இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்புக்காகப் பெரிய தொகையை முதலீடு செய்து தொழிற்சாலையை அமைத்துள்ள தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் தற்போது தனது உற்பத்தி பணிகளை விரிவாக்கம் செய்வதற்காகப் புதிதாக ஆப்டிமஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது.
இப்புதிய கூட்டணி மூலம் புதிய முதலீடுகள் கிடைப்பது மட்டும் அல்லாமல், புதிதாக வேலைவாய்ப்பு, புதிய ஏற்றுமத் ஆர்டர் எனப் பல நன்மைகள் இந்தியச் சந்தைக்கு உருவாக உள்ளது.
ஆப்டிமஸ் எலக்ட்ரானிக்ஸ்
ஆப்டிமஸ் எலக்ட்ரானிக்ஸ் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் இந்தியாவில் ஸ்மார்ட்போன், ஐடி வன்பொருள் மற்றும் ஆட்டோமோட்டிவ் EV பொருட்களைத் தயாரிக்கத் தைவான் நாட்டின் விஸ்ட்ரான் கார்ப் நிறுவனத்தின் இந்திய கிளையான விஸ்திரான் இன்போகாம் இந்தியா உடன் கூட்டணி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
டேப்லெட், லேப்டாப் உற்பத்தி
இந்தக் கூட்டணியில் ஸ்மார்ட்போன் மட்டும் அல்லாமல் டேப்லெட், லேப்டாப், வியரபிள்ஸ், ஹியரபிள்ஸ், டெலிகாம் பொருட்கள், IOT கருவிகள், ஸ்மார்ட் கருவிகள் மற்றும் ஆட்டோமோட்டிவ் EV பொருட்களைத் தயாரிக்கவும், இந்தியாவில் பெரிய அளவில் இல்லாத எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் டிசைன் துறையிலும் இக்கூட்டணி பணியாற்ற உள்ளது மிகவும் முக்கியமானது.
டிசைன் சேவை
இந்தியாவில் உற்பத்தியில் மட்டுமே இருந்த விஸ்ட்ரான், ஆப்டிமஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடனான கூட்டணியில் டிசைன் சேவைகளை இந்தியாவில் அளிக்கத் தைவான் நிறுவனம் முடிவு செய்துள்ளது, இந்திய சந்தையின் மீது விஸ்ட்ரான் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. டிசைன் சேவை என்பது என்ன பெரியதா என்று கேட்பவர்களுக்கு..
இந்தியாவிற்கு நன்மை
இந்தியா மலிவான உற்பத்தி தளத்தை மட்டுமே கொண்டு இருந்தால் பெரிய அளவில் வளர்ச்சி அடைய முடியாது. ஆனால் டிசைன் சேவைகள் மூலம் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரிப்பில் இந்தியா அடுத்தகட்டத்திற்குச் செல்ல முடியும். இந்தியா ஏற்கனவே சேவை துறையில் முன்னோடியாக இருக்கும் நிலையில் விஸ்ட்ரான் போன்ற பெரும் நிறுவனங்கள் இந்தியாவில் டிசைன் சேவை தளத்தை அமைத்துள்ளது இந்தியாவிற்கு நன்மை.
200 மில்லியன் டாலர் முதலீடு
இப்புதிய உற்பத்தி மற்றும் டிசைன் சேவை திட்டத்திற்காக விஸ்ட்ரான் அடுத்த 3 முதல் 5 வருடத்தில் தோராயமாக 200 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஆப்டிமஸ் எலக்ட்ரானிக்ஸ் - விஸ்ட்ரான் கூட்டணி மூலம் அடுத்த 5 வருடத்திற்கு ஆப்டிமஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்குச் சுமார் 38,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஸ்ட்ரான்- ஆப்டிமஸ் எலக்ட்ரானிக்ஸ் கூட்டணி
மேலும் விஸ்ட்ரான் கூட்டணிக்காக ஆப்டிமஸ் எலக்ட்ரானிக்ஸ் டெல்லியின் வெளிப்பகுதியில் இருக்கும் 2 முக்கியத் தொழிற்சாலையில் புதிதாக 11,000 ஊழியர்களைப் பணியில் சேர்க்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் தற்போது வெறும் 300 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
PLI திட்டம்
இந்தியாவில் விஸ்ட்ரான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உற்பத்தி தளத்தை அமைக்க PLI திட்டம் பெரிய அளவில் உதவுகிறது. இதன் காரணமாகத் தற்போது இந்தியாவில் இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் வேக வேகமாக உற்பத்தி தளத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளைச் செய்து வருகிறது. இதில் விஸ்ட்ரான் நிறுவனமும் ஒன்று.
விஸ்ட்ரான் இந்தியா பயணம்
விஸ்ட்ரான் 2015ல் ஆப்டிமஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சிறு பங்குகளைக் கைப்பற்றி இந்தியாவிற்குள் நுழைந்தது. இதன் பின்பு 2017ல் பெங்களூரில் ஐபோன் தயாரிப்புக்காகத் தொழிற்சாலையை அமைத்தது. இந்தத் தொழிற்சாலை துவங்கி சில மாதத்திலேயே ஊழியர்களுக்கும், நிர்வாகத்திற்கும் பிரச்சனை வெடித்த காரணத்தால் சில வாரங்கள் மூடப்பட்டது. அதன்பின்பு உற்பத்தி பணிகள் வேகமாக முன்னேறியுள்ளது.
முக்கிய வாடிக்கையாளர்கள்
இந்நிலையில் 2015க்கு பின்பு ஆப்டிமஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் புதிய கூட்டணி அமைத்து தனது உற்பத்தியை மிகப்பெரிய அளவில் அதிகரிக்க முடிவு செய்துள்ளது விஸ்ட்ரான். தற்போது விஸ்ட்ரான் ஆப்பிள், டெல், சியோமி, ஏசர், இன்டெல் நிறுவனங்களுக்குப் பல்வேறு கருவிகளைத் தயாரித்து உலகம் முழுவதும் விநியோகம் செய்து வருகிறது.