டெல்லி: தற்போது உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயினால், மில்லியன் கணக்கானோர் தங்களது வேலையினை இழந்து தவித்து வருகின்றனர்.
சில லட்சம் பேர் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். கொரோனா நெருக்கடியின் காரணமாக இன்னும் சில லட்சம் பேர் தங்களது வேலையினை இழக்கும் தருவாயில் உள்ளனர். ஏனெனில் நிறுவனங்கள் செலவினங்களை குறைக்கும் பொருட்டு, பணி நீக்கம் என்னும் அஸ்திரத்தினை கையில் எடுத்து வருகின்றன.
ஆனால் இந்த நெருக்கடியான காலத்திலும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவது, மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக naukri தரவுகள் கூறுகின்றன. இந்தியாவில் வீட்டில் இருந்து பணி புரியும் வேலையானது 300% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.எனினும் இது எந்த துறையில் அதிகரித்துள்ளது என்ற விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்ட நிலையில், பணியமர்த்தல், பணி நீக்கம் என்பது மாறி மாறி வருகின்றன. இதற்கிடையில் பல துறைகளில் வீட்டில் இருந்து பணி புரிவது அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் தரவுகள் கூறுகின்றன.
அதோடு ஏப்ரல் மாதத்தில் இருந்து வீட்டில் இருந்து மக்கள் வேலை செய்யும் வேலைகளை தேடுகின்றனர். கடந்த ஐந்து மாதத்தில் நாக்குரி. காம் தேடலில் அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகளில் work from home என்பதும் தான் முதலிடத்தில் உள்ளது. இது முன்பை விட 7 மடங்கு அதிகரித்துள்ளது என்று பல தகவல்கள் வெளியாகின.
நாக்குரி.காமின் தலைமை வணிக அதிகாரியான பவன் கோயலின் கூற்றுப்படி, கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் இருந்து பணிபுரிவது அதிகரித்துள்ளது. ஆனால் உலகளாவிய தொற்று நோயினால் இது பல மடங்கு அதிகரித்துள்ளது.
தற்போது கொரோனாவின் காரணமாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய கூறி வருகின்றன. குறிப்பாக பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த ஆண்டு இறுதி வரை கூட வீட்டில் இருந்து பணி புரிய கூறியுள்ளன. இன்னும் சில சர்வதேச நிறுவனங்கள் எப்போதும் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய கூறலாம் என ஆலோசித்து வருவதாகவும் கூறின. இதற்கிடையில் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தங்களது வேலையினை இழந்த ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய இணையத்தில் தேடுவதும் அதிகரித்துள்ளது.