இந்தியாவில் கொரோனா தொற்று மூலம் அதிகளவில் பாதிப்பை அடைந்துள்ள MSME நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சுமார் 500 மில்லியன் டாலர் அளவிலான தொகை கொண்ட கடன் உதவி திட்டத்திற்கு உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய வர்த்தகச் சந்தையின் முதுகெலும்பு என்றால் அது MSME நிறுவனங்கள் தான், இந்தக் கொரோனா தொற்று மூலம் பல லட்சம் சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் வர்த்தகத்தை இழந்து, வருமானத்தை இழந்து நிறுவனத்தை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு ஏற்கனவே MSME நிறுவனங்களுக்கு உதவும் வகையில் 3.4 பில்லியன் டாலர் அளவிலான தொகை ஒதுக்கீடு செய்துள்ள வேளையில், தற்போது உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ள 500 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவி திட்டம் நாட்டில் இருக்கும் 555,000 MSME நிறுவனங்கள் பலன் பெரும்.
இதற்கு முன் உலக வங்கி ஜூலை 2020ல் அவசர நிதியுதவியாகச் சுமார் 750மில்லியன் டாலர் அளவிலான தொகையை அளித்த நிலையில், தற்போது புதிதாக 2வது முறை நிதியுதவியாக 500 மில்லியன் டாலர் அளவிலான தொகையை அளித்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 5.8 கோடி MSME நிறுவனங்கள் அதில் சுமார் 40 சதவீத நிறுவனங்கள் நிலையான நிதி உதவிகள் பெற முடியாமல் உள்ளது. இந்தியாவின் மொத்த ஜிடிபி-யில் 30 சதவீதமும், 40 சதவீத ஏற்றுமதியும் MSME நிறுவனங்களை மட்டுமே நம்பியுள்ளது.
இந்தியா தற்போது பெற்றுள்ள 500 மில்லியன் டாலர் கடனாக IBRD வங்கியில் இருந்து பெற்றுள்ளது. இந்தத் தொகையை 18.5 வருடத்திற்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.