இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாக விளக்கும் சீனாவின் சியோமி நிறுவனம் தனது இந்திய வர்த்தகத்தில் லாபத்தை அதிகரிப்பதற்காகக் குறைந்த மதிப்பீட்டில், எண்ணிக்கையில் கணக்கு காட்டியுள்ளது. இதன் மூலம் அதிகளவிலான வரி ஏய்ப்பு செய்துள்ளது இந்நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் மத்திய வருவாய்த் துறை அதிகாரிகள் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் அலுவலகங்கள், கூட்டணி உற்பத்தியாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தியது. இதில் பல முன்னணி நிறுவனங்களும் வரி ஏய்ப்பு மற்றும் மோசடிகள் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சியோமி டெக்னாலஜி
சியோமி டெக்னாலஜி இந்தியா நிறுவனம் 653 கோடி ரூபாய் வரையிலான சுங்க வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரகம் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சிக்கிய ஆவணங்கள்
சியோமி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சியோமி இந்தியா நிறுவனம், குவால்காம் யுஎஸ்ஏ மற்றும் பெய்ஜிங் சியோமி மொபைல் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்படி காப்புரிமை தொகை மற்றும் உரிமம் கட்டணம் செலுத்தியதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தக் கட்டணம் செலுத்தியது தொடர்பாகச் சியோமி இந்தியா நிறுவன இயக்குனர்கள் அளித்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
பரிமாற்ற மதிப்பு
இந்தக் கட்டணங்கள், சியோமி இந்தியா நிறுவனம் இறக்குமதி செய்த பொருட்களின் பரிமாற்ற மதிப்பில் சேர்க்கப்படவில்லை. இது சுங்க வரி சட்டத்தின் 14வது பிரிவின் படி விதிமுறை மீறல். இதன் மூலம் சியோமி இந்தியா நிறுவனம் சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
எம்.ஐ பிராண்ட்
சியோமி இந்தியா நிறுவனம் இறக்குமதி செய்த எம்.ஐ பிராண்ட் செல்போன்கள் அல்லது பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செல்போன்களைச் சியோமி இந்தியா நிறுவனம் விற்பனை செய்தது விசாரணையில் தெரிந்தது.
ரூ. 653 கோடி சுங்க வரி ஏய்ப்பு
விசாரணை முடிவுக்குப்பின், கடந்த 01.04.2017 முதல் 30.06.2020 வரை, சியோமி இந்தியா நிறுவனம் ரூ. 653 கோடி சுங்க வரி ஏய்ப்புச் செய்ததாக வருவாய் புலனாய்வுத்துறை இயக்குநரகம் நோட்டீஸ்கள் வழங்கின. MI பிராண்ட் மொபைல் போன்கள் இந்தியாவில் விற்பனை செய்வதற்காகப் பிரத்தியேகமாக ஒப்பந்த உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்டுச் சியோமி விற்பனை செய்ய வேண்டும் என்பது தான் ஒப்பந்தம். ஆனால் இதை மீறியுள்ளது சியோமி.
சோதனை
டிசம்பர் மாதம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஓப்போ, ஒன்பிளஸ், சியோமி, உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மற்றும் ரைசிங் ஸ்டார், டிக்சான் போன்ற இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.