அனைத்துத் தரப்பு மக்களும் அதிகம் எதிர்பார்த்திருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று துவங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற ஒரு முக்கியக் காரணம் உண்டு. இக்கூட்டத்தில் மத்திய அரசு சமர்ப்பித்து உள்ள 26 மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டு உள்ளது.
இந்த 26 மசோதாக்கள் கிட்டதட்ட பெரும்பாலான மக்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு உள்ளது, இதனாலேயே அதிகப்படியாக முக்கியத்துவத்தை இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடர் பெற்றுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்
இன்று துவங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கூட்டம் வருகிற டிசம்பர் 23ஆம் தேதி வரையில் நடக்கிறது. முதல் நாளில் விவசாயிகளுக்கான 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுவது மட்டும் அல்லாமல் விவசாயிகளின் பல மாத போராட்டத்திற்கு இன்று பதில் கிடைக்க உள்ளது.
3 வேளாண் சட்டங்கள்
3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதைத் தாண்டி குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் வலியுறுத்தத் திட்டமிட்டு உள்ளது. இதற்காக விவாதமும், விவசாயிகளுக்கான மின்சாரம் குறித்த மசோதா குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
கிரிப்டோ மசோதா
மத்திய அரசு இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பல தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்யவும், இதே தொடர்ந்து இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் கரன்சி உருவாக்கும் திட்டம் குறித்த ரிசர்வ் வங்கியின் கட்டமைப்பு அடங்கிய மசோதா-வை The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021 என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ
இதோடு இந்தியாவில் கிரிப்டோகரன்சி முதலீட்டு சந்தையை ஒழுங்கு முறைப்படுத்துவது, தகவல் பாதுகாப்பு, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தலைவர்களுக்கு 5 ஆண்டுப் பணிக்காலம் நீட்டிப்பு குறித்த மசோதா மற்றும் முடிவுகளையும் இன்று எடுக்கப்பட உள்ளது.
விவசாயிகள் போராட்டம்
மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவசாயப் போராட்டத்தின் போது உயிர் இழந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடாகப் பணத்தை அளிக்க மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாகவும், இந்தியாவில் பெரும் சர்ச்சை உருவாக்கிய பெகாசஸ் குறித்தும் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளது.
முக்கியத்துவம்
இதனால் இந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் சாமானிய ஏழை விவசாயி முதல் பெரும் பதவிகளில் இருப்பவர்கள், முதலீட்டாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் சார்ந்து இருக்கும் காரணத்தாலும் எதிர் வரும் 5 மாநில தேர்தலைச் சார்ந்து இருக்கும் காரணத்தாலும் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.