ரத்தன் டாடாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இது ரத்தன் டாடாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதெல்லாம் சரி டாடா குழுமம் எதற்காக சைரஸ் மிஸ்திரியை நீக்கியது. டாடா குழுமம் மிஸ்திரி விரும்பிய திசையில் செல்லவில்லை என்ற உணர்வு இருந்து வந்ததாகவும், டாடா குழுவில் மிஸ்தியிரியின் கட்டுப்பாடு வளர்வதும் மற்றொரு கவலையாக பார்க்கப்பட்டது எனவும், மூத்த நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
டாடாவின் தேர்வு
அதோடு டாடாவின் உடனடி தேர்வாக சந்திரசேகரன் இருந்தார். இவர் பிப்ரவரி 21, 2017 அன்று தலைவராக நியமிக்கப்பட்டத்தில் இருந்து, டாடா குழும நிறுவனங்களின் நிலுவையில் உள்ள சிக்கல்களை தீர்க்கவும், செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனலிஸ்டிக்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் மூலம், வணிகங்களைத் மீட்டெடுக்கவும் முயற்சித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications