சமீபத்திய காலமாக சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் அடிக்கடி வருமான வரி சோதனை நடப்பதும், வரி ஏய்ப்பு செய்திருப்பதும் பல மோசடிகள் அம்பலமாகி வருகின்றன.
இதற்கிடையில் சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டான ஜியோமி, இந்தியாவில் தனது செயல்பாட்டினை நிறுத்த உள்ளதாக அரசல் புரசலாக கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவில் இருந்து வெளியேறி, இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் தனது செயல்பாட்டினை தொடரலாம் என தகவல்கள் வெளியாகின.
ஜியோமி மறுப்பு
ஆனால் ஆதாரமற்ற இத்தகைய கருத்துகளை மறுத்துள்ள ஜியோமி, பாகிஸ்தானுக்கு செல்வதாக கூறும் சவுத் ஆசியா இன்டெக்ஸின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
உண்மையில் என்ன தான் நடக்கிறது? உண்மை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
South Asia Index
South Asia Index தனது ட்விட்டர் பதிவில், சீனாவின் மொபைல் பிராண்டான ஜியோமி இந்தியாவில் தனது செயல்பாட்டினை நிறுத்தி விட்டு, பாகிஸ்தானில் தொடரலாம். இது இந்திய அரசு ஜியோமியின் 676 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை முடக்கிய நிலையில் முடிவெடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஜியோமியின் கருத்து என்ன?
ஜியோமி பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்ற South Asia Index-ன் கருத்து தவறானது. இது ஆதாரமற்றது என தெரிவித்துள்ளது.
ஜியோமி கடந்த 2014ல் இந்தியாவில் நுழைந்தது. ஒரு வருடத்திற்குள் எங்களது மேக் இன் இந்தியா திட்டத்தினை தொடங்கினோம். எங்களின் 99% ஸ்மார்ட்போன்களும், 100% டிவிகளும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.
நடவடிக்கை எடுப்போம்
எங்களின் நல்ல பெயரை மீட்க நாங்கள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என தெரிவித்துள்ளது.
அதேசமயம் ஜியோமியின் 676 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகள் மீதான முடக்கத்தினை நீக்க கர்நாடகா நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த நடவடிக்கையால், அதன் முக்கிய சந்தையில் அதன் செயல்பாடுகளை நிறுத்தியது என ஜியோமி தெரிவித்துள்ளது.
அமலாக்க இயக்குனரகத்தின் கடும் நடவடிக்கை
கடந்த ஏப்ரல் மாதம் ஜியோமி நிறுவனம் சட்ட விரோதமான பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி, அதன் 676 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டது.
ஜியோமி நிறுவனம் ராயல்டி என்ற பெயரில் இவ்வளவு பெரிய தொகையினை மோசடி செய்திருப்பதும் அம்பலமானது.
மோசடியாக பரிவர்த்தனை
மேலும், ஜியோமி இந்தியா நிறுவனம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பிய போது, வங்கிகளிடமும் தவறான தகவல்களை கூறியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த நிலையில் தான் அமலாக்கத்துறை சொத்துக்களை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.