பெங்களூரு: கொரோனாவினால் உலகம் முழுக்க நிறுவனங்கள் தற்போது செயலில் இருக்கும் திட்டங்கள் கூட, இப்படியே தொடருமா? அல்லது பாதியில் நின்று போகுமா? என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றன.
இன்னும் பல நிறுவனங்கள் போதிய புராஜக்ட் திட்டங்கள் இல்லாததால் பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து வருகின்றன.
ஏனெனில் கொரோனாவின் மையமாக கருதப்பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதன் காரணமாக அங்குள்ள நிறுவனங்கள் செலவினைக் குறைக்க, ஐடி துறைக்காக செலவிடும் செலவுகளையும் குறைக்க நேரிடலாம் என்றும் கருத்தப்படுகிறது.
புதிய ஒப்பந்தம்
இதற்கிடையில் தான் தற்போது ஜெர்மனியை அடிப்படையாக கொண்ட எரிசக்தி நிறுவனமான E.ON நிறுவனத்திடமிருந்து, பல ஆண்டு உள்கட்டமைப்பு நவீனமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் உருமாற்ற ஒப்பந்தத்தினை பெற்றுள்ளது விப்ரோ. இது கொரோனாவினால் பின்னடைவினை சந்தித்துள்ள இந்த நிறுவனத்திற்கு பெரும் உதவிகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கிளவுட் மாடலாக மாற்றும்
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட முக்கிய தொழில் நுட்ப நிறுவனமான விப்ரோ, E.ON- இன் மரபு தரவு மைய செயல்பாடுகளை அதன் எல்லைக்குட்பட்ட நிறுவன கட்டமைப்பையும், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் தளமான Wipro HOLMES மேம்படுத்துவதன் மூலம் கலப்பின கிளவுட் மாடலாக மாற்றும் என்றும் கூறியுள்ளது.
போட்டியாளர்களுடன் போட்டியிட இது உதவும்
இது E.ON- இன் வணிக பார்வைக்கு ஒரு உத்வேகத்தினை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. இது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப போட்டியாளர்களுடன் போட்டியிட உதவும். இந்த கிளவுட் தொழில்நுட்பமானது, டிஜிட்டல் மயமாக்கலின் ஒரு முக்கிய அங்கமாகும். எங்கள் கிளவுட் சேவை பங்காளியாக விப்ரோ எங்களுடன் வருவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று E.ON-னின் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி மார்கஸ் ஷாப்பர் தெரிவித்துள்ளார்.
பங்கு விலை
கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் புதிய திட்டங்கள் கிடைக்குமா? கிடைக்காதா என்ற நிலையில் விப்ரோவுக்கு இப்படி ஒரு திட்டம் கிடைத்துள்ளது ஒரு நல்ல விஷயமே. எனினும் இந்த திட்டமானது அதன் பங்கு விலைக்கு கைகொடுக்கவில்லை என்றே கூறலாம். ஏனெனில் அதன் பங்கு விலையானது 2.50 ரூபாய் குறைந்து, 218.05 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.