டெல்லி: இந்தியா என்கிற நாடு கடந்த 1990-களில் இருந்து உலக வரைபடத்தில் அதிக கவனம் ஈர்த்த நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.
காரணம் ஒன்றே ஒன்று தான். வாடிக்கையாளர்கள். இந்தியாவில் இருக்கும் மக்கள் அனைவரும் வாடிக்கையாளராக மாறி இருக்கிறார்கள்.
உலகமயமாக்ள் தாராளமயமாக்கள், தனியார்மயமாக்கள் நடவடிக்கைகளால், இந்தியர்கள் பலரும் நல்ல வேலைக்குச் சென்றார்கள். நிறைய வேலை வாய்ப்புகள் உருவானதால், மக்கள் கையில் நிறைய பணம் புழங்கியது. மக்களாக இருந்தவர்கள் எல்லாம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களாக மாறிவிட்டார்கள்.
விளைவு
இன்று உலகின் பல நிறுவனங்களுக்கு இந்தியா தான் பிரதான சந்தை. ஃபேஸ்புக், வாட்ஸப், டிக் டாக், கூகுள் என பல நிறுவனங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதெல்லாம் போக, ஸ்மார்ட்ஃபோன் சந்தையை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் உலகின் மிகப் பெரிய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் இந்தியாவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
இந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தை
இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் யார் முதலிடத்தைப் பிடிப்பது என கடந்த பல வருடங்களாக போட்டி நடந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த பல வருடங்களாக தென் கொரியாவின் சாம்சங் தான் இந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தையின் தாதாவாக வலம் வந்து கொண்டு இருந்தது.
சந்தை கணக்கு
2019-ம் ஆண்டில், இந்தியாவில் 152.5 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனை ஆனதாம். எனவே தற்போது உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்ஃபோன் சந்தையாக உருவெடுத்து இருக்கிறது. இந்தியாவில் சராசரியாக 163 அமெரிக்க டாலர் (சுமாராக 11,500 ரூபாய்) கொடுத்து ஸ்மார்ட்ஃபோனை வாங்குகிறார்களாம்.
200 - 500 டாலர்
இந்தியாவில் 200 டாலருக்கு மேல் (14,000 ரூபாய்) ஆனால் 500 டாலருக்குள் (35,000 ரூபாய்க்குள்) விற்கப்படும் ஸ்மார்ட்ஃபோன்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த 2019-ல் சுமார் 55 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். இந்தியாவில் விற்பனை ஆகும் மொத்த ஸ்மார்ட்ஃபோனில் 19.3 சதவிகித ஸ்மார்ட்ஃபோன்கள் இந்த விலை வரம்பில் இருப்பவைகள் தானாம்.
200 - 500-ல் யார் தாதா
இந்த விலைப் வரம்பில், விவோ தனிப் பெரும் டானாக வலம் அந்து கொண்டிருக்கிறதாம். இந்த விலை வரம்பு சந்தையில் 28 சதவிகித சந்தையை விவோ சோலோவாக வைத்திருக்கிறதாம். விவோவைத் தொடர்ந்து ஒன் பிளஸ் நிறுவனம் 20 % சந்தையை வளைத்துப் பிடித்து இருக்கிறார்களாம்.
500 டாலருக்கு மேல்
பிரீமியம் செக்மெண்ட் என்று அழைக்கப்படும் 500 டாலருக்கு மேல் (35,000 ரூபாய்க்கு மேல்) விலை இருக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள் சந்தையில், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் 47 சதவிகித சந்தையைப் பிடித்து பாஷாவாக இருக்கிறார்களாம். ஆக இதுவரை சாம்சங் எந்த ஸ்மார்ட்ஃபோன் பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கவில்லை.
ஒட்டு மொத்த சந்தை
இந்தியாவின் ஒட்டு மொத்த ஸ்மார்ட்ஃபோன் சந்தையில், கடந்த டிசம்பர் 2019 காலாண்டில் சுமார் 28 சதவிகித சந்தையை சியாமி (Xiaomi) தனியாகப் பிடித்து இருக்கிறதாம். ஒட்டு மொத்த ஸ்மார்ட்ஃபோன் பிரிவில், சாம்சங் நிறுவனம் 20 சதவிகித சந்தையை மட்டும் பிடித்து இரண்டாவது இடத்தில் இருப்பதாக CAnalysis என்கிற நிறுவனம் சொல்லி இருக்கிறது.
முதல் முறை
இப்படி சாம்சங், இந்தியாவின் ஒட்டுமொத்த ஸ்மார்ட்ஃபோன் மற்றும் ஃப்யூச்சர் போன் சந்தையில் முதலிடத்தை பறி கொடுப்பது இதுவே முதல் முறையாம். இனி சாம்சங் என்ன செய்யப் போகிறது. காலப் போக்கில் மைக்ரோமேக்ஸ் போல காணாமல் போகுமா அல்லது சியாமிக்கு இணையாக இறங்கி எதிர்த்துப் போராடுமா..? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.