டெல்லி: வந்தாரை வாழவைக்கும் இந்தியா என்பது உண்மையில் ஒருவகையில் உண்மை தான். ஏனெனில் இந்தியவிற்கு வரவிருக்கும் நிறுவனங்களாகட்டும், நபர்களாகட்டும் கைகூப்பி வரவேற்பதே இந்தியர்களின் பண்பாடு. நாகரிகம்.
ஆனால் இதே மற்ற நாடுகளில் இந்தியர்களின் நிலைமை சற்று யோசிக்க வேண்டிய விஷயமாகத் தான் இருக்கிறது.
அந்த வகையில் இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் இந்திய நிறுவனங்களை விட, சீனா தான் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் சீனா தான் ஆதிக்கம்
எனினும் சீனாவைப் பொறுத்தவரையில் தான் எங்கு சென்றாலும் அங்கு அதன் ஆதீக்கத்தை நிலை நாட்டி வருகிறது. அது எப்படியொரு வர்த்தகமாக இருந்தாலும் சரி, அது காலில் அணியும் செருப்பாக இருந்தாலும் சரி, இல்லையேல் வீடுகளை சுத்தம் செய்யும் துடைப்பமாக இருந்தாலும் சரி, நாம் உபயோகிக்கும் செல்போன் முதல் நாப்கின் வரை அனைத்தும் மிக மலிவான விலையில், யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத விலையில் கொடுப்பதே அவர்களின் சாதனை.
விலை குறைவு
இதற்கு முக்கிய உதாரணம் தான். ஸ்மார்ட்போன். ஏனெனில் ஆப்பிள் போனில் உள்ள அத்துணை வசதிகளையும் உள்ள ஸ்மார்ட்போன் வெறும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை தான். இதே ஆப்பிள் போன்கள் அதே வசதியுடன் வாங்கும் போது 50 ஆயிரம் வரையில் கொடுக்க வேண்டியுள்ளது. இந்தியர்களின் இத்தகையதொரு பலவீனத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது சீனா. அந்த வகையில் தான் இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் சீனா முதலிடத்தில் உள்ளது.
ஜியோமி முதலிடம்
அதிலும் சீனாவின் ஜியோமி போன் தான் கடந்த ஆண்டு, இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டில் இது சாதகமா என்று தான் தெறியவில்லை. 2020ம் ஆண்டில் இது வேறுபட்ட வெற்றியாளர்கள் இந்த இடத்தை பிடிக்க கூடும் என்றும் இத்துறை வல்லுனர்கள் நம்புகின்றனர். கடந்த 2019ம் ஆண்டின் முதல் காலாண்டின் முடிவில் ஜியோமி 30.6 சதவிகித பங்கினை கொண்டிருந்தது. இது தென் கொரியாவின் சாம்சங்கை விட மிகவும் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது இடத்தில் சாம்சங்
உலக அளவில் தனக்கென ஒரு தனி இடத்தினை பெற்றிருந்த சாம்சங் நிறுவனம் கூட, சீனாவிடம் தோற்றுபோனது உண்மையே. ஜியோமிக்கு அடுத்தாற்போல் இந்தியாவில் நிலைகொண்டுள்ள ஸ்மார்ட்போன் தான் சாம்சங் தான். இது வெறும் 22.3 சதவிகித பங்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது என்ற தகவலை இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விற்பனை வீழ்ச்சி
எனினும் 2019ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இதன் விற்பனை 27.1 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதே போல சாம்சங் நிறுவனமும் 18.9 ஆக குறைந்துள்ளது. ஆனால் இதற்கு மாறாக பிபிகே நிறுவனம்( ஓப்போ, விவோ, ரியல்மீ, ஒன்பிளஸ்) நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்குகளை வகித்து வருகிறது. இது குறித்து ஜியோமி கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் முதல் மூன்று காலாண்டுகளில் ஜியோமி தனது மூன்று சதவிகித பங்குகளை இழந்து வருகிறது என்றும் ஐஐஜி தரவுகள் கூறுகிறது.
பிபிகே விற்பனை ஏற்றம்
பிபிகே குழும வர்த்தகமானது நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. இது கடந்த 2019ம் நிதியாண்டில் முதல் காலாண்டில் 6 சதவிகித கண்டும். இதே மூன்றாவது காலாண்டில் 14.3 சதவிகித விற்பனையும் பதிவு செய்துள்ளது. இதில் விவோ சந்தை மதிப்பானது முதல் காலாண்டில் 13 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், இதே கடந்த மூன்றாவது காலாண்டில் 15.2 சதவிகிதமாக ஏற்றம் கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஓப்போ எப்படி?
இந்த விற்பனை பதிவில் ஓப்போ முதல் காலாண்டில் 7.6 சதவிகிதமாக இருந்த நிலையில், மூன்றாவது காலாண்டில் 11.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படி எனினும் அடிப்படை ஸ்மார்ட்போன் விற்பனையில் ஜியோமி வலுவாக உள்ளதாகவும் (5000 - 10,000 ருபாய் வரையிலான போன்கள்), இதே 10,000 முதல் 25,000 ரூபாய் வரையிலான ஸ்மார்ட்போன்கள் இரண்டாவது இடத்திலும் உள்ளதாகவும் (ஓப்போ, விவோ உள்ளிட்ட போன்கள்) உள்ளதாகவும், ஸ்மார்ட்போன் சந்தையில் 44 சதவிகிதம் பங்கு வகிப்பதாகவும் கூறப்படுகிறது.
சாம்சங் மீண்டும் முதன்மையாக வரலாம்?
ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் இடத்தை வகிக்கும் ஜியோமி, முதலிடத்தை இழக்கும் பட்சத்தில் அது காலியான இடமாகவே உள்ளது. எனினும் இந்த இடத்தை சாங்சங் நிரப்பலாம் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர். ஐடிசி அறிக்கையின் படி, ஸ்மார்ட்போன் சந்தை 2019ன் படி, மூன்றாம் காலாண்டில் 46.6 மில்லியன் யூனிட்களைப் பதிவு செய்துள்ளது. இதே முதல் காலாண்டோடு ஒப்பிடும்போது 26.5% வளர்ச்சி கண்டுள்ளதாகவும், ஆண்டு 9.3 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.