கொரோனா வைரஸால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரத்துக்கு தான் முதலிடம்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் படி மகாராஷ்டிரத்தில் சுமார் 690 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருக்கிறதாம்.
அதிலும் குறிப்பாக இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் தான் அதிக மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கிறதாம்.
மருத்துவமனை
பொதுவாக உடல் நலம் சரி இல்லை என்றால், மருத்துவமனைகளுக்குச் செல்வோம். மருத்துவர்களும் செவிலியர்களும் தான் நம் உடலை பரிசோதித்து, நமக்கான மருந்து மாத்திரைகளை எல்லாம் கொடுத்து நம்மை குணப்படுத்துவார்கள். ஆனால் மும்பையில் ஒரு மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் & செவிலியர்களுக்கே கணிசமான அளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
Wockhardt
மும்பை நகரத்தில் இருக்கும் Wockhardt மருத்துவமனையில் வேலை செய்யும் 3 மருத்துவர்கள் மற்றும் 26 செவிலியர்களுக்கே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து இருக்கிறார்கள். மேற்கொண்டு 270 நோயாளிகள் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை செய்து கொண்டு இருக்கிறார்களாம்.
சீல்
இந்த மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு முழுமையாக சோதனை செய்து, கொரோனா இருக்கிறதா இல்லையா என உறுதி செய்யப்படும் வரை, யாரும் வெளியே போகவோ அல்லது புதிதாக உள்ளே வரவோ முடியாதாம். இந்த மருத்துவமனை இருக்கும் பகுதியை containment zone-ஆக அறிவித்து இருக்கிறார்களாம்.
விசாரணை
அதோடு, இந்த மருத்துவமனையில் எப்படி திடீரென கொரோனா வைரஸ் அதிக நபர்களுக்கு பரவியது என விசாரணையும் நடத்தச் சொல்லி இருக்கிறார்களாம். அதோடு வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருக்கிறார்களாம். மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு மருத்துவமனை கேண்டீன் தான் உணவு வழங்குவார்களாம்.
பங்கு விலை சரியலாம்
கொரோனா பாதிப்பால் ஏற்கனவே பங்குச் சந்தைகள் சரிந்து கொண்டு இருக்கிறது. இதற்கு Wockhardt நிறுவனம் மட்டும் விதி விலக்கல்ல. ஆனால் இப்போது ஒரு முழு மருத்துவமனையே மூடப்பட்டு இருக்கிறது, அதும் அதிகம் காசு வரும் மும்பை பகுதியில் ஒரு மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கிறது என்றால் இன்னும் பங்கு விலை சரிய நிறைய வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
கடந்த கால விலை மாற்றம்
இந்த செய்தியை பங்குச் சந்தை முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை நாளை காலை வர்த்தகத்தில் பார்த்துவிடலாம். கடந்த 12-02-2020 அன்று 405 ரூபாய் என்கிற உச்ச விலையில் வர்த்தகமானது Wockhardt. அதற்குப் பின் கடந்த மார்ச் 24 அன்று குறைந்தபட்சமாக 147 ரூபாயைத் தொட்டது. அதற்கு அடுத்த சில வர்த்தக நாட்களில் ஓரளவுக்கு வர்த்தகம் தேறி 185 ரூபாய்க்கு ஏப்ரல் 03, 2020 அன்று வர்த்தகம் நிறைவடைந்தது.