இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் இந்த வொர்க் ப்ரம் ஹோம் பிரச்சனை பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
சுமார் 2.5 வருடம் மக்கள் வீட்டில் இருந்தே பணியாற்றிச் சொகுசு கண்ட நிலையில் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்தாலும் வர மறுக்கின்றனர். குறிப்பாகச் சொந்த ஊரில் இருந்து நகரங்களுக்கு வந்தாலும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர மறுக்கின்றனர்.
குறிப்பாக ஐடி துறையில் இந்தப் பிரச்சனை மிகப்பெரியதாக இருக்கும் நிலையில் ஐடி நிறுவனங்கள் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
ஐடி நிறுவனங்கள்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்களை அலுவலகத்திற்குத் தொடர்ந்து அழைத்து வந்தாலும் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், ஊழியர்களுக்கு என்ன தான் பிரச்சனை என ஆய்வு செய்யத் துவங்கியது.
பெரு நிறுவனங்கள்
பொதுவாகப் பெரு நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர மறுக்கும் முக்கியமான காரணம் போக்குவரத்தும் நேரமும், போக்குவரத்து செலவுகளும் தான் பெரும் பிரச்சனையாக உள்ளது.
பெங்களூர், மும்பை, சென்னை
உதாரணமாகப் பெங்களூர், மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்கள் அனைத்தும் வீட்டில் இருந்து அலுவலகம் செல்ல குறைந்து 1 முதல் 1.30 மணிநேரம் ஆகும், அலுவலகத்திற்குப் பக்கத்திலேயே வீடு இருந்தால் வாடகை அதிகம் என்பதால் பெரும்பாலும் ஊழியர்கள் தொலைவில் தான் வீடுகளை வைத்துள்ளனர்.
போக்குவரத்து
இந்த நிலையில் போக்குவரத்து நேரமும், போக்குவரத்து செலவுகளும் ஊழியர்களுக்குப் பெரும் தலைவலியாக இருக்கும் நிலையிலும், ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க வேண்டும் என்ற முயற்சியில் முன்னணி ஐடி நிறுவனங்கள் சில பெரு நகரங்களில் ஓரே இடத்தில் பெரிய அலுவலகத்தை வைத்து இயங்குவதை விடப் பல இடத்தில் சிறிய அலுவலகங்களை வைத்து இயங்குவது மூலம் இந்தப் பிரச்சனை எளிதாகக் களைய முடியும் என நம்புகிறது.
அக்சென்சர், Persistent Systems
இந்த நிலையில் அக்சென்சர், Persistent Systems ஆகியவை தற்போது பெங்களூர் போன்ற நகரங்களில் பெரிய அலுவலகத்தை வைத்திருந்தாலும், பல சிறிய அலுவலகத்தை அமைத்துள்ளது. இது முழுக்க முழுக்க ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
2ஆம் தர நகரங்கள்
இந்தக் கட்டமைப்பு ஆரம்பக் கட்டத்தில் அதிகப்படியான செலவுகளை ஈர்த்தாலும், நீண்ட கால அடிப்படையில் பலன் அளிக்கும். இதேபோல் அக்சென்சர் சமீபத்தில் 2ஆம் தர நகரங்களில் இருக்கும் திறன்மிக்க ஊழியர்களை ஈர்க்கும் விதமாக ஜெய்ப்பூர், கோயம்புத்தூர் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் அலுவலகத்தைத் திறந்துள்ளது.
Persistent Systems நிறுவனம்
இதேபோல் Persistent Systems பெரு நகரங்களில் சில சிறிய அலுவலகங்களை அமைத்துள்ளது, அதாவது பெங்களூர், புனே ஆகிய நகரங்களில் ஏற்கனவே பிரம்மாண்டமான அலுவலகத்தை வைத்திருந்தாலும் இரு நகரங்களில் தலா 3 சிறிய அலுவலங்களை அமைத்துள்ளது.
Co-Working நிறுவனங்கள்
இந்தக் கட்டமைப்பு வெற்றி அடையும் பட்சத்தில் இந்தியாவில் Co-Working Space நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கிறது. குறிப்பாக இப்பிரிவில் ஏற்கனவே இருக்கும் வீவொர்க் போன்ற நிறுவனங்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.